வியாழன், 23 ஜூலை, 2015

அவளும் மனசோடுதான் பிறந்தாள்


கிழக்குக் கோவிந்தாபுரத்தில் எங்கள் வீடு அந்தத் தெருவில் சேவல் பண்ணை

போல ஐந்து பசங்க உள்ள ஒரே வீடு .இதில் ஒரு துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த ஏரியாவில் எங்கள் தெருவில் மட்டும் இளம் பெண்களுக்குப் பற்றாக்குறை !.ஒரே ஒரு வீட்டில் அந்தத் தெருவுக்கே இரண்டு பெண்கள் மட்டும் இருந்தார்கள் அது டீச்சர் வீடு. அதில் இருந்த சின்னப் பெண் எங்கள் அம்மாவிடம் வந்து ஏதாவது பேசும் சாக்கில் உள்ளே அடிக்கடி உள்ளே எட்டிப் பார்துக் கொண்டு பேசும் .வலிய அது பார்க்கும் விதமே கொஞ்சம் குழப்பமாக இருக்கும் அதனால் அது எங்கள் பட்டியலில் கடைசி வரை வரவே இல்லை .

                        அந்தச் சமயத்தில்தான் அந்தப் பெண் எங்கள் தெருவுக்குக் குடியேறினார்.என்னை விடப் பல வயது மூத்தவர் .ஆனால் மிக அழகாக இருப்பார் .வந்து சில வாரங்கள் ஆன பிறகுதான் அந்தப் பெண் எப்போதாவது தெருவில் நடந்து வருவார்.அவர் வரும் போது .வைத்த கண் மாறாமல் எல்லோரின் கவனமும் அந்தப் பெண் மேலே நிலைத்து இருக்கும் .பெண்கள் எல்லோரும் ஏனோ தங்கள் கை வேலையை அப்படியே விட்டு விட்டுக் கூடக் கவனிப்பார்கள் . ஆண்கள் மெனெக்கெட்டு பார்ப்பதற்குப் பல காரணம் இருந்தாலும் பெண்கள் அவ்வளவு ஆர்வமாய்ப் பார்ப்பதற்கான காரணம் 20 வயதான எனக்கு அப்போது எனக்குப் புரியவில்லை என்னை விட அதிக வயதான எனது நான்கு அண்ணன்களுக்கும் இதே போல அதன் காரணம் புரியவில்லை ..
       
           அந்த வீட்டில் ஒர் வயதானப் பெண்மணிப் பகல் நேரத்தில் வந்து போவார் .தெருவில் வரும் காய்கறி வாங்குவதால் அந்த வயதானப் பெண்ணுக்குச் சமையல் மட்டுமே அங்கு வேலை என்று தெரியும் ஆனால் அந்தப் பெண்ணை ஏதோ தூரத்துச் சொந்தம் என்பதாகாவும் அந்த வயசாளிப் பெண் சொல்லிக் கொண்டதாக எதிர் வீட்டு விஜி அத்தைச் சொல்வார்கள் சில வாரங்கள் இப்படிப் போன பிறகு மாலை நேரங்களில் தெருவின் முனையில் ஒரு ஆட்டோ வரத் தொடங்கியது . எப்போதாவது கார் வந்தது . ஆட்டோ வரும் போது அதிலிருந்து , 25 வயதுக்குள் இருக்கும் ஒருவன் வந்து அந்தப் பெண் வீட்டுக்குள் சென்று விட்டு உடனே திரும்பி வந்து ஆட்டோவில் காத்து இருப்பான் ஆட்டோவில் நின்று கொண்டு இருக்கும் போதும், ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கும். சுமார் அரைமணி நேரத்திற்குள் மிக அழங்காரமாய் அந்தப் பெண் கிளம்பிப் போகும் போது பலர் பார்த்து இருக்கிறோம் .அந்தப் பெண் திரும்பி வரும் போது யாரும் பார்த்ததில்லை.மிக இரவானப் பிறகே திரும்புவார் .

     ஓரளவுக்கு அந்தப் பெண் பற்றித் தெருப் பெண்கள் கூடிக் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.அந்தத் தெருவில் அந்தப் பெண் வரும் போது மட்டும் பெண்கள் ,வாசலில் வண்டித் துடைக்கும் தங்கள் கணவன்மார்களின் கவனம் அங்குப் போவதை கண்டித்தார்கள் .அதுவரை அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியாத ஆண்கள் பல பேர் ஆர்வமாக விசாரித்து அதன் பிறகு இன்னும் அதிகமாகக் கவனிக்கவும் அதுவே பின்னாளில் காரணமாகவும் இருந்தது வேறு விசயம் .”பெர்முடா ட்ரே ஆங்கிள்” ( Bermuda_Triangle)போல அந்தப் பெண் ஆண்களுக்கும் ரகசிய முடிச்சாயும் இருந்தார் ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இனம் புரியாத உற்சாகமாகவும் இருந்தார். சமூகத்தில் மனிதர்கள் எப்போதும் தான் தவறு செய்யாத போது அதை மற்றவர்கள் மூலம் தங்கள் எண்ணங்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது எங்கோ படித்த ஞாபகம் .அந்தப் பெண் சமூகத்தின் சிலரின் ஆழ் மன எண்ணங்களின் தோற்றமாகவே பட்டார்

           வயதுக்கு உரிய அத்தனை எண்ணங்களும் எனக்கு அந்தப் பெண் மேல் தனியாக இருந்தாலும் , பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் கதையில் வரும் விஸ்வநாதன் சந்திக்கும் வசந்தா ( பக்கம் 107 -117 ) தன் வாழ்க்கைப் பற்றிப் வேதனை மிகுந்த பேசுவதுவும் ”தேவுடு சேசின பெள்ளியிது மா தேவனின் லீலையிது கலகல லாடே நவ்வுணுலோலா கண்ணீர் எந்துக்கோ” என்ற வரிகளே ஞாபகத்தில் வந்து நிற்கும்.

          அதைப் போல நான் சின்ன வயதில் கிராமத்தில் ( இப்போது திண்டுக்கல் -ஹவுசிங் ஃபோர்டு பகுதி ) வசித்த போது, பக்கத்து வீட்டில் ஆண்டாள் அக்கா என்ற என்னை விட ஐந்து வயது மூத்தவர் இருந்தார் .என் மேல் கொள்ளைப் பிரியமாக இருப்பார் .அதிக நேரம் எங்கள் அம்மாவுக்கு உதவியாக எங்களுக்குச் சகோதரி போல இருப்பார் .அவருக்குக் கல்யாணம் ஆனப் பிறகும் அதே கிராமத்தில்தான் இருந்தார் .கணவர் அங்குள்ள பூர்வீக வயல் வெளியில் விவசாயி .
அரசு அவர்கள் வயல் வெளியை ஹவுசிங் ஃபோர்டுத் திட்டத்தில் எடுத்த போது தாத்தன் முப்பாட்டன் சொத்தின் அருமை தெரியாமல் சதுர அடியைச் சில ரூபாய் கொடுத்த அரசின் விலையை அப்போது  மிகப் பெரிய பணமாகப் பெற்றுக் கொண்டு விவசாயம் மட்டுமே அறிந்த அவர் வேறு வேலைத் தெரியாமல் ஏதோ ஒரு சிறு திருட்டில் சம்பந்தப்பட்டு யாரோ ஒருவருக்காகப் போலிஸால் அடிபட்டு ஆறு மாதத்தில் இறந்து போனார் .அந்தப் பெண் அந்தச் சமயத்தில் இப்போது , இந்த எங்கள் தெருப் பெண் மாதிரி, அலைந்துச் சில வருடங்களில் ரகசிய நோயால் பாதிக்கப் பட்டு இறந்து போனார் .
   
        அந்த ஞாபகமும் அடிக்கடி வந்து, இந்தப் பெண் பேரில் ஒரு வித பரிதாபத்தையும் உருவாக்கி விட்டது.இதல்லாமல் அந்தப் பெண்ணால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது யாருக்கென்ன ? அவரை உட்கார வைத்து ஒரு நேரம் சாப்பாடுப் போட கூடத் தகுதி இல்லாத யாரும் அவர் பற்றிப் பேச உரிமை இல்லாத போல்தான் பட்டது .

              ஆனால் இந்த வாழ்க்கையும் அந்தப் பெண்ணுக்கு நிலைக்கச் சில பேர் விடவில்லை .அந்தப் பெண் ஒரு ஆளும் அரசியல்வாதியால் ஆக்கிரமிக்கப் பட்டார் .பல நாள் பகல் இரவு அனுப்பாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்து இருக்கிறார்கள் பிறகு அங்கு நடந்தது என்ன ? எப்படி நடந்து கொண்டார்கள் ? என்று தெரியவில்லை.மனம் வெறுத்துப் போய் ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு உடல் முழுதும் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னை எரித்துக் கொள்ள முயன்று வலி தாங்காமல் தெருவில் வந்து கத்திக் கதறி உருண்டார் .பல பேர் ஓடிக் காப்பாற்ற முயற்சித்து மருத்துவமனைக் கொண்டு சென்றார்கள் .ஏற்கனவே மனதால் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்ட அந்தப் பெண் உடல் , இறந்த பிறகு வீடு வரை கூட வரவில்லை ஏதோ ஓர் அனாதையைப் போல மீதி உடலை எரித்து விட்டார்கள் .சம்பிரதாயமாக ,காவல் துறை இறந்துப் போன அந்தப் பெண்ணைத் தற்கொலை என்று தனது கேஸ் ஃபைலை  அவள் வாழ்வைப் போலக் கொன்று மூடிவிட்டது  !

           இந்த பதிவுக்கு ஒரு படம் தேடும் போது  எழுத்து.காம் பகுதியில் - விருத்த இலட்சுமி எழுதிய விலைமாது   ( http://eluthu.com/kavithai/115304.html )
கவிதை   இடறியது .
 
நான் ஒரு வியாபாரி -அதில் 
நானே விலை பொருள் ! 

பல ஆண்களின் 
பொழுது போக்கு நான் !! 

எனக்கென்று ஒரு 
மனம் கிடையாது 
இருக்கவும் கூடாது !! 

கட்டிலில் கிடக்கும் போது 
கட்டையாகி போகிறேன் !! 

என்னை விற்ற கணவன் 
ஆண்மை இல்லாதவன் 
என்னை தொடுபவனோ 
நேர்மை இல்லாதவன் !! 

பத்தினி நான் என்று 
உரக்க கூறுவேன் 
படக்கென்று நானே சிரிப்பேன்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக