சனி, 19 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் (கடிதம் ) - இரண்டாவது பகுதி

 பெண்களின் பார்வைக்கான அர்த்தம் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டால் மனிதனின்   உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் சொல்ல முடியும் சாத்தியம் அப்போதுதான் வரும் என்பதை அன்று அவள் பார்வையில்லிருந்துதான் நான் உணர்ந்துகொண்டேன் ” 

தேவன்
நாள் குறிப்பு  14-02-1989
.

            தேவன் தனது நாட்குறிப்பிலிருந்து   தனக்கு, உமாவுடனான தன் முதல் சந்திப்பை எழுதிருந்ததை இங்கு தந்து இருக்கிறேன் .சில சமயம் ஒன்று சேர்ந்த காதலை விட பிரிந்த காதலிலே அதிக அனுபவமிக்கதாகவும், ஆழமான செய்திகளை விட்டுச் சென்று இருக்கிறது. தேவனின் காதல் சந்திப்பு ....

             
 மார்கழி இதமான இதமான குளிர் நிறைந்த மாதம் . பூமி  சூரியனிடம் பொய்க் கோபம் கொண்டு வடக்குப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டு ஊடலுடனே  மிக அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் காலம் இது .இந்த மாதிரி ஒரு மார்கழி மாதத்தில்தான் அவளை முதன் முறையாக சந்தித்தேன் . என் இளமை தனது நீண்ட நினைவு பயணத்திற்கு முன்னுரை எழுத  தொடங்கிய காலம் அதுதான் .

              அதிகாலை பனிக்குளிரில் வீட்டுக்கு அருகிலிருக்கும் முருகன் கோவிலின் ஜெயராம் அர்ச்சகருக்கு உதவி புரிந்து கொண்டு இருந்த காலம் அது .அந்த கோவிலின் உள்புறத்தின் கர்ப்ப கிரகத்தில் நின்ற நிலை  முருகனுகனுக்கும் எனக்கும் சில அடிதூரம் வரை என் சேவை இருக்கும் .நான் பிராமணன் இல்லாததால் என் எல்லைக்கோடு அவ்வளவுதான்.அந்த முருகனை நான் எப்போது பார்த்தாலும்  என்னைப் பார்த்து மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாகவே தோணும்.அங்குதான் உமாவை முதல் முதலில் சந்தித்தேன் அவளுக்கு 11 வயது எனக்கு 14.

                 எத்தனைதான் காதல் விபத்துக்கள்  வாழ்க்கையில் சொல்லி வந்த காதல் அனுபவங்கள்  சொல்லாமல் வந்த காதல் அனுபவங்கள் என்று  இன்று வரை சந்தித்தாலும் முதன் முறையாக என் உடலில் உள்ள  72000 நாடிகளில் எனக்கு காதல் நாடியை அறிமுகப்படுத்தியது அவள்தான் .இத்தனைக்கும் அவளும் நானும் ஒருவரை ஒருவர் அந்த மார்கழி மாதத்திற்கு பிறகு பல முறை அதே கோவில் சந்தித்து கொண்டாலும் சிரித்ததுகூட இல்லை . ஆனால் முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டது இப்போதும் நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது .

                 
     மார்கழி மாத கடைசி நாள் பூஜை பெண்கள் அதிகம் மதிப்பு தரும் நாள் .ஆண்டாளுக்கு நாரயணனைப்போல தனக்கும் இஷ்டப்பட்ட முகம் தெரியாத ஒரு காதல் கணவனுக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கும் கடைசி நாள்.கோவில் உள் வளாகத்தின் முன் பக்கத்தில்  சுமார் இருபது பெண்கள் மட்டுமே அமர்ந்து பூஜை செய்ய முடியும் .அதனால் மற்ற பெண்கள் கோவிலைச்சுற்றி அமர்ந்தும் வெளியே உள்ள பந்தலில் பூஜை செய்வார்கள் .அதனால் கோவில் முன் பகுதியில் முருகனை தரிசித்துகொண்டே பூஜை செய்யும் அந்த இடத்திற்கு கடைசி நாளில் போட்டி அதிகம்.அன்று கோவிலில் வேலை அதிகம் மண்டகப்படியாளார்கள் அதிகம் வருவார்கள். அன்றைய இலவச பூஜைப்பொருள் இலவசமாக குவிந்து விடும் .மற்றைய நாளில் அவரவர்களே விளக்கு பூஜைக்கான பொருள் கொண்டு வருவார்கள் ஆனால் கடைசி நாளில் .விளக்குக்கு ஊற்றப்படும் எண்ணை முதல் திரி பழம் தாம்பூல பொருள்கள் அனைத்தும் இலவசம் .அன்றைய விளக்கு பூஜைக்கான நல்லலெண்ணை செலவு முழுவதுவும் என் வீட்டில் அம்மா ஏற்றுக்கொள்வார்கள் .

முன்னமே நான் சொன்னது போல அன்று முன் வரிசையில் இடம் பிடிக்க
போட்டா போட்டி இருப்பதால்  பூஜை ஆரம்பிக்கும் அதிகாலை 5 மணிக்கும் முன் கோவிலின் வெளிக்கதவை  பூட்டி வைத்து இருப்போம்.அன்று நான் கோவிலுக்கு 3 மணிக்கே போய்விட்டேன் . நான் மடப்பள்ளியில் பஞ்சாமிர்தம் தயார் செய்ய நாட்டுச்சக்கரையை அண்டாவுக்குள் கொட்டிக்கொண்டு இருந்தேன் . சுமார் 3.30 இருக்கும் யாரோ வெளியேயுள்ள இரும்புக்கதவை கதவை ஆட்டுவது போல சத்தம் கேட்டது கூடவே சாமி ,சாமி என்ற ஒரு பெண்ணுக்குரிய குரலும் கேட்டது.
 அர்ச்சகர் ,கிச்சப்பு ( எனக்கு அவர் வைத்த செல்லப்பெயர் அது ) யார்ன்னு ? பாரு என்றார் .
 அப்போது தெரியாது அப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று .ஆம் அங்கு அவள் தட்டியது கோவில் வாசல் கதவு இல்லை என் இளமையின் கதவை !
வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு உமா நின்று இருந்தாள் .
சாமி இல்லையா ? கேட்டாள்
உள்ள இருக்கார். 
கதவை திறந்து விடுங்கள் எனக்கு முன் பக்கம் கோளம் போட வேண்டும் என்றாள் .
எனக்கு புரிந்து விட்டது .
முன்னுரிமை பெற திருட்டு வழி .’அட்வான்ஸ் ரிசர்வேசன்’.
இல்லை சாமி இப்போது திறக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாழரைக்கு மேல்தான் திறக்க சொல்லியிருக்கிறார் என்றேன் .
கோவில் வாசல் குழல் விளக்கில் அவள் முகம் ஏமாற்றம் அடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
மீண்டும் அவள்
 சாமி எப்போ வருவார் ? .
குரலில் ஏமாற்றம் சுரத்தை குறைத்து இருந்தது
உள்ளேதான் இருந்தார்.
இல்லை வெளியே போயிருக்கிறார்.
அவர் அப்படிதான் ஏற்கனவே சொல்லச் சொல்லியிருந்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.சட்டெனெ திரும்பி பிடியிறங்கி நடக்க தொடங்கினால்..
அது எனக்கு என்னவோ செய்தது !

ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் பூட்டியிருந்த கதவு வழியாய்  பார்த்தேன் . நிலவு ஒளியிலும், சாலையோரத்து தெருவிளக்கின் வெளிச்சத்திலும், முழங்கால் வரை குட்டைப் பாவடை இடமும் வலமும் அசைய அவள் மெல்ல நடந்து போய்க்கொண்டு இருந்தது தெரிந்தது .

அது எனக்கு குமுத்தில் சுஜாதாவின் ’பிரிவோம் சந்தித்தோம்’தொடருக்கு ஜெ... வரைந்த , மதுமிதாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்தியது !
அவள் திரும்பி பார்ப்பாள் என்று மனது சொல்லியது .
தெரு முனை வரை அவள் போய் திரும்புவது வரை  தொடர்ந்து பார்த்தேன் . அவள் திரும்பி பார்க்கவேயில்லை .
  
நான் திரும்பி மடப்பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நான் திரும்பி வந்த பின்னும், எனக்கு என்னையே ஒரு புது உணர்வுக்குள் இழுத்தது.

வேலையில் என் கை செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் மனம் அந்த குட்டைப்பாவாடையில் தொங்கிக்கொண்டு, நடந்து கொண்டே இருந்துகொண்டு இறங்க மறுத்தது.

அப்போது பளிச்சென்று ஒரு யோசனை தோணியது .உடனேயும் அதைச் செய்து விட்டேன்.

அது ...

மணி நாழரைக்கெல்லாம் கோவில் கதவைத்திறந்து விட்டோம் .அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வரக்காத்துக் கொண்டு இருந்தார்கள். அத்தனை பேரிலும் அவளை மட்டும் என் கண் தேடியது 
யாரோ என் தோளைத்தொட்டார்கள் .

தம்பி, இந்த இடத்தில்  யாரோ கோளம் போட்டு உமா என்று எழுதியிருக்கிறார்கள் ,அருவார்களா? 
கேட்டவர் தினமும் கோவிலுக்கு வரும் கோவில் ’ட்ரஸ்டியின்’ மருமகள் .
ஆமா அக்கா ,ஒருத்தங்க வந்து கோலம் போட்டு, சொல்லிட்டு போயிருக்கிறார் என்று பொய் சொன்னேன் .  
நாங்கள் வந்த பின்னால்தானே கதவு திறந்தீர்கள் என்று அவர் கேட்கவில்லை .
ஒரு வேளை இன்னொரு பொய் சொல்ல விடமால் எனக்கு அங்கு இருந்த முருகன் காப்பாற்றி விட்டார் போல ! 

ஒருவேளை அப்படிக் கேட்டு நின்று கொண்டு இருந்தால் அதற்குள் கோவிலுக்கு பின் புறம் இருக்கும் இடமும் பறி போய் ,பிறகு வாசலுக்கு வெளியே வந்து பந்தலுக்கு அடியில் பூஜை செய்ய வேண்டி நிலை வரலாம் என அவர் யோசித்து கேட்காமல் போயிருக்கலாம் !  
எதற்கும் பந்தலுக்கு வெளியே பார்ப்போம் என்று வெளியே வந்தேன்.
இரண்டாவது வரிசையில் பளிச்சென மஞ்சள் பட்டுப்பாவாடையில் உட்கார்ந்து இருந்தாள் . 

எப்படிச் சொல்வது ?
நல்ல வேளை ,அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் சின்னப்பெண் என்னை கவனித்தது.
சைகை செய்து பக்கத்திலிருக்கும் உமாவைக் காட்டிக் கூப்பிடச் சொன்னேன். 
நிமிர்ந்து பார்த்தவள் ,உடனே எழுந்து வந்தாள் . 
உள்ளே முதல் வரிசையில் கோவிலுக்குள் கைகாட்டி உங்களுக்காக இடம் போட்டு வைத்தேன் என்றேன் .
முதலில் அவளுக்கு புரியவில்லை . 
நீங்கதான் 4 மணிக்கே உள்ளே இடம் போட வந்தீர்களே என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்து கொண்டாள் .
என் அந்த மிகப்பெரிய சேவைக்கு ஒரு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன் .
ஆனால் அவள் உடனே திரும்பி தன்னிடம் போய் குத்து விளக்கை தூக்கி வந்து நான் சொன்ன இடத்தில் விளக்கை வைத்து விட்டு  உட்கார்ந்தாள் .
அந்த இடத்தில் கோவில் கோலப்பொடியில் சின்னதாய் அவள் பெயரை நான் எழுதிவைத்ததை பார்த்து இருப்பாளா ?
பூஜை முடித்த பின் ஏதாவது சொல்லிவிட்டுப் போவாள் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டு ,மறந்து போனேன் .  
ஆனால் பூஜை முடிந்த பின்னும் அவளைப் பார்க்க முடியவில்லை .


ட்டு வருடம் கழித்தபின்  ஒரு நாள் ..
என் நண்பரின் தங்கை, எனக்கு ஜூனியர்  . தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். எனது நூலகத்திலிருந்து அவருக்கு ’ரெஃபரென்ஸ்’  புத்தகம் கேட்டு இருந்தார். வாங்கிப்போக வரும்போது கூடவே ஒரு பெண்ணையும் கூட்டி வந்து எங்கள் காம்பவுண்டுகு வெளியே நிற்க வைத்துவிட்டு வந்து இருந்திருக்கிறார்.என்னிடம் சொல்லவில்லை.

(எனக்குத்தெரிந்து ஒரு பெண் ஒரு ஆணுடன் என்னதான் பழகியிருந்தாலும் தன்னை விட அழகான பெண்ணை தான் பழகிய ஆணுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை. இது நம்பிக்கையின் வேறு கோணமா ? சுய பாதுக்காப்பா ? என்பது தெரியவில்லை !)

புத்தகம் வாங்கிவிட்டு நண்பரின் தங்கை  திரும்பி போகும் போது எதேச்சையாக உயரம் குறைவான எங்கள் கம்பவுண்டுக்கு வெளியே நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .ஆனால் என்னைஅவள் பார்க்கவில்லை.
அந்த முகம் …

அந்த முகம் ....
வெகு நாளாய் என் நினைவின் ஆழத்தில் கிடந்த ஏதோ ஒரு  முகத்துடன் ஒத்துப்போவது போல இருந்தது !


மன்னிக்கவும்,
 மீண்டும் தொடர்கிறது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக