சனி, 2 டிசம்பர், 2017

தீபத்திருநாள் - வாழ்க்கையின் வசீகர தினம் !




காலங்கள் எவ்வளவு அழகானவை

            இந்த மனதிற்கு காலத்தில் இறந்த காலம் எதிர்காலம் எல்லாம் இல்லை அதற்கு எப்போதும் வசந்த காலத்தின் மீதுதான் விருப்பம் போல ! அதை மட்டுமே அது .மிக பத்திரமாக வாழ்வின் பல அழகாக சேமித்து வைத்து இருக்கிறது பாருங்களேன் !
                                                                                    

              அப்படிபட்ட என் வாழ்வில் நான் இன்றும் என்னை இந்த உலகில் மயக்கும் தினங்களாக கொண்டாடுவது  தீபத்திருநாளும் , மார்கழிப் பூஜைக் காலை வேளையும்தான். 

      திண்டுக்கல்லில் நண்பர்கள் யாரையும் அழைத்துக்கொள்ளாமல் நான் நகர் வலம் வரும் ஒரே நாள் திருக்கார்த்திகைத் தினத்தன்றுதான்.சேர்ந்து போனால் அதற்குப் பல அரத்தங்கள் வந்து விடுவதும் ஒரு காரணம்.அதை விட வசீகரமான காரணம் .தனித்துத் திரியும் போது சில விசயங்கள் உள்ளுக்குள் பொங்கி வழியும்.ஆமாம் தீபத்திருநாளன்று மாலை திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றும் நாளன்று வீட்டில் அம்மாவுக்கு உதவியால் மண் தீப சுட்டிகளைக் காலையிலிருந்து ஊரவைத்து வெளியே எடுத்து உலரவைத்தால்தான் சுட்டிகள் எண்ணை அதிகம் குடிக்காது என்பதால் அப்படி வழக்கம்.பிறகு திரியிட்டு எண்ணை வார்த்து தயார் செய்துகொள்வேன் .

          அம்மா அற்புதமாகக் கோளம் போடுவார்கள் .அதிலும் தேர்கோளம் பிரசித்தம். நல்ல நாட்களில் மட்டும் எந்தக்கோளம் போட வேண்டும் என்பது என் சாய்ஸ். அதே போல அம்மா போட்ட கோளத்தில் எந்த வர்ணப்பொடி இட்டு அழகு படுத்துவதும் எனது உரிமை .அம்மா சாமி படத்தின் முன்னும் ,வாசல் படி முன்னும் கடைசியாகப் பிரமாண்டக் கோளம், தெருவாசல் முன்னும் போடுவார்கள் . ஒற்றைப்படை எண்ணிக்கையில் மொத்தமாக எடுத்துக்கொண்டு , தீபங்களை வீட்டு வாசல் படிகள் இரு பக்கம் தொடங்கி , நீர்த்தொட்டி , காம்பவுண்ட் சுவர் என வரிசை கட்டி அழகு பார்த்து பார்த்து வைப்பேன் .சில இடங்களில் மட்டும் சுட்டிகளில் அடியில் எண்ணை வழிந்தால் பாதுகாப்பிற்காக அட்டை வைப்பது வழக்கம். தெரு வாசல் பிரமாண்டக் கோளத்தின் மையத்தில் சின்ன முக்காலி போட்டு அதன் மீது கேரளாவிலிருந்து வாங்கி வந்த ஐந்து முகப் பித்தளை விளக்குகள் வைத்து அதைச் சுற்றி பூ வடிவத்தில் ஏதாவது ஒரு அழகில் சுட்டிகளை வைப்பேன் .அம்மா அன்று மறுப்பெதுவும் சொல்ல மாட்டர்கள்.அவன் இஷ்டம் என்பார்கள் . 

      திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றியவுடன்,நாங்கள் வீட்டில் தீபமிடத்தொடங்கிவிடுவோம் , சகல தீபமும் மொட்டு மொட்டாய் மலர்வது போல அந்தக் காற்றில்  மெல்லியதால் ஒரு மஞ்சள் ,சிவப்பு ஆடையணிந்த பெண் அசைந்தாடுவது போல ரம்மியமாக இருக்கும் .வீட்டின் எல்லாத் தீபமும் எற்றிவிட்டு ,சாமி பூஜை செய்துவிட்டு வாசல் வரை தூபம் காட்டி விட்டுச் சூடம் ஏற்றி வீட்டுக் கார்த்திகை அரங்கேற்றம் முடிந்துவிடும்.அதற்குப் பிறகு ... 



நகர் உலா.

         இது எனக்குப் பதினேழுவயதிருக்கும் போது வந்த பழக்கம் . எங்குமே நண்பர்கள் இல்லாமல் வீட்டை விட்டுச் செல்லாத நான் அன்று மட்டும் நண்பர்கள் இல்லாமல் செல்வதற்குக் காரணம் சேர்ந்து செல்லும் போது காட்சிகளின் கோணம் மாறிப்போகலாம்.பார்ப்பவர்கள் மனதில் வேறு ஒரு நோக்கமாக மாறி எதார்த்தம் திசைமாறி விடும் என்ற பயமே காரணம் .என் நண்பர்களுக்கு ரசிக்கும் என் மனம் தனித்து இருப்பதையே விரும்பும் என்று புரிந்துகொள்வார்கள் . வீட்டுத் தீபம் ஏற்றி விட்டு மெல்ல என் தெருவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டின் முன் உள்ள கோளத்தையும் ,அதன் விளக்குகளையும் ரசிக்கக் கிளம்பி விடுவேன் .இன்னொன்றும் புரிந்திருக்கும் அந்தச் சமயத்தில் அந்த நாளில் ஏனோ எல்லாப் பெண்களும் மிக அழகாகத்தெரிவார்கள் .பல வீட்டில் தீபாவளியன்றே இதற்கும் சேர்த்து புது ஆடை எடுத்திருப்பார்கள் .அதனால் அந்தப் பட்டுப் புடவைகள் சரசரக்கப் பெண்கள் தீபமிடுவதும் ,தீபமிட்ட வீட்டில் ஜன்னல் ஓரங்களில் தீபத்தின் ஒளியில் மிளிரும் வெளிச்சச் சிதறல் முகத்தில் பட்டுத் தெறிக்க நின்று வாசலை நோக்கி நிற்கும் போது எல்லாப் பெண்களுமே தேவியின் ரூபமாய் தெய்வீகமாய்த் தெரிவார்கள் .அது ஒரு மனம் பூராவும் தீராத அழகை நிரப்பும்.சில வீட்டில் தீபாவளியின் மிச்ச பட்டாசு முனுமுணுக்கும்.

          எங்கள் தெருக்களைச் சுற்றித் தொடங்கும் உலா அப்படியே சொசைட்டி தெரு,அக்ராஹரம்,ஹவுசிங்போர்டு எனக் கால்கள் போய்கொண்டே இருக்கும் .எனக்குத்தெரிந்து அன்று மட்டும் கால் ஓய்வைத்தேடாது.சுமார் இரண்டு மணி நேரமாவது கண்களும் மனசும் தீபத்தின் சுடர்களைப் பறித்து மனதுக்குள் நிரப்பி விட்டு வீடு திரும்பி விடுவேன்.அன்று பலரும் திண்டுக்கல் மலைக்கோட்டை மேலே ஏறி சொக்கப்பானைக் கொளுத்திச் சுழற்றுவது மிக அழக்காக வெகு தூரமத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் .அது பொதுவாகப் பழைய சைக்கிள் டயர்கள் .துணிகளை எண்ணையில் நனைத்துக் குச்சி அல்லது கயிற்றில் கட்டுச் சுழற்றுவார்கள் .வேடிக்கைப் பார்த்து விட்டு வீட்டில் எரிந்து முடிந்த விளக்குகளைப் பூக்கள் வைத்துக் கையமர்த்தத் தொடங்கிவிடுவேன்...


சுமார் எட்டு மணிக்கும் மேல் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு அமர்ந்தால் , கவிதை மார்கழிப்பனியாய்க் கொட்டும் ...




வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அசல் ஓட்டுனர் உரிமமும் போலி மக்கள் நலனும் !




ஓவியாவைத் திருமணம் செய்து கொள்வீர்களாஎன்பதற்கு ஆரவ் என்ன சொல்லப் போகிறார் ?

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசுத் தன்னுடைய கட்சிப் பெரும்பான்மையை எப்படிக் காத்துக் கொள்ளப் போகிறது ?

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஏன் விலக்கப்படுகிறார் ? இன்ன பிற கவலை இந்தியாவைச் சூழந்து இருக்கும் போது,

          தமிழகரசு வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது ( ஆனால் சந்து சந்துக்கும் சீருடை அணிந்த காவல் துறை இருக்கும் ). என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் நீங்கள் செல்லும் முக்கியச் சாலைகள் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்து விபத்துக்கள் நடந்துஉங்கள் வண்டியிலோ ஆம்புலன்ஸ் வாகனத்தில் வீடு போய்ச் சேர்ந்தாலோ திருப்பூர் அவினாசிச் சாலைகளில் ஆயிரம் அடி இடைவெளிக்கு மூன்று சிக்னலில் காத்து இருக்கையில் உங்களுக்கு அதில் முன் நிற்கும் வாகனம் எவ்வளவு புகையில் கருகினாலோ புஷ்பாத் தியேட்டர்த் துவங்கி RTO அலுவலகம் வரை மற்றும் பழைய பேருந்து நிலையம் முதல் வீரபாண்டி வரை உள்ள பிரபல உணவகங்களின் வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு இருந்தாலோஆட்சியே மாறினாலும் இந்தா முடித்து விடுவோம் என்று கட்டிக்கொண்டே.......இருக்கும் பாலங்களாலும் இன்ன பிற சாலை ஆக்கிரமிப்புகள்முக்கியச் சாலைகளை ஒட்டிய கோவில் கூட்டங்கள் ,எந்த ஒரு வேக விதிகளுக்கும் உட்படாத விர் விர்... வாகனத் தொந்திரவுகள் போன்ற இத்தியாதி இத்தியாதிப் பிரச்சனையால் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை எதுவும் இல்லாமல் போனாலும் (எதுவும் மாற்ற மாட்டோம் ).


        ஆனால் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் உரிமம் எடுத்து வண்டி வாங்கி அதில் ISI முத்திரை உயிர்கவசம் அணிந்திருந்துவண்டிக்கும் (உங்களுக்கும் கூட) இன்சூரன்ஸ் வைத்திருந்து உங்கள் அன்புக் குடும்பத்திடம் போயிட்டு வரேன்னு சொல்லி விட்டு வந்தாலும்நீங்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181-ன் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிப் பிடிபட்டால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்ஏன் இரண்டையுமே சேர்த்து கூட விதிக்க முடியும் என்பதாகச் சட்டம் சொல்லுகிறது.

    அன்பு மனைவிகள் வேண்டுகோளுக்கிணங்க ஆதர்ச வாகன ஓட்டிப் புருசர்கள் தங்கள் உரிமங்களை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பந்தாவா வந்திருந்த போதிலும் இன்று யாரும் திருப்பூரில் சீருடைக் காவலர்கள் நிறுத்தி உரிமம் சோதிக்காததால் ஏமாற்றம் அடைந்தோம் .அனேகமாக எப்படி எங்கு நிறுத்தி சோதிக்கலாம் என்ற ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கலாம் !



       திருப்பூர் போன்ற வாகன பயன்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் நிறையப் பேருக்கு வாகன ஓட்டும் உரிமம் இருந்தாலும் சாலை விதிகளை மதிக்கவோ விரும்புவதில்லை.இங்குக் கம்பெனிகளின் கட்டாயத்தில் வண்டி ஓட்டுவதும்,அவசரம் அவசரம் என்ற மன அழுத்தம் முழுவதுமே சாலைகளின் மேல் கொண்டுவந்து சுமத்துவதுமே காரணம்.மேலும் முக்கியச் சாலைகள் எப்போதும் மாற்றிப் பயணிக்க அனுப்பப் படும்போதும் அங்கே மாற்றப்ட்ட சாலையை அதைச் சீர் செய்யக் காவலர்கள் நியமிப்பது குறைவு.தானே தனக்கு உதவி என்ற கோபமும் இதற்குக் காரணம் .ஒரு சின்னக் கூட்டம் என்றாலும் மிக ஜனசந்தடிப் புழங்கும் திருப்பூர் நகராட்சி முன்னால் அனுமதி கொடுக்கிறார்கள். பொதுவாய் ஊருக்கு ஊர் வழி விடு விநாயகர்தான் அதிகம்.ஆனால் திருப்பூரில் விநாயகசதுர்த்தியால் வழி அடைக்கப்பட்டவர்கள் அதிகம். முக்கியவீதிகள் அனைத்துமே சில கி.மீட்டர்தான் இருக்கும்.இருந்தும் எதனால் முக்கியச் சாலைகள் வழியே ஊர்வலங்களுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.அதுபோல ஏற்கனவே போக்குவரத்துக்குப் போதாக் குறையாக உள்ள குமரன் சாலைகளில் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக்கடைகள் துவங்க எப்படித்தான் அனுமதி அளிக்கிறார்கள் என்பது நீலத் திமிங்கில விளையாட்டின் (Blue Whale Game) 50 ஆவது நாள் போல அதிர்ச்சியளிக்கிறது.


       திருப்பூரில் என் போன்ற பல நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவர்கள் ஒரு வீட்டுக்கு வாகனங்கள் ஓட்டினாலும் அல்லது நிறுவனங்களுக்காக வாகனங்கள் ஓட்டினாலும் அவர்களின் அசல் வாகன உரிமம்தான் அவர்களுக்கு வேலை உத்திராவாதம் (Guarantee ) அளிக்கிறது.அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.நண்பன் ஒருவன் சொந்த ஊரிலிருந்து போனில் பேசும்போது என்னுடைய பதினாறு லட்ச ரூபாய் லாரியை ஒரிஜினல் லைசென்ஸ் நம்பித்தான் கொடுத்து இருக்கிறேன். ட்ரைவரும் அதனால்தான் பொறுப்பாய் ஓட்டிக்கொண்டு இருக்கிறான் .நான் அவனிடம் காவல்துறைச் சோதனைக்காக ஒரிஜினல் லைசென்ஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வண்டி வருமா இல்லை அடுத்த மாநிலத்தில் அவன் விற்று விட்டுக் காணவில்லை என்று சொன்னாலும் நான் நம்பி அவன் பின்னால் அலைய வேண்டியதுதான் என்று நொந்துகொண்டான்.




        காலை இது சம்பந்தமாக தந்தி தொலைக்காட்சி ஒரு அலசல் நேரடி செய்தி தொகுப்பு செய்தது அதன் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டே பேசும்போது நம்முடைய ATM கார்டுகள் நாம் ஒரிஜினலை பத்திரமாக வைத்திருக்கும் போது அது போல அசல் உரிமமும் முக்கியத்துவம் கொடுத்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். நல்ல ஆலோசனை ஆனால் பாண்டே நீங்கள் ஆளும் கட்சி திவாகரன் அணி போல சில சமயம் பேசுகிறீர்கள்.நாம் ATM இல்லாமல் கூட நம்முடைய தேவைக்கேற்ப காசோலை அல்லது இணைய சேவையை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை உபயோகம் செய்யலாம் .உங்கள் அசல் உரிமம் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்  எப்படி நடத்தப்படுவீர்கள் என்று என்னை வந்து தனியே சந்தியுங்கள் சொல்கிறேன் .

       உரிமம் தொலைந்து போனால் அதைப் பெறும் வழியை எளிதாக்கினால் இது சாத்தியம். நாங்கள் எப்போதும் அரசை மதிக்கிறோம்.அரசு சொல்வதைக் கேட்டு மதிப்பதால்தான் ஓட்டுனர் உரிமம் தேர்வு எழுதி, எட்டுப்போட்டு, வாய் மூலம் பதிலளித்துப் பெற்று வைத்து இருக்கிறோம்.இது எங்கள் கடமை ஆனால் அதைப் பற்றிய சந்தேகங்களும் சங்கடங்களும் அறிந்து பேசுங்கள் .

    அது சரி உங்களைப் போன்ற பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் உண்மை மட்டும்தானே பேசுவீர்கள் .அது மக்களுக்கு என்ன செய்தால் என்ன ?








சனி, 22 ஜூலை, 2017

திரு.கோபிநாத்துக்கு அன்பு வணக்கங்கள் .




          அரசுக்கு எதிராக மக்களே தெருவில் இறங்கி டாஸ்மாக் கடைகளைத் துரத்தி அதற்காகத் தடியடி வாங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் மனம் விட்டுச் சிரிக்கும் நிகழ்ச்சியில் சிரிப்பு என்ற பெயரில் குடிகாரத்தனத்தையும் , பெண்கள் வேசமிட்ட ஆண்களையும் வைத்து மது,மாது என்ற இரண்டையும் கொண்டாடத் தொடங்கியது ஏன் என்று தெரியவில்லை .என்ன பஞ்சம் வந்தது உங்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு ?

          நாடகங்கள் போன்ற  நிகழ்ச்சிகளிலும் போதை என்ற வஸ்தைத் தெரியாமல் கலப்பது தொலைந்து போகட்டும். சிரிப்பு நிகழ்சியைக் குடும்பத்துடன் உட்கார்ந்தால் தவறாமல் இடம் பெறுவது போதையில் காமெடி பண்ணுவது , ஆண்கள் பெண் வேசமிட்டுப் பெண்கள் நடத்தையைக் கேவலத்தின் உச்சத்திற்கு இழுத்துக் கொண்டு போவதே வாடிக்கையாகி வருகிறது. இது எப்படிக் காமெடியில் சேரும் ? இதனை உருவாக்கும் இயக்குனர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லவே இல்லையா ? அவர்கள் வீட்டுக் குழந்தைகள் முதல் எல்லாருமே இதைப் பார்க்கத்தானே செய்வார்கள் ? பார்ப்பதால் இந்தப் போதையில் உளரும் காமெடிக் கன்னி வெடிகள் பிஞ்சு உள்ளங்களில் பதியாதா ? அது இதைப்பார்க்கும் நிரந்தர நடுவர்களாக இருப்பவர்கள் யாவரும் உச்சி முகர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள் .அதிலும் ஒருவர் தனக்கு இருக்கும் குடிக்கும் பழக்கத்தை ஏதோ சர்பட்டம் வாங்கியது போலப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார். 


 ஆண்கள் பெண் வேசமிடுவது தவறல்ல .ஆனால் அது ஒரு அதீத ஆணாதிக்க அருவெறுப்பை உரித்துக்காட்டிக் கொள்ளச் செய்யும் அவலமாகவேத் தெரிகிறது .ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதை அவளுக்குச் சமூகம் சொல்லித்தரும் பாடம் மிக முக்கியம் .அவள் மேல் இருக்கும் தாய்மையும் அன்புமே இன்று வரை மிக உயரத்தில் வைத்து இருக்கிறது .அதைத் தள்ளிக் கீழே சாய்க்கும் விதமாக ஆடைகளை விலக்கிக் கொண்டு அலைவதும் ,இரட்டை வசனங்களால் ஆண்களே அருவெறுக்கும் வசனங்களை உச்சரிப்பதும் அதற்குக் கை தட்டு வாங்குவதும் எப்படி காமெடிக்கு மரியாதை சேர்க்கும்

       உங்களால் சிரிக்க வைக்க முடியவில்லையானாலும் பரவாயில்லை .சீரழிய வைத்துவிடாதீர்கள் .மிகப்ப்பெரிய செய்தி சேனலுடன் இணைத்துக் கொண்டு தொடங்கிய நீங்கள் செய்திகளே இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்து  பாராட்டுப் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் நோக்கி வளர்ந்து கொண்டு இருப்பதன் காரணம் உங்கள் தொலைக்காட்சியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்ட கவனமேயாகும் .

    கல்யாணத்திற்கு முன் வைத்துக்கொண்ட காதலைக் கூட விவாதிக்கும்  நீயா நானா விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் தாங்கள்  தயவு செய்து உங்கள் நிகழ்ச்சிகளில் இது சரியா என்று மக்கள் அரங்கில் விவாதித்து மக்கள் உணர்வுகளுக்கு மரியாதைத் தாருங்கள் என்ற விண்ணப்பத்தை உங்கள் தொலைக்காட்சி மீது வைத்திருக்கும் உரிமையும் அன்பும் மீதுள்ள அக்கறையாக பதிவு செய்கிறோம்.நன்றி.

வெள்ளி, 30 ஜூன், 2017

இயேசுவின் இரண்டு வரலாறு ஒரே குரல் !






            ஒரு உறைக்குள் இரண்டு கத்தி வைத்துக்கொள்ள முடியாது .ஆனால் இரண்டு அதி உன்னத உலகை மாற்றிய வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னனியாகக் கொண்ட வேவ்வேறு இடங்களில் உருவான இரு புத்தகங்கள் ஒரே விசயத்தில் இணைவதை எதேச்சையாக வாசிக்க நேர்ந்ததே இந்த மதிப்புரையின் அடிநாதம்.ஆனால் காசிக்குப் போனவர்களின் யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிய வேண்டும் என்ற ஐதீகம் போல முதல் புத்தகம் வாசித்தவர்கள் இரண்டு புத்தகத்தை நிச்சயம் வாசிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

     ஆர்.சி.சம்பத் அவர்களின் எழுத்தில் உருவான இயேசு கிறிஸ்து மக்களோடு 1000 நாட்கள் என்ற புத்தகத்தை நூலத்திலிருந்து எடுத்துச் சென்று முழுவது வாசிக்க முடியாமல் கால நீடிப்புச் செய்யப் போன இடத்தில் ஸ்வீடன் நாட்டின் பேர் லாகர் குவிஸ்டுவின் "Par Lagerkvist" என்ற படைப்பான பாரபாஸ்என்ற நாவலைத் தமிழில் திரு.க.நா.சுப்பிரமணியம் மொழிபெயர்பு செய்தது கிடைத்தது.

        முன்னது இயேசுத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மூன்று ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறது.அதாவது மக்களோடு 1000 நாட்கள் இயேசுவின் வாழ்கையில் அவர் செய்த அற்புதங்கள் பற்றிப் பேசத்தொடங்கி,அவர் தனது கொள்கையால் மக்களை ஈர்த்து வழி நடத்திச் சென்றதையும் அதைப் பிடிக்காத யூதர்கள் அவர்களின் உட்பிட்ரிவான பரிசேயர் மற்றும் சது சேயர்களின் சூழ்ச்சியால் இயேசு சிலுவையில் ஒரு வெள்ளிக் கிழமையன்று சிலுவையில் அறைந்து மரித்துப் பின் மூன்று நாட்களுக்குப் பிறகு தோன்றியதும் அதற்குப் பிறகு அவருடைய சீடர்களுடன் நாற்பது நாட்கள் தங்கியிருந்த வரை பேசி முடிக்கிறது !

        பின்னது ( பாரபாஸ் ) கொல்கொதா மலையின் சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்க விடப்பட்டு இயேசு உயிர் நீத்ததை உடனிருந்து தன் கண்களால் கண்டவர்களாக அவரோடு தண்டனைக்கு உள்ளான இரண்டு திருடர்கள் மற்றும் அன்னை மேரி , சகோதரி மேரி மாக்டலென்,வெரோனிகா.சைமன் பீட்டர்,ஜோசப் மேலும் ரோமப் பேரரசின் சிப்பாய்கள் என்று மட்டுமே உடனிருந்தனர் என்று எல்லோருமே நினைக்கின்றோம் ஆனால் அங்கு மறைவிலிருந்து ஒரு உருவம் கவனித்துக் கொண்டு இருந்தாகவும் அவன் பெயர் பாரபாஸ் என்பதாகவும் அவன் இயேசுவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து வாழ்வின் இறுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதை வரை அவனுடைய கோணத்தில் பேசுகிறது .

சரி யார் இந்தப் பாரபாஸ் ?

         ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரன் .இவன் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிலுவையில் அறைந்து கொள்வதற்காகக் காத்திருப்பில் இருந்த போது அந்தக் கால வழக்கப்படி பாஸ்குத் திருவிழாவின் போது ஒரு குற்றவாளிக் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யும் வழக்கம் இருந்தது.அதே சமயம் இதே தண்டனையை இயேசுவிற்கு வழங்க யூத குருமார்கள் கட்டாயப்படுத்திய போது அப்போது ரோம அரசின் அதிகாரி போன்ஞ் பிலாத்து தன் மனம் இடம் கொடுக்காமல் இயேசுவை விடுவிக்க மக்கள் முன் வைத்த போது அங்கிருந்த மதவெறியர்கள் பாரபாஸை விடுவித்து இயேசுவைக் கொல்லச் சொன்னார்கள்.அப்போது விடுவிக்கப்பட்டவன்தான் பாரபாஸ்.அப்படித் தப்பித்த பாரபாஸ் இயேசுவின் தியாகத்தில் நம்பிக்கை இல்லாமல் தொடரும் வாழ்க்கை மொத்தமும்தான் பாரபாஸ் எனும் நாவல்

        வெவ்வேறு களங்களில் உருவான புத்தகம் என்றாலும் இரண்டு கதையும் சந்திக்கும் புள்ளிகள் சுவாரஸ்யமானது . இயேசு கிறிஸ்து மக்களோடு மக்கள் 1000 நாட்கள் புத்தகத்தின் 112 ம் பக்கத்தில் இந்தப் பாரபாஸ் பற்றிச் சில வரிகள் சொல்லப்படுவதோடு முடிகிறது .ஆனால் பாரபாஸ் கதையாக்கத்தில் அதன் தொடர்ச்சி போல இயேசு கொல்லப்பட்ட இரண்டாவது நாள் பாரபாஸ் இயேசுவின் முக்கியச் சீடர்களுல் ஒருவரான சைமன் என்ற பீட்டரை ( இவர் முதல் போப்பாக இருந்தார் ) எதேச்சையாகச் சந்தித்து இயேசுவின் பேசுகிறான்.அப்போது அங்கு வந்த கிறிஸ்து அபிமானிகள் பாரபாஸை விரட்டி அடிக்கிறார்கள் .

     இரண்டாவதாகப் பெத்தனி என்ற ஊரில் லாசரஸ் என்ற ஒரு இளைஞன் இறந்த பிறகு இயேசு உயிர்ப்பித்தார் . ( இ.ம.ச 1000 நாட்களில் புத்தகம், லாசரஸ் நான்கு நாட்களில் உயிர்பிக்கப்பட்டான் என்கிறது ஆனால் பாரபாஸ் , லாசரஸ் 100 இரவுகளும் பகலையும் கடந்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டான் என்கிற முரண் இருக்கிறது ) அந்த இளைஞனைப் பாரபாஸ் சந்தித்து உரையாடி விட்டு வருகிறான்.


        மூன்றவதாக முற்றிலும் முரணான ஒரு செய்தி . இயேசுவின் மூடியக் கல்லறையை மூன்றாவது நாள் அதிகாலை மின்னலைப் போன்ற உருவமும் வென்பனி போன்ற உடையும் கொண்ட ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வந்தார் என்றும் அவர் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டி விட்டான்.அப்போது அங்குக் காவல் புரிந்து கொண்டு இருந்த ரோமானியப் படை வீரர்கள் கண்டு பயந்து ஓடினர்கள் என்கிறது இ.ம.ச 1000 நாட்கள்.

    ஆனால் பாரபாஸ் , தீப்போர்வைப் போர்த்தியிருந்த ஒரு தேவதை வானத்திலிருந்து வேகமாகப் பறந்து வந்து ஈட்டி போன்ற கையால் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டித் தள்ளியது என்கிறது .அப்போது அங்கு உதடு பிளந்த ஒரு பெண்ணும் இருந்தாள் அவள் இதை நேரில் கண்டதாகப் பாரபாஸிடம் சொல்கிறாள் ஆனால் அங்கிருந்த அவனால் அதைக் காண முடியவில்லை என்றும் சொல்கிறது .நம்பிக்கையற்றவர்கள் உண்மையைக் காண இயலாதவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது .

       இந்த இரு வேறு புத்தகங்களும் ஒரு சில புள்ளிகளில் சந்தித்தாலும் தேவ ஆட்டுக்குட்டி எனப்படும் இயேசு தன் வாழ்நாளை எளிய மக்களுக்காகத் தன் உயிர் தியாகம்  இயேசுவின் இரண்டு வரலாறுகளில்  ஒரே குரலாக ஒலிக்கிறது  .