செவ்வாய், 29 செப்டம்பர், 2015

காதலுக்காகக் காதலையே கொடு !



வெகு நாளைகுப் பிறகு மிக நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து ஃபோன் . நாளைக்குத் திருச்சிவரைப் போகவேண்டும் கூட வர முடியுமா ? எனக் கேட்டார் . கேட்ட அவர் குரலில் ஒருவித அயற்சியும் சங்கடமும் கலந்து இருந்தது.எனக்குச் சமீபத்தில் இருக்கும் பொறுப்பு பற்றி அவருக்கும் தெரியும் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்பதில் அவருடன் நான் இருக்க வேண்டிய ஏதோ ஒரு அவசியம் இருக்கிறது .பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்க நினைத்தேன் .ஆனால் உடனே சரி என்று சொல்லிவிட்டு என் வேலைக்குள் மூழ்கிப் போனாலும் வேறு ஏதாவது ஃபோன் வரும்போதெல்லாம் நண்பரிடம் எதற்கும் என்று கேட்டு இருக்கலாம் என்று பல முறை நினைவுகள் கரை மோதும் அலைகள் போல வந்து, வந்து போனது . 

என் நண்பர்கள் இப்படித்தான் .சந்தோசமாய் இருக்கும் போது விடவும் சங்கடமாக அல்லது முடிவெடுக்கும் தயக்கம் இருக்கும் போது என்னுடன் தங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் .அது ஏன் என்பதை எனக்குள் கேட்டுக்கொள்வேன் .ஒரே பதில் அதைத்தான் நானும் விரும்பி இருக்கிறேன் என்பதாக எனக்கு என் மனது சொல்லி விடும் .இது இன்று நேற்று அல்ல 30 வருடமாகத் தொடரும் நட்பு ஊர்வலத்தின் தொடர்ப் பயணம் ... 

      திரைபடத்தில் ’எண்ட் கார்டு’ போட்டது சில நட்புக்கள் வேறு வித சூழ்நிலையால் கரை ஒதுங்கிவிடும் .பல வருடங்களுக்குப் பிறகும் ஏதாவது ஒரு சந்திப்பில் அதே நட்பு ஒரு வித பெருமூச்சுடன் மீண்டும் தத்தித் தத்தியாவது தொடரும்.இப்படித்தான் பல வருட இடைவெளிக்குப் பிறகு கூட என்னை விடச் சில வயது இளைய நண்பன் ஒருவன் ஊர் விட்டு வீடு தேடி வந்தான் .வந்த சில அரைமணிக்குள் வா மேலே போய்ப் பேச வேண்டும் என்றான்.மொட்டை மாடியில் காற்று வாங்க போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுப் போனால் இரவு ஒன்பதுக்குத் தொடங்கிய பேச்சு ஒரு மணிக்கும் மேலும் நீண்டது .

      விசயம் இதுதான் .நண்பணுக்கு நல்ல சம்பாத்யம் .அற்புதமான மனைவி குழந்தைகள் ,நிறைவான வாழ்க்கை .இதெல்லாம் விட ஊரில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் தேடித் தேடிப் பண உதவி செய்பவன். இது அவன் இங்கு என்னைத்தேடி வரும் சில வாரங்களுக்கும் முன்வரை .இப்போது அவனுக்கு ஒரு சிக்கல் யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது இதற்குத் தான் காரணமில்லை என்பதான ஒரு புளுகு மூட்டை என் தோளில் ஏற்றி வைத்தாலும்,இதுத் தவறு என்று அவன் மனதில் உள்ளுணர்வுக் சதா கூக்குரலிட்டு இருக்கிறது.அதனால் அவனுக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள் எனத் தெரிந்து கொள்ள ஜாதகர்கள் ஒருவரிடமல்ல மூவரிடம் போயிருக்கிறான் எல்லோரும் ஒரே மாதிரி அவனுக்கு நடக்கும் தசா மற்றும் புத்திக்குப் பெண்களால் அவமானம் என்ற ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்லியிருக்கிறார்கள் .அந்தப் புயலில் சிக்கிய கப்பல்தான் என் வீட்டு வாசலுக்குக் கரையேற்றி என்னைத் மீண்டும் தேடி வரவைத்து இருக்கிறது .அதனால் நான் அப்படி ஆள்களுக்குக் குறிச் சொல்லுபவனோ குடுக் குடுப்பை ஆட்டும் ஆள் அல்ல .எல்லாச் செயலுக்கும் விளைவுகள் காத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாதவன்.அது மட்டுமல்ல .எண்ணங்கள் எனபது விதை.யாரோ நினைத்தால் மட்டும் வளர்வதில்லை.செயல்படுத்த முடியாத அதற்குத் திராணியில்லாத பலரின் எண்ணங்களின் கொத்து எவன் கழுத்திலாவது மாலையாக விழுந்து யாரோ ஒருவனை மேடையேற்றி வேடிக்கப் பார்க்கும்! 

நாம் இப்படி இருக்கப் பல பேரின் நல்ல எண்ணமும் அதற்கு எதிரான எண்ணமுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. என்பதால் அவன் பேசியதைக் கேட்டு விட்டு நான் சொன்னச் சில ஆலோசனைகளை அவன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை .என் நோக்கமும் அதுதான். எது அவனுக்குச் சரி என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.சொல்லிவிட்டேன்.கேட்பது அவன் சொந்த விசயமே ! இதில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவன் வாரம் ஒருமுறை போனில் பேசுகிறான் .தொடர்பு மீண்டுள்ளது. 

சரி திருச்சி விசயம்...

அடுத்த நாள் நண்பருடன் திருச்சி .போகும் போதும் எதற்கு போகிறோம் என்று அப்போதும் அவர் எதுவும் சொல்லவில்லை.நிறைய புத்தகங்களைப் பற்றிப் பேசினோம்.திரைப்படங்கள் ,சமீபத்திய வலைப்பூ பற்றிக்கூட பேசினோம் .ஆனால் எங்கு போகிறோம் என்பது மட்டும் சஸ்பென்ஷாக நீண்டுகொண்டே போனது .ஆனால் அவர் தூக்கம் வருகிறது என்று திருச்சிக்கு சென்றைடையும் அரை மணி நேரம் முன்பு தூங்க துவங்கி விட்டார்.அப்போது அவர் இத்தனை நேரம் பேசிய பேச்சுக்களில் பொதுவான ஒரு ஒற்றுமை  இருந்தது உணர்ந்தேன் .அது மிகவும் எதிர்மறையான அதே சமயம் காதல் தோல்விகள் பற்றி இருந்தது.


மதியம் ஒரு மணி திருச்சி வந்துவிட்டது .மன்னிக்கவும் .நாங்கள்

திருச்சிக்கு வந்து விட்டோம்.அவரை மெல்ல எழுப்பினேன். இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடம் பயணித்து ,ஒரு வீட்டு முன் வண்டி நின்றது. வாசலில் நிறைய இரண்டு சக்கர வாகனங்களும் கார்களும் நின்று இருந்தன .சில சேர்களில் உதிறிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் .ஹோட்டல் ஆட்டோ ஒன்று மதிய உணவு இறக்கிக் கொண்டு இருந்தது.ரசம் வாசனை லேசாய் சுண்டி இழுத்தது.நண்பர் தயங்கி தயங்கி முன் சென்றார்.நிறைய செருப்புகள் வாசலை நிறைத்து இருந்தன.சின்ன வயது பிள்ளைகள் துரத்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள் வழக்கம் போல பெரியவர்களின் அதட்டலோடு.


             நண்பர் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.பெரியவர் ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்தவருக்கு விடைக் கொடுத்து விட்டு,எங்களைப் பார்த்துத் திரும்பி, நண்பரை உற்றுப் பார்த்து நீங்க...என்று லேசாய் இழுத்தார்.நண்பர்த் தன் அண்ணன் பெயரைச் சொன்னார்.உடனே பெரியவர் முகம் பிரகாசம் ஆகி .அடடே நீங்களா என்று கைகளைப் பிடித்தார்.அடுத்த சில நொடிகளில் அவர் முகம் சோகம் தொற்றிக்கொண்டதைக் கவனித்தேன்.உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு வாங்க என்றார்.நண்பர் என்னைப்பார்த்து .இவர் சாந்தி அப்பா என்றார் நண்பர் .நான் யார் சாந்தி என்று யோசித்துக் கொண்டே அவருக்கு வணக்கம் சொன்னேன்.எனக்கும் வணக்கம் சொன்னவர் நண்பரைப் பார்த்துக் கூட்டிடு .உள்ளே போங்க என்றார் மீண்டும். 

வாசலைக் கடந்தவுடன் பெரிய ஹால் வரவேற்றது .அங்கும் பல பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் .ஆச்சர்யமாய் மெல்லப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஹாலின் மையப்பகுதியைக் கவனித்தேன். ஒரு டீபாய் போன்ற மேசையில் துணி விரித்து அதன் மேல் ஒரு ஆணின் போட்டோ வைத்துப் பெரிய மாலைப் போட்டு ,அதற்கு முன் இரண்டு விளக்கும் ,ஒரு விபூதித் தட்டும் இருந்தது.போட்டோவில் அந்த நபர் அல்லது உருவம் சிரித்துக்கொண்டு இருந்தது.

எங்கள் இருவரையும் அங்கு இருந்த சில பெண்கள் யார் என்பது போலப் பார்த்தார்கள்.நண்பர்ப் போட்டோவையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.நான் மெல்லச் சுவற்றின் மற்றொரு பெரிய குடும்பப் போட்டோவைப் பார்த்தேன் .அதில் இங்குச் சிரித்துக் கொண்டு இருக்கும் மனிதரும் அவரோடு அந்த ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன்.எங்கே ?எனது ந்யுரான்கள் சாந்தி என்ற பெயரோடு பல முகம் தெரியாதவர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டு இருந்தது. 

அப்போது, எங்களுக்குப் பின்னால் இருந்து வாங்க என்று நண்பர் பெயரைச் சொல்லி அழைத்த பெண் குரலைப் பார்க்கத் திரும்பினேன். 
இந்தப் பெண் ,இந்த முகம், சாந்தி . 
எஸ். 
நண்பரின் காதலி. 
அந்தக் குடும்பப் போட்டோவில் இருக்கும் பெண் இவள்தான் .அப்படியானால் அவள் கணவர் இறந்து விட்டார். 

எனக்கு உள்ளே சொரேர் என்று ஒரு கத்தி இறங்கியது போல இருந்தது !

சுமார் 15 வருடம் இருக்கும் .சாந்தியை நண்பரின் அண்ணன் வீட்டு விசேசத்தில் அண்ணிக்கு நட்பான இந்தச் சாந்தியைப் பார்த்த நண்பரின் அம்மா உடனே பிடித்துப்போக இந்தச் சாந்தியைப் வீட்டுக்கு அழைத்து விருப்பம் நண்பருக்குத் திருமணம் செய்யும் தன் ஆசையைச் சொன்னார்கள்.அவர்கள் வீட்டில் நண்பரின் அண்ணி இதை நேரில் தெரிவித்தபோது அப்பா உடனே சம்மதித்தார்,அம்மா மெல்லத் தயங்கினார்.அம்மாத் தயங்கியதன் காரணம் எதுவெனெ அப்போது புரிந்து இருந்தால் சாந்திக்கும் நண்பருக்குமிடையே காதல் என்ற ஒரு மாயவலைப் பின்னப்படாமலேயே போயிருக்கும். 
வீட்டின் சம்மதத்தோடு இருவருமே காதல் காதல் யாத்திரைத் துவங்கி விட்டார்கள் .எங்கள் நண்பர்கள் சிலர் அப்போது காதலித்து இருந்தாலும் திருமணம் வரை போகும் நிச்சயக்காதல் என்று நண்பரின் காதலை நாங்கள் பெருமையாகக் கொண்டாடுவோம். 

ஆனால் நண்பருக்கு வெளியூரில் வேலை மாற்றம் ஆனப் பிறகும் அந்தக் காதல் சில ஆண்டுகள்தான் வெகு ஆரோக்கியமாகப் பூவும் பிஞ்சுமாக நீடித்தது.ஆனால் சாந்தியின் தாய் மாமன் என்ற புயல் ஒன்று குறுக்கே வந்து கலைத்துப்போடும் வரைதான் அது நீடித்தது. 
சாந்தியின் அம்மாவின் உடன் பிறந்த சகோதரன்தான் இப்போது நடுவீட்டில் சிரித்த போட்டோவாகிப் போன தாய்மாமன் ராஜா.பெயருக்கேற்றார் போல ராஜாவாகச் சுற்றினார்ப் பத்தாததற்கு நல்ல சம்பாத்யம் .ரியல் எஸ்டேட்,ஹோட்டல் எனப் பணம் குவிந்துகொண்டு இருந்தது .ஆனால் சாந்தி வீடு விவசாயம் .பெரிய வசதியில்லை .அதனால் தனது தம்பியைக் கட்டிவைத்தால் தனது மூத்த பெண் நல்லா வாழ்வாள் என்ற எல்லாத் தாய்மாரின் கனவுச் சாந்தியின் அம்மாவுக்கு இருந்தது.சாந்தியின் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும்.விருப்பமில்லை.அவர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார்.காரணம் ராஜாச் சின்ன வயதிலேயே சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்ததால் அவனை வெற்றி மிதப்புக் குடிப்பழக்கத்தில் தள்ளியிருந்தது.அதுவும் பந்தயம் கட்டி ஒரு ஃபுல் பாட்டிலை எவ்வளவு சீக்கிரம் ’ராவா’ (எதுவும் கலக்காமல்) குடிக்கிறேன் என்று போட்டிப் போட்டு ஜெயிப்பவன் ராஜா.இளம் வயதில் காசு சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் நிறையப் பேரின் நிலை இப்படித்தனோ? 

      சாந்தியின் அம்மாவுக்கு அந்தக் காதல் வலுவான அடித்தளம் போட்டு வருவதை லேசாய்க் கண்டித்து வந்தார் .சாந்தி உறுதியாய் இருந்தாள்
நண்பர் வெளியூரில் இருந்ததும்,சில விசேசங்களில் ஒன்று கூடிப் பேசிச் சில திட்டங்கள் தீட்டித் தம்பியை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பதுவும் ,பழக வைத்தார் சாந்தி அம்மா .ராஜா நிறையச் செலவுச் செய்தான் .அதுவும் குறிப்பாய்ச் சாந்திக்கு . ஆரம்பத்தில் வேண்டாம் என மறுத்த சாந்தி அம்மாவின் சொந்தம் என்பதுவும் ,சாதாரண வீட்டுச் சூழலில் வளர்ந்துவிட்டு நிறையச் செலவு செய்து, தாய் மாமன் ,புடவை ,நகை என அடுக்கியதில் அதை அன்பாகப் புரிந்துக் கொண்டாள் .மெல்ல அவள் மனதில் அவள் அம்மா நினைத்த நீரூற்றுப் பெருகத் தொடங்கியது..ஒருப் பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது அப்போது எங்களுக்குப் புரியவைத்தது சாந்தி அம்மாதான் 
       இதைச் சாந்தியே நண்பருக்குக் கடிதமாக எழுத ,நண்பர் மனதளவில் விலகத் துவங்கினார் .நாங்கள் பேசிப் பார்ப்போம் என்றோம் .அதற்கு அவர் சொன்னப் பதில் ,எதுவேண்டுமானாலும் பேசிப் புரிய வைத்து விடலாம் நாழுச் சுவருக்குள் ஒன்றாய் வாழும் ஆண் பெண்ணுக்கிடையே உள்ளக் காதல் பேசிப் புரியும் விசயமல்ல.அவளுக்கு அதுதான் பிடிக்கும் என்று தெரிந்தப் பிறகு நாம் பேசித் திசை மாற்றினால் அந்த வாழ்க்கைப் பயணமாக இருக்காது சுமையாகத்தான் இருக்கும் விட்டு விடுங்கள் அவளை விரும்பிய எனக்கு அவள் விரும்புவதையும் மதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார். 

      அதற்கு பிறகு சில மாதங்களில் அவசர அவசரமாக அதே ஜோரில் திருமணமும் முடித்து விட்டார்ச் சாந்தி அம்மா.அவர் கணவர் வேண்டாம் உன் தம்பி குடும்பதிற்கு ஆகாதவர்கள் என்று எவ்வளவோ தடுத்தார் .காசுதான் முழு வாழ்வின் அர்த்தம் என்று நம்பிய சாந்தியும் ,அவர் அம்மாவும் அவரைத் தோற்கடித்தார்கள் .பெரிய வீடு, நகை,கார், பைக் எனச் செல்வம் கூரையைப் பொத்துக்கொண்டும் கதவை,ஜன்னலைத் திறந்துகொண்டும் பீரோவை நிரப்பியது.சொந்தமெல்லாம் ஒவ்வொரு விசேசத்திலும் செய்முறையில் அசந்துப் போனது. .

செல்வம் எப்படி வந்தது என்பதை யாருக் கேட்கவில்லை.ஆனால் எப்போதும் போலக் கட்டுசோறுக்குள் பெரிச்சாளி போல ராஜாவின் குடியின் அளவுக் கொஞ்சமும் குறையாததால் மெல்ல எமன் யாருக்கும் சொல்லாமல் பாட்டில் வழியாக நுழைந்து ராஜாவின் கிட்டினியில் போய்த் தஞ்சம் புகுந்தார்.ஒரு சமயத்தில் ஒரு சேர இரண்டு கிட்டினியும் செயல் இழந்தது.இதில் பெரிய வெடிக்கை என்னவென்றால் சொந்தமெல்லாம் கிட்னித் தர மறுத்த போது சாந்தி நண்பரிடமும் கேட்டு இருக்கிறாள் .எங்களுக்குத் தெரியாமல் அவரும் தரச் சம்மதித்து விட்டார் ஆனால் வீட்டாரின் சம்மதம் கேட்டப் போது அவர்கள்  மறுத்து விட்டார்கள்.இதை அண்ணியிடம் சொல்லி சாந்தி ஒருமுறை வருத்தப்பட்டாளாம் ! 
 

இதனால் வேறு வலியில்லாத சாந்தித் இதே மாதிரி பிரச்சனையில் உள்ள ஒருவருக்கு தன் கிட்னியை வேறொருவருக்குக் கொடுத்து அவர் குடும்பத்தில் ஒருவர் கிட்னியை ராஜாவுக்குப் பெற்றுக்கொண்டாள்.ஆனால் அதுவும் ராஜாவின் உடல் தன்மைக்குப் பொருந்தவில்லை அதுவும் செயல் இழக்க, வீட்டிலேயே டயாலிசிஸ் அமைத்துக்கொண்டார்கள் ஆனால் அப்போது யாரும் அறியாமல் கிட்னியில் தங்கியிருந்த எமன் மெல்ல இன்ஃபெக்சன் என்ற தொற்று மூலம் மூளைக்குபோய் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் புகுந்து ராஜாவின் மரணத்திற்கு நாள் குறித்து விட்டார். 

 இன்று ராஜாவுக்குப் பதினாறாம் நாள் . சாந்தியை இந்தக். கோளத்தில் சந்திக்கும் மன தைரியம் இல்லாத நண்பர் இங்கு வருவதற்கு மிகப்பெரிய தயக்கம் இருந்ததால் என்னை அழைத்து வந்து இருக்கிறார்
நாங்கள் இரண்டு பேரும் போட்டோவைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு விபூதிப் பூசிக்கொண்டோம்.மெல்ல அங்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தோம்.

சாந்தி எதிரில் போட்டோவுக்கு அருகில் உட்கார்ந்தாள் .அவள் முகத்தில் நண்பரின் பல கேள்விக்குப் பதில் இல்லை.ஆனால் நண்பருக்குத் தெரியாத பல விசயங்கள் சாந்தி முகத்தில் இருந்ததாக நான் நினைத்தேன் .

வெகு நேரம் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை . நண்பர் அடிக்கடி அவர்கள் குடும்பப் போட்டோவை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார், அங்கு அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்திய சாந்தி, இவள்தான் மூத்தவள் பி.ஈ பண்ணுகிறாள் என்றாள் .

அந்தப் பெண் வணக்கம் அங்கிள் என்றது நண்பரைப்பார்த்து .நண்பர் முகம் வெகுவாக மாறியது.

ஒரு அரை மணி நேரம் கழித்து கம்பெனியிலிருந்து ஒரு போன் ’வைபிரேசன்’ மூடில் அதிர்ந்தது . அவர்கள் வீட்டுக்கு பின் பக்கம் போய் பேசலாம் என்று  போனேன் .அங்கு வீட்டுக்கு மேலே மாடி செல்ல பின் வழிப்படி இருந்தது .ஆனால் யாரும் பெரிதாய் உபயோகிப்பது மாதிரி தெரியவில்லை .அந்த படிக்கு அருகில் கீழே நின்று பேசலாம் என்று போனை ஆன் செய்யும்போது அந்த படிகளில் ஓரத்தில் சாந்தியின் மகள் உட்கார்ந்து இருப்பதுவும் போனில் சுவாரசியமாக, முகம் பிரகாசிக்க சாட் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது . வெளியிலிருந்து பார்த்தால் சுலபமாக தெரியாத இடம் அது. என்னைப் பார்த்ததும் மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு .மீண்டும் அவசரமாக செல்லுக்குள் விட்ட இடத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டது அந்தப்பெண். 

மீண்டும் போன் பேசிவிட்டு உள்ளே வந்தேன்.

 தாழ்ந்த குரலில்  சாந்தி யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
 என்னிடம்  பல பேர் வந்து செய்முறைகள் செய்யவும் , பணம் வைத்துக் கொடுக்கவும் துணியெடுத்துக் கொடுக்கவும்  கேட்டார்கள்  என் வீட்டில் அவரே இல்லை நீங்கள் துணி எடுத்துக் கொடுப்பதும் ,விருந்துப் போடுவதும் செய்தால் ஒரு நாள் உங்கள் வீட்டிலும் நான் திருப்பி செய்ய வேண்டி வரும் அது என்னால் முடியாது எனவே வேண்டாம் கோவித்துக்கொள்ளாதீர்கள் என்று பக்குவமாய்  சொல்லி அனுப்பி விட்டேன்  என்றாள்.

சாந்தி சொன்னதை நண்பர் கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை. 

காலம் எனும் சதுரங்கம் நமக்கு  எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும்,நாம் அதை புரிந்து கொள்ளாமல் சதா காலத்தையே ஏமாற்றக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறோம் !

வியாழன், 3 செப்டம்பர், 2015

எதிரணிக்கும் நடுவர்



பொதுவா நம்ம லோக்கல் அணிகளில் கார்க் மற்றும் ரப்பர்ப் பந்துக் கிரிக்கெட்டுக்கு உப்புக்குச் சப்பாணியைத்தான் அம்பயரா நியமனம் செய்வது வழக்கம் .ஆறு கல்லைப் பெறக்கிக் கையில் வைத்துக் கொண்டு பௌலிங் கிரீஸ் கோடு போட ஒரு குச்சியை வைத்துக் கொண்டு,அதே குச்சியில் ஓவர் கணக்கும் எழுதிக் கொள்வதும் முக்கியமான வேலைகள் ! .ஆனால் கிரீஸ் நோ பால் கொடுப்பது அடிக்க முடியாத அல்லது அடிக்கத் தெரியாத பந்துக்கெல்லாம் வைடுப் பால் என்று கூச்சலிடும் பேட்ஸ்மேன்களை சமாளிப்பதும் ,சில சமயத்தில் லெக் அம்பயர்ன்னு ( எதற்கும் அணியில் பயன்படாத உப்புக்குக் கூட இல்லை ஒப்புக்குச் சப்பாணி ) இல்லாத போது அவன் வேலையும் சேர்த்துப் பார்த்து .நெஞ்சுக்கு வரும் சாதரண ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடித்து,அவுட் ஆனதும் நோ பால் கேட்டு வெளியே போக மறுக்கும் பேட்ஸ் மேன்களிடம் தாவுத் தீர்க்கும் வேலைதான் மிகக் கஷ்டமான நடுவர் வேலை .

 அந்த வேலையை நான் பார்க்கப் போனது கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டதை விடப் பெரிய விபத்து .ஒரு சமயம் நாங்கள் அதிகம் விளையாடும் அல்லது அனுமதிக்கப்படும் திண்டுக்கல் பப்ளிக் ஸ்கூல் கிரவுண்டில் எனக்குக் குறி வைத்து விக்கெட்டுக்கு அழகாக வீசப்பட்ட பந்தை ஏறி அடிக்கிறேன் என்ற பெயரில் முன்னேற, பந்துத் தாடையைப் பதம் பார்த்தது சாதாரண அந்தப் பந்தை வீணாகப் பாடி லைன் (Bodyline) பந்தாக்கி ஒன்றரை இன் சதைக் கிழிந்து ரத்தம் வந்து நிற்கவில்லை.ஃபேமிலி டாக்டரிடம் போனால் வீட்டுக்கு விசயம் போய் விடும் .மெனெக்கெட்டு டாக்டரே காரை எடுத்துக்கொண்டு நேரில் போய்ச் சொல்லிவிட்டுத்தான் அடுத்தப் பேசண்டைப் பார்க்கப்போகும் அளவுக்கு நல்ல மனுசன் அவர் .எனவே ஜி ஹெச் போனோம் .அங்கு நண்பர் வரிசையில் நின்றுச் சீட் வாங்கி ,டாக்டரைப் பார்த்து,அவர் இன்னும் கொஞ்சம் இழுத்துக் காயத்தை இரண்டு இன்ஞ்சாக மாற்றித் தையல் போட அனுப்ப (அங்கும் கெட்ட நேரம்) ஒரு ஆண் உதவியாளர் மிகச் சாவதானமாகப் பக்கத்திலிருப்பவரிடம் விலா வாரியாகப் பேசிக் கொண்டே வலிக்க வலிக்கத் தையல் போட்டார் .அசங்கதப்பா தையல் விழாது என்ற அலட்டல் வேறு வலியை விடக் கடுப்பேற்றியது .ஒரு வழியாய்த் திருப்பி அடுத்த வாரமும் விளையாடப் போனால் எல்லாப் பந்தும் தாவாங் கொட்டைக்கு வீசப்படுவதாக ஒரு பிரம்மை அடிக்கடி வந்தது .( எல்.பி.டபில்யூ இல்லாததால் ) எப்போதும் போல்டாகாமல் பட்டோடி நவாப்புக்கு இணையாக விளையாடும் நான் (!) அன்று பார்த்து விக்கேட்டே எடுக்காத ஒரு ஸ்பின்னரிடம் இரண்டடித் தூரம் ஸ்டிக் பறக்க, வெளியேற்றப்பட்டேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த வழியாகப் போன இன்னொரு டீம் மேட்ச் கேன்சலாகி எங்களோடு விளையாடக் கேட்க எங்கள் டீமில் நல்ல அற்புதமான ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும் இன்று திண்டுக்கல்லில் மாதா எலெட்ரானிக்ஸ் உரிமையாளரக இருக்கும் செல்வராஜ் ,ராபர்ட் சகோதரர்கள் ,எலும்பு மூட்டுச் சிகிச்சை மருத்துவர் ஐயப்பன் டாக்டரின் தம்பி கார்த்தி ,எல் ஐ.சி ஏஜென்ட்களின் செயலாளார்க் கணபதி ,வெங்கடேஸ் சைக்கிள் மார்ட் வெங்கடேஸ் ,சென்னையில் இப்போது சுகாதாரக் கண்காளிப்பாராகக் கோவிந்தராஜ் ,பின்னாளில் வெறும் கேட்டரிங் மட்டுமே படித்து அமெரிக்கக் கப்பலில் உலைகையே வலம் வந்த சதீஸ் போன்ற எல்லோரும் எங்கள் அணீயின் தூண்கள். ஆனால் பலரும் அணியில் ஒரு பொழுதுப் போக்குக்காக விளையாடுவதால் அடுத்த அணியுடன் சீரியஸாகப் போட்டியில் போராடுவதை விரும்பாதவர்கள் .அதிலும் முக்கிய இடங்களில் இருப்பதால் சின்னப் பையன்களுடன் போட்டியிட்டு முடிவு (சென்னை 600028 படத்தில் வருவது மாதிரி) ஊத்திக் கொண்டால் என்ன செய்வது என்று ஒரு பயமும் அப்புறம் எதாவது அழுகுனி ஆட்டம் ஆடிச் சண்டை வந்து விடும் போன்ற இத்யாதிக் காரணங்களால் வெளி அணிகளுடன் பொதுவாக ஒத்துக் கொள்வதில்லை ஆனால் அன்று அப்படி விட முடியவில்லை .காரணம் எங்கள் அணியிலே பலரும் வரவில்லை .எனவே பால் மேட்சுக்கு ஒத்துக் கொண்டோம் .

டாஸ் வெற்றிப் பெற்றுப் புது அணியுடன் மோதுவதாலும் எங்களுக்கு இது பழக்கபட்டப் பிட்ச் என்பதால் பந்து வீச்சைத் தேர்வு செய்தோம் பொதுவாக இடக்கைப் பந்து வீச்சாளனான எனக்கு இருபது ஓவர் மேட்ச்சுகளில், எட்டு ஓவருக்குப் பிறகுதான் பந்து வீசும் வாய்ப்பு வரும் அதுவும் முன்னனிப் பவுலர்கள் அல்லது டீம் கேப்படனுக்கு நெருக்கமான எதுக்கு வீசுகிறோம் என்று தெரியாத சில பவுலர்கள் எதிர் அணியிடம் அடி வாங்கி நல்ல ரன் கொடுத்துப் பேட்ஸ்மேன்களை ஃபாமுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு (அடி வாங்க) பந்து வீச்சுத் தருவது வழக்கம் .அன்று அதனால் என்னை நடுவராக அணி நிற்கச் சொன்னது என் அணி .கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது .பொதுவா நான் உலகக் கிரிக்கெட்டில் கூட எந்த நாடு விளையாடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள மாட்டேன் அவர்கள் எப்படி வியூகம் வகுத்து ஒருங்கிணைந்துப் போட்டியை நகர்த்துகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வேன் .அப்படி இருக்கும் நான் விளையாட்டு ஆர்வத்தில் எத்தனை பந்துகள் போடுகிறார்கள் ,மொத்தம் எத்தனை ஓவர் போடுகிறாகள் ,ஒரு ஆள் எத்தனை ஓவர் போடுகிறான் ,ரன் அவுட்டுக்குப் பக்கவாட்டுக்கு நகர்வது ,கையில் இருக்கும் பந்து வீசும் கணக்குக்குக் கை மாற்றிக் கல் வைத்துக் கொள்வது முடியுமா என்று தெரியவில்லை என்பதே என் பயத்திற்கான காரணம் .அதை விட என் அணி ஆள்களிடம் கெட்டப் பெயர் வந்து விடக் கூடாது என்ற சட்டச் சிக்கல் வேறு இருக்குதே.

ஆனால் Think Of the Devil and there He Appears என்ற வாஈயம் எனக்காக்காவே எழுதப்பட்டது போல ! ஐந்து ஓவர் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை .நானும் என்னை ஏதோ இரு அணிகள் விளையாடுவதாகவும் அதற்குத் தேர்வு ஆனால் ஆறாவது ஓவரில் அந்த டீம் எங்கள் பந்து வீச்சாளார்களைக் கணித்து விட்டது .அடித்து ஆடத் தொடங்கி விட்டார்கள்.ஏழாவது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த ஒரு பையனக்கு எங்கள் அணி ஒரு ரன் அவுட் கேட்க நான் மறுத்து விட்டேன் .ஒன்பதாவது ஓவரில் அந்த அணியின் ஸ்கோர் 43.விக்கெட் ஒன்று கூடப் போகவில்லை .எங்கள் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அதே நல்ல பேட்ஸ் மேன் தலைக்கு மேல் வந்த பௌன்சரைத் தூக்கி அடிக்க எல்லைக் கோட்டில் கேட்ச் ஆகும் முன்னே ,யாரும் கேட்க்காமல் நோ பால் என்று கூவி விட்டேன் .ஏதோ ஒரு அற்புதமான டைமிங் சென்ஸ் என்று என்னை நான் வியந்து கொண்டு இருக்கும் போது எங்கள் கேப்டன் என்னை முறைத்துக் கொண்டு இருந்த எங்கள் பவுலரைச் சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு , என் அருகே வந்து நோ பால் கொடுத்தது தப்பில்லை .அது அவர்களே கேட்க்கவில்லையே கிருஷ்ணா என்று மனசு நொந்தது போலக் கேட்டார் .அது தப்புதான் என்று என் புத்திக்கு உறைக்கும் முன் பத்தாவது ஓவரில் எனக்குப் பந்து வீசும் வாய்பு என்ற பெயரில் மெல்ல நடுவர் பதவியிலிருந்து கழட்டி விட்டு ஃபீல்டிங்கில் நிறுத்தி 13 ஆவது ஓவர் கொடுத்தார்கள் .

மன நிலைச் சரியில்லாமல் பந்து வீசப் போய் முதல் பாலுக்கு லெஃப்ட் ஆர்ம் அரவுண்ட் ஸ்டிக் என்று சொல்ல மறந்து விட்டேன்.கிரிஸ் நோ பால் கொடுத்து நானும் டேவிட் செப்பர்டுதான் என்று என் அணிக்காரர் நிரூபித்தார். நோ பாலுடன் ஏழு பந்து வீசி மூன்று ரன் கொடுத்தேன் .ஆனால் என் சகப் பந்து வீச்சாளார்கள் எட்டாவது வள்ளலாக ரன் கொடுத்தும் ,எனக்கு வாய்ப்புத் தரவில்லை .ஆனால் என் மீதான என் அணியின் கோபத்தை என் அணிக்காரகள் கவனித்தார்களோ இல்லையோ எதிரணியின் துணைத்தலைவன் கவனித்துக் கொண்டே இருந்து இருக்கிறான்.ஒரு ஆறுதலுக்காக எனக்கு 19 ஆவது வீச அழைத்தார்கள் .ஒரு விக்கெட் 7 ரன் கொடுத்தேன் .என் கேப்டன் செல்வராஜ் என் அண்ணனின் நண்பர் என்பதால் அந்தக் கோபத்தை மறந்து விட்டார்.ஆனால் சொந்த அணிக்கு விசுவாசம் இல்லாதவன் போலப் பலரும் என்னிடம் பேசவில்லை .மீண்டும் எதிரணிப் பந்து வீச வரும் முன் செல்வராஜ் ( எங்கள் கேப்டன் ) அவர்களிடம் என்னை மெயின் அம்பயராக நிற்க அனுமதிக் கேட்டார்கள் .அவர் அணியின் மற்றவர்களைப் பார்த்தார் .நம் பேட்ஸ்மேன்களுக்கு பேராபத்து என்பது போல அவர்கள் கண்களாலே வேண்டாம் என்றார்கள் .ஆனால் செல்வராஜ் அண்ணன் சரி என்று அனுப்பி வைக்கச் சம்மதித்தார் .ஆனால் நான் போகும் முன் என்னை அருகே அழைத்து , பயப்படாதீங்கக் கிருஷ்ணா , ஆனால் அப்பீலுக்கு அப்புறம் சரியா இருந்தா முடிவெடுங்க என்றார் .அது எனக்கு ஆறுதலாக இருந்தது .

நல்ல வேளை அந்தப் போட்டியில் நாங்களே ஜெயித்தோம் .எங்கள் அணியின் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டு இருந்த சுரேஸ் ( சின்னக் கவாஸ்கர் என்று அழைப்போம் ) நின்று நிதானமாக் 83 ரன் எடுத்துப் பிரித்து மேய , மூன்று விக்கெட் இழந்து 17 ஆவது ஓவரிலே வெற்றிப் பெற்றோம். .அந்த அணியில் நல்ல பவுலர்கள் இருந்தும் புதுப் பிட்ச் கைக் கொடுக்காததால் எங்கள் அணியிடம் எளிதாகக் கொஞ்சம் டஃப் கொடுத்துத் தோற்றுப் போனார்கள் .எனக்கும் முடிவெடுப்பதில் மிகப் பெரிய பிரச்சனை வரவில்லை. .எதிரணித் தோற்று விடைப் பெறும் போது அந்த அணியின் அத்தனை பேறும் எனக்குத் தேடித் தேடிக் கைக் கொடுத்தது, இன்னொரு பெரிய ஆறுதல் .பின்னாளில் எதிரணி அம்பயர் வேலைத் திருப்பூர் வந்த பிறகும் தொடர்ந்தது .நான் வேலைப் பார்த்தக் கம்பெனியின் மூன்று யூனிட்டிலும் அற்புதமான கிரிக்கெட்டர்கள் இருந்தார்கள் .ஆனால் வெறியர்கள் .விடிய விடிய வேலைச் செய்தப் பிறகும் (கல்யாணம் ஆனப் பலரும் இதில் இருந்தார்கள் ) கட்டாயம் விளையாட வருவார்கள் .ஒரு டோர்னமெண்ட்டில் நான் கேப்டனாக இருந்து ஃபைனலில் பாச்சாங்காட்டு அணியுடன் மோதி ரன்னர் கப் வாங்கி எனது அருள்புரம் யூனிட்டில் ( இப்போது சேடப் பாளையம் யூனிட்) வைத்து விட்டு வந்தோம்
.
என்னதான் இரண்டு அணிகளும் விளையாடும் வரை கால் வலிக்க நிற்கும் கோட் ஸ்டாண்ட் வேலை அம்பயர் வேலையாக இருந்தாலும் எனக்கு அம்பாயர் வேலையில் மிகுந்த ஈடுபாடு வந்து நானே விரும்பி ஒட்டிக் கொள்ள முக்கியக் காரணம் இருந்தது . முதலில் விளையாட்டை ரசிக்க முடிந்தது இரண்டு அணிகளுக்கும் அம்பயாராக இருக்கும் போது நம்மைப் பொதுவாய்ப் பார்த்தார்கள் அதனால் அவர்களின் வெளிப்படையான பேச்சுக்களில் அணிகளின் திட்டமிடல்கள் தெளிவாகப் புரிந்தது. எந்தப் பவுலருக்கு என்ன ப்ளேஸ்மெண்ட்டில் ஃபீல்டர்ப் போடுவது, எப்படிப் பேட்ஸ்மேன் ஆடினால் எங்கு மூவபிள் ஃபீல்டர்ப் போடுவது அவன் தகுதி ,அடிக்க ஆரம்பித்தால் மிக்ஸிங் பவுலர்களைக் கொடுத்துத் திசைத் திருப்புவது ,போன்ற உலகத்தர நுட்பங்கள் அருவி போல அந்த இடத்தில் கிடைத்தது .எந்த அணி எதில் பலம் எதில் பலவீனம் என்பது போன்ற கணிப்புகள் எப்படிச் செய்கிறார்கள் மிகச் சுலபமாகப் புரிந்தது. .நல்ல பேட்ஸ் மேன்களின் ஃபுட் மூவ் கிட்ட இருந்து பார்க்க வரப் பிரசாதமாகக் கிடைத்தது .நல்ல பவுலர்கள் எப்படிப் பால் வீசி விக்கெட் எடுக்கத் திட்டமிட்டுப் பந்தைப் பிட்ச்சில் வைக்கிறார்கள் என்பது போன்ற பல வெற்றி ரகசியங்கள் அம்பயர் ( என்ற கல் பொறுக்கி ) இடம் நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பில் கொட்டிக் கொடுத்தது .ரகசியமாக எல்லோரின் திறமையையும் ரசிக்கச் சிறந்த இடமாக இருந்தது .யார் நல்லா விளையாண்டாலும் ரன்னர் பக்கம் வரும் போது பாராட்ட முடிந்தது .முதல் தர கிரிக்கெட்டை இன்றும் நான் ரசிக்க,புரிந்து கொள்ள, விவாதிக்க அன்று எதிரணி நடுவராக நான் நின்றப் போதெல்லாம் கற்றுக் கொண்ட பாடம்தான் உதவுகிறது .அவ்வளவு ஏன் என் பையன் என் அப்பாவுக்குக் கிரிக்கெட் தெரியும் என்று அவன் வயது பசங்களிடம் சொல்லிக் கொள்ள இது உதவியது .

பேக் வாய்ஸ் !

யாருப்பா அது ,ஏதோ இண்டர் நேசனல் கிரிக்கெட் அம்பயர் ரேன்ஞ்சுக்கு அனுபவம் எழுதறயான்னு ?

பதிலுக்கு கூட்டத்தில் எந்த சத்தமும் இல்லை!

ஒரு வேளை எனக்கு மட்டுமே கேட்கும்  மனப் பிராந்தா ?  

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

செருப்புதான், ஆனாலும் .

.
எப்பவாவது முக்கியமான வேலை இருக்கும் போது உங்கள் செருப்பு அறுந்துத் தொங்கி ,அடுத்த அடி எடுத்து வைக்கும்போது குடிகாரன் போலத் தள்ளாடும் நிலை வந்தால் என்ன செய்வது ? எங்காவது தைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வது என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் .அது சரிதான் ஆனால் தைக்க ஆள் தேடுவதுவும் யாரும் பார்க்கக் கூடாது என்ற கூச்சம் பிடுங்கித் தின்பதைத் தவிர்க்க ஹெல்மெட்டைக் கலட்டாமல் வேர்த்து நிற்கும் போது கடங்காரனைக் கண்டுபிடிப்பது போல நச்சுன்னு வந்து பிரேக் பிடித்து நின்று என்ன என்று நம்மையும் நம் தைக்கும் செருப்பையும் மாறி மாறிப் பார்ப்பவர்களை என்ன சொல்வது விதியின் விளையாட்டு என்பதைத் தவிர ? 

செருப்புதானே வீசியெறிந்து விட்டுப் புதுசு வாங்க வேண்டியதுதானே என்று
நீங்கள் யோசித்துக் கொண்டே படிப்பது (!) தெரிகிறது.ஆனால் செருப்பு விசயத்திற்குப் பின்னால் எனக்கு நிறையக் கோபம் பல பேர் மேல் உண்டு.கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தக் காலத்திலிருந்தே செருப்பைத் தொலைப்பது என் அணிச்சையான செயலாக இருந்தால் பரவாயில்லை யாராவது தூக்கிக் கொண்டு போவதுவும் அதற்குப் பதிலாக ஒரு பிய்ந்து போன செருப்புக் கூட விடாமல் போவது எந்த விதத்திலும் நியாயம் இல்லைதானே ?

வெறும் காலுடன் நடந்து வரும் போது யார் மீதெல்லாமோ கோபம் வரும் ! வெறும் காலோடு கூட நடந்து விடலாம் பிய்ந்து போன செருப்போடு  நடப்பது மிகப் பெரிய அவமானமாக தோணும்..என்ன செய்ய ? கிரிக்கெட் விளையாடும் போது மிகுந்த சிரமப்பட்டு ஃபாஸ்ட் பௌலராக உருவெடுத்தபோது கேன்வாஸ் ஷு அவசியம் தெரிந்தும் வாங்கப் பயப்பட்டபோது ஒரு சீனியர் தன்னுடைய இரண்டு ஷூவைப் பிரசண்ட் பண்ணினார்.

எனக்குத் தெரிந்துப் பள்ளியில் தொடங்கி வேலைக்குப் போகும் வரை கூட
இதை அனுபவித்து இருக்கிறேன். எங்கு இருந்துதான் எனக்குன்னு மட்டும் வருவார்களோ தெரியவில்லை அலாக்காக என் செருப்பை மட்டும் தூக்கிக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள் .இது நான் தனியாகப் போகும் போது மட்டுமல்ல அம்மா ,அப்பா ,அண்ணன்களோடு போகும் போதும் நடந்த பிறகுதான் அவர்கள் இதை ஒத்துக் கொள்ளத் துவங்கினார்கள். இப்படித்தான் தொலைத்தால் என் வீடுதான் என்ன செய்யும் இருக்கவே இருக்கு ரப்பர்ச் செருப்பு என்று படிக்கும் வரை காலம் தேய்ந்தது அதோடு செருப்பு ராசி இல்லாதவன் என்ற பட்டப் பெயர் மட்டும் இன்னும் தேயவில்லை.

திருப்பூர் வந்து ஊருக்குப் போகும் போதெல்லாம் வீட்டில் வீட்டுக்குள்
நுழையும் போது என்னோடு சேர்த்து என் செருப்பையும் பார்த்துப் பழகிவிட்டார்கள்.திரும்பி வரும் போது கட்டாயம் அப்பாவோ ,அண்ணனோ ஒரு புது ஜோடி வாங்கிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது . .திண்டுக்கல் தோல் தொழிலுக்கு நல்ல பெயர் வாங்கி இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது ஆனால் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை ’தோல்’ என்று திரு.செல்வராஜ் எழுதிய நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கிய பிறகு தெரிந்து இருக்கலாம்.(அந்த நாவலின் அவர்களின் துயர் நிறைந்த வாழ்வு எப்படிப் பட்டது என்பதை விளக்கமாக யதார்த்த மொழியில், 26 அத்தியாயங்களாக 117 கேரக்டர்களுடன் இந்த நாவல் வடிவமைத்துச் சொல்லியிருப்பார். )

கல்யாணம் மண்டபச் செருப்புக் காணாமல் போகும் கார்டூன்கள் பழைய ஆனந்த விகடனின் கூடச் சகஜமாக வெளிவரும் .இப்போதெல்லாம் பரவாயில்லை கல்யாண மண்டபங்களில் திருமண மேடைவரைக் கூடச் செருப்பு சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. கோவில்களில் இலவசச் செருப்பு ஸ்டாண்ட் இருந்தாலும் அங்கும் கை நீட்டிக் காசு கேட்பது தவிர்க்கமுடிவதில்லை என்பது வேறு விசயம். இங்குத் திருப்பூரில் புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் ஒரு அருண் ஐஸ் கிரீம் கடையில் Leave your foot wear outside என்பதைப் படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வந்து போகும் .

ஜாதகம் நம்புபவர்கள் அதில் திசாப் புத்தி மாறியப் பிறகு சில வயதில்
தழைகீழானப் பலன் தருவதாகச் சொல்வார்கள் அது போல மாறி இருக்கா அதில் செருப்புராசி வந்து இருக்கா (!) இல்லையான்னு ஒரு சோதனைக்காக வீட்டுக்குத் தெரியாமல் தகுதிக்கு மீறிய விலையில் ஒரு செருப்பு வாங்கினேன்.அதிலும் முக்கியமாக டிவிஎஸ் ஸ்டார்ச் சிட்டியில் பைக்கில் கியர் போடும் போது சாதாரணச் செருப்பு நழுவிவிடுகிறது என்பதால் பின் பகுதியில் வார் வைத்த சாண்டக்ஸ் டைப் வாங்கி வந்ததுதான் இப்படிச் சோதிக்கிறது.பாப்புலர் அன்கோவில்  டாட்டா ஸ்கைக்குப் பணம் கட்டி விட்டு படி தாண்டி ஜம்ப் பண்ணும் போது வடிவேலுக்குச் சொன்ன மாதிரிச் சண்டையிலக் கிழியாத சட்டைப் போல முன் பக்கம் பட்டெனே கிழிந்து சிரித்தது .எப்படியோ பஸ் ஸ்டாண்ட் போனால்  செருப்புத் தைப்பவர்கள் இருப்பார்கள் ஆனால் அங்கு நிறையபேர் வந்து போவதால் யாராவது பார்த்து விடுவார்களே என்று அலைந்து திரிந்து ,ஊத்துக்குளிப் பாலத்துக்குக் கீழ் ஒருவரைத் தேடிப் பிடித்துத் தைக்கக் கொடுக்கும் போதுதான் திசாப் புத்திச் சரியாய் இருந்து அந்தரம் சரியில்லை போல ! ஒரு ஆள் வந்து விசாரித்து விட்டுப் போனான் .

செருப்பைத் தைத்து முடித்து விட்டு அந்தத் தொழிலாளிக் கேட்டப் பணம் கொடுக்கும் போது ,போதுமா என்றேன் .இல்ல சார் சரியாய்த்தான் கேட்டு இருக்கிறேன் என்றார் .இல்லங்கப் பெரியவரே நல்லாத் தைத்து இருக்கிறீங்க இன்னும் ஒரு பத்து ரூபா சேர்த்து வைத்துக்கங்க என்று கொடுத்த  போது சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார் . அவராவது திருப்பித்தியாக இருக்கட்டுமே ?

செருப்புதானே என்று மிகச் சாதாரணமாக யோசிப்பவர்கள் ராமன் செருப்பை  வைத்து 12 ஆண்டு காலம் பரதன் ஆண்டான் என்கிற இராமாயண விசயத்தை நினைவுப் படுத்திக் கொள்வதும் முக்கியமான விசயம்தான் !