செவ்வாய், 30 ஜூன், 2015

தலைக்கவசம் - உயிர்க்கவசம்தான்

 இன்று ஒவ்வொரு வீட்டில் சட்டி வைத்துத் தோசை வார்த்தார்களோ இல்லையோ எல்லோரின் தலையிலும் தலைக் கவசச் சட்டி கவிழ்க்கப்பட்டு இருந்தது .பெண்கள் எல்லாவிதத்திலும் ’மேட்சிங்’ போட்டு இருந்தாலும் பாவம் ட்ரெஸ்சுக்கு ஏற்ற கலரில் ஹெல்மெட் கிடைக்கவில்லைபோல ! மிகவும் சிரமப்பட்டு இன்றுதான் ஹெல் மெட் போட்ட பலர் ரோட்டில் இடமிருந்தும் சைடு வியூ தெரியாமல் மற்றவர்களை அணைத்தப்படி போய்க் கொண்டு இருந்தார்கள்.சிலர் ஹெல் மெட் சைஸ் தெரியாமல் வாங்கி அணிந்து கொண்டு ஃப்ரண்ட் வியூ கண்ணாடி வாய்க்கு வந்ததைச் சரி செய்து தூக்கி விட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருந்தார்கள் பாவம் !

யாரும் இனி ( ஒருமாதத்திற்கு) தமிழ்நாட்டில்
சட்டம் ஒழுங்குக் கெட்டு விட்டது என்று சதியமாய்ச் சொல்ல வாய்ப்பே இல்லை. உயிரை மதித்துத் தலைக்கவசம் அணிகிறார்களோ இல்லையோ சட்டத்திற்கும் அல்லது போலிசுக்கும் பயந்து 99 சதவிகித மக்கள் காட்டாயக் கவசமணிந்து அலைகிறாகள் அத்தனை பேருக்கும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி .என் கிருபாகரன் மேல் (அவர் பெயர்த் தெரியாமலேயே) கொஞ்சம் கோபமாக இருக்கலாம் .இன்று முதல் தமிழக மக்களை பாகுபலி சத்யராஜ் மாதிரி முடிசூடா மன்னர்களாக மாற்றி , மோட்டார் வாகனச் சட்டம் 1988 - பிரிவு 206 ன் 129 ப்படி இருந்த பழைய சட்டத்தைத் தூசித் தட்டி ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயத் தலைக்கவசத்துடன் ’சுத்த’ விட்டது அவர்தானே !

விபத்துக்களின் விளைவு தரும் பாடம்  ! 



தலைகவசம் நல்ல விசயம்தான். கடந்த ஆண்டுத் தமிழகத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 6419 பேர்க் கொல்லப்பட்டுள்ளனர் .எல்லோரும் ஹெல்மெட் இல்லாததால் மட்டுமே கொல்லப்படவில்லை அதுவும் ஒரு பாதிக்காரணம் .இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சந்திக்கும் விபத்துகளில் தலையில் அடிபடுவது மிகச் சுலபமாகச் சந்திக்க நேரிடுகிறது என்பது உண்மைதான் .இதற்கு அவசரச் சட்டம் கூடக் கொண்டு வரலாம்.ஆனால் சில விசயங்களில் இந்த விபத்துகளை இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் வேறு பல கேள்விகள் எழுகிறது ! சென்ற ஆண்டுச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் சராசரியாக நாளொன்றுக்குச் சாலை விபத்தில் 20 பேர்த் தலையில் மட்டுமே அடிபட்டு அனுமதிக்கப்பட்டார்களாம் .அதில் 15 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் 50 சதவிகிதமாம் .லைசென்ஸே 50 சிசி வரை 16 வயது வரைக்குட்பட்டவருக்கும் அதற்கு மேல் சிசி உள்ள வாகனம் ஓட்ட 18 வயது வேண்டும் என்கிறது சட்டம் ஆனால் நடைமுறையில் சென்ற ஆண்டு இந்தியாவில் 42453 இளைஞர்கள் மட்டுமே இந்தச் சாலை விபத்துக்களில் இறந்துள்ளதாகப் புள்ளி விவரம் வேறு பதில்களைத் தருகிறது. . இது எதனால் ? விபத்துக்குக் காரணமான அவர்கள் ஓட்டிய அதிகச் சிசிப் பைக்குகளின் புள்ளி விவரம் வெளிடப்படவில்லை என்பது வேறு விசயம்.

சரி இது ஒருபக்கம் .

சட்டம் நல்லதுதான், நல்லதுக்குத்தான். 

அரசாகட்டும் , நீதித்துறையாகட்டும் சட்டத்தை அமல் படுத்துவதில் காட்டும் அக்கறை ,வேகம் அது ஏன் போய்ச் சேரமல் பாதியில் கைவிடப்படுகிறது என்பதைக் கொஞ்சமாவது யோசித்தால் நல்லது.பல நன்மைகள் எல்லோருக்கும் போய்ச் சேர்வது இன்னும் சுலபமாகலாம்.
புதிய கார்ப்பரேசன் , நகராட்சி ,மாநகராட்சிச் சகல அந்தஸ்த்தும் ரியல் எஸ்டேடுக்கு வேண்டுமானால் அதிருஷ்டம். ( இன்னும் சில ஆண்டுகளில் இங்கு திருப்பூரை ஏதோ ரியல் எஸ்டேட் பெயரோடு அழைக்கும் கட்டயம் வந்து விடும் அபாயம் கூட இருக்கிறது ) ஆனால் வாகன ஓட்டிகளுக்குச் சாலை அமைப்புகள் அதற்கேற்றவறு , சாலைகளின் தரம் , சாலைகளின் விதி முறைகளை மீறி கடை கட்டிட ஆக்கிரமிப்பு ,எல்லா வேகம் மற்றும் ரக வாகனங்களும் ஒரே சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம், முக்கியச் சாலைகளில் வழிபாட்டுத் தளங்கள் , பள்ளிகள் ,கல்லூரிகள் ,பிரபல வியாபார ஸ்தளங்கள் எந்நேரமும் கையேந்திப் பவன்களைப் போலக் கூட்டம் வழியும்முக்கிய சாலைகளில் உள்ள மதுபான விற்பனைக் கூடங்கள் இதெல்லாம் விபத்துக்களுக்கு ஒரு சதவிகிதம் கூடவாக் காரணிகளாக அமையாதா ?
நம் சட்டம் இயற்றுபவர்கள் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் வேற்று மண்டலத்திலிருந்து சட்டெனெ குதித்தவர்களா என்பது மட்டும் தெரியவில்லை . இது நல்லதுதான் என்பது எல்லோரும் அறிந்ததை இதைச் சொல்ல வேண்டிய முறையை  நேரடியாக சொல்லவேண்டுமே தவிர சட்டம் என்ற நீதித்துறை பின்னால் ஒளிந்து கொண்டு மாய சதுராட்ட விளையாட்டை விளயாட வேண்டிய அவசியமும் இருக்காது.

சலிக்க வைக்கும் அரசுத் திட்டங்கள் .


சென்ற அரசு ஒரு ஆதார் என்றது - மக்கள் ஒருபக்கம் போட்டோ எடுக்க நாள் கணக்கில் வரிசையில் நின்றுச் சலித்தார்கள் .அடுத்த ஆட்சி வங்கிக் கணக்குக் கேஸ் மானியம் என்றது மீண்டும் ஓடினார்கள் .அப்புறம் பெண்களுக்குப் போஸ்ட் ஆஃபிஸ் இப்போது காப்பீடு ,நாளை வீட்டு லோன் இப்படி மத்திய மாநில அரசுகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களை அலைய வைத்து, ஆயுளைக் குறைத்துக் கொண்டு இருக்கிறது. இதைப் போலில்லாமல் இந்த ஹெல்மெட் விசயத்திலாவது நல்ல பல தரம் வாய்ந்த ஐஎஸ் 4151 எண்ணுள்ள வெள்ளை நிறத்தில் 4:3 அளவு ஐஎஸ்ஐ முத்திரையுடன் அதற்குக் கீழ் CM/L எழுத்துடன் ஏழு இலக்க எண்ணுடன் உள்ளத் தரமான ஹெல்மெட் தயாரிப்புக் கம்பெனிகளோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ரேசன் கடையில் ,சிறப்பு அங்காடிகளில் .மற்றும் தாற்காலிக விற்பனைக் கூடங்களில் , அரசே முன் நின்றுப் பெரியவர்களுக்குச் சிறுவர்களுக்கு எனத் தனித்தனியான அளவில் இந்த ஹெல்மெட் விற்பனையைத் துவங்கி இருக்கலாமே ? மக்களும் ஒரு மாத அவகாசத்தில் வாங்கி நிம்மதியாக அணிந்து செல்லும் வாய்ப்பைப் பெற்று இருப்பார்கள் இதை நீதி மன்றமே கூட வழிகாட்டல் செய்து இருக்கலாம்.சட்டம் பிழைக்குமோ இல்லையோ இம்மாதிரி அக்கறைகளால் எந்நேரமும் மருத்துவமனைகளை நோக்கி விரைந்து போய்க்கொண்டே இருக்கும் ஆம்புலன்ஸ் அவசரங்களைத் தவிர்க்கலாம் அதில் போகும் ஊசலாடும் உயிர் பயணம் குறையலாம் அல்லவா ?

நேர்மறை எண்ணங்கள் 


அதோடு முக்கிய இடங்களில் ஹெல்மெட் அணியாதவகள் கால் பரப்பி உடல் பிதுங்கிச் செத்துக் கிடக்கும் மோசமான எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைத் தவிர்த்துத் தலைக்கவசம் முறையாக அணிந்தால் தலை முடி உதிர்தல் கழுத்து வலித் தலைவலி வரும் வாய்ப்பைத் தவிற்கும் தலைகவசத்துக்கு உள்ளே மெல்லிய துணி ,பருத்தியிலான கைக்குட்டைத் தலையில் சுற்றி அணிவதால் தவிர்க்கலாம் என்பதையும்  தலைக்கவசம் ஒருவகையில் தலைப் பாதுகாப்புக்கு இருப்பது போல சாலைச் சத்தங்களிலிருந்து கொஞ்சம் காதுக்கும் மனதுக்கும் ஓய்வையும் கொடுக்கிறது . இது கவனத்தைச் சாலையில் செலுத்தி வாகனம் ஓட்டுவதற்கு வழிசெய்யும். குளிரிலிருந்து தப்பிக்கவும், தூசிலிருந்து தப்பிக்கவும், பூச்சிகள் போன்றவை கண்களையும், காதுகளையும் தாக்காமல் காக்கவும் கூட தலைக்கவசங்கள் பயன்படுகின்றன சொல்லலாமே.

அதோடு அலைபேசியை வெளியே தெரியாது என்பதால் உள்ளே வைத்துப் பேசுவது ப்ளுடூத் காதில் திணித்துக் கொள்வது காதின் ஆரோக்கியத்திற்குத் தவறு என்று, கொசு விளம்பதிற்குச் சூர்யாவை வைத்துப் பேசுவது போலத் தலைக்கவசம் உயிர்கவசமே என்று ஆர்யாவை வைத்துப் பேசலாமே ?. (இந்தத் தலைப்பு நல்லா இருந்தாச் சாலமன் பாப்பையாவுக்குச் சொல்லலாம்)
சரி இது அரசு விசயம் .

நம் கடமை 

சரியாகத் திட்டமிடாமல் நாமும் இனி வீட்டிலிருந்து ,ஆஃபிசுக்கு ,வேலைக்குப் பள்ளிக்குத் தாமதமாகக் கிளம்பி விட்டு நம் சொந்த அவசரத்தையெல்லாம் மூட்டையாய்க் கட்டிக்கொண்டு வந்து வேகமென்ற அவசரத்தில் சாலையில் கொட்டுவதைத் தவிர்க்கலாம் எப்போதும் நல்ல விசயம் வாசப்பக்கம் வரும் கெட்ட விசயம் கொல்லைப் பக்கம் வரும் என்பது யாரோ சொல்லி விட்டுச் சென்றது இந்த ஹெல்மெட் விசயத்திற்கு மிகப்பொருந்தும் ஹெல்மெட் அரசு கண்டுகொள்ளாத போது அதை அணிவதால் நமக்குப் பாதுகாப்பு என்ற எண்ணம் வருவதே நல்லது .சென்ற ஆண்டு இந்தியச் சாலை விபத்தில் பாதிப்பட்ட எண்ணிக்கை 67,232 பேரில் நாமோ நம் சொந்தமோ ,நட்போ கூட இருக்கலாம்.

இன்னும் சாலை விதிகளில் சொல்லப்படாத ஒரு தாரக மந்திரம் இருக்கிறது அது உங்களுக்கு மட்டும் ரகசியம் .

“உங்களுக்கு எதிரில் அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டி வரும் எவரும் புத்தித்தனமான முடிவு எடுப்பார்கள் என்று நம்பிவிடாதீர்கள் “ 

என்பதே அது . அதாவது உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .வேறு எதுவும் அப்புறம்தான் .

வெள்ளி, 26 ஜூன், 2015

அம்மாவின் இறுதிப் பயணம் .



முன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள்  அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .



        அப்போதெல்லாம் எனக்கு அலைபேசி அழைப்பு இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் ஒரு விதப் பயத்துடன் எடுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு இருந்தது .தந்தைக்கு மாரடைப்பு வந்த பிறகு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்ததில் நான்கு இடத்தில் அடைப்பு அதில் இரண்டு 90 சதவிதத்திற்கு மேல் இருந்ததும் , வேறு சில உடல் காரணங்களால் உடனே அறுவைச் சிகிச்சைச் செய்ய முடியாத நேரம் அது.அவரைத் தொடர்ந்து அம்மாவிற்கு உள்மூலம் சம்பந்தமாகத் தொடர் ரத்த இழப்பு உடல் பலவீனம் . இருவரும் பல வீனமான நிலையில் இருந்தார்கள் உணவும் மருந்தும் சொந்த அண்ணி அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிவதால் அவர்கள் மேற்பார்வையில் இருந்தது .

கடந்த ஆண்டு 25 ஜூன் அதிகாலை 4 மணிச் சுமாருக்கு அண்ணனிடமிருந்து ஃபோன் வந்தது . பதறித்தான் எடுத்தேன் . அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமிருப்பதால் ஐசியுவில் வைத்து இருக்கிறார்காள் .கூடவே தங்கி இருப்பதற்கேற்ப உன் மனைவியையும் அழைத்து வந்து விடு என்றார் . ஃபோனை வைத்து விட்டேன் ஆனால் ஏதோ ஒரு வெற்றிடம் மனதில் நிரம்ப, மீண்டும் அவரை ஃபோனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்றேன் .அவர் ஏதோ சொன்னார் .ஆனால் எனக்குக் கேட்டது அல்லது புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்.கிளம்பிவா என்பதுதான் அது .


          திண்டுக்கல்லில், நேரே ஜி.ஹெச்சுக்கே போய் விட்டோம் .என் வாழ்வில் அப்படி ஒரு நிலையில் அம்மாவைப் பார்ப்பது முதன் முறை எனக்கு .
உடல் நிலை முடியாத நிலையில் கூட எங்கள் ஐவருக்கும் உணவுச் சமைத்து விட்டுத்தான் ஒய்வெடுப்பது அம்மாவின் வழக்கம் .சொந்த ஊரில் விசேசம் என்றாலும் அன்று முழுவதற்குமான உணவு இருக்கும் .அதிகபட்சம் போன ஒரே நாளில் திரும்பி விடுவது அவர்கள் வாடிக்கை.அப்படிப் பட்ட அம்மாவை ஒருபக்கம் மூச்சுத்திறணலுக்கான ஆக்சிஜன் டுயூப் ,மறு புறம் இதயதுடிப்புக் கண்காணிப்புக் கருவிகள் ,குளுக்கோஸ் ஏற்றும் டுயூப் என்ற பல இணைப்புகளின் நடுவில் போராடிக் கொண்டு இருந்தும் உட்கார் என்று நிலைக்க முடியாத கண்களுடன் தான் படுத்து இருந்த பெட்டைக் காட்டினார்கள்.அது புரியவில்லை என்பதால் சிரமப்பட்டுச் சைகை செய்தார்கள் .எனக்கு என் பையனை அருகே அனுப்பச் சைகை செய்தார்கள் .அனுப்பினேன் .அவன் கைப் பற்றும் போது கண்ணீர் வழிந்தது. எனக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை இடத்தை விட்டு நீங்கவும் மனமில்லை.என் வெறித்த பார்வை என்னை மெல்லப் பலவீனப்படுத்தத் தொடங்கியது .கால்கள் நடுங்கியது .

பெரிய டாக்டர் வர்றாங்கக் கூட்டம் போடாதீங்க ,கவிதா சிஸ்டர் சொந்தமெல்லாம் கொஞ்சம் வெளியே நில்லுங்க அப்புறம் எங்கள டாக்டர் திட்டுவாங்க .
அங்கு உள்ளே பணிபுரியும் ஹெல்ப்பர்ஸ் சத்தம் போட ,அண்ணன் மகளை மட்டும் அம்மா அருகில் விட்டு விட்டு வெளியே வந்தோம் .

         மனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஹோட்டலில் உணவுச் சாப்பிட வைத்து விட்டு என் பையனுடன் திருப்பூர்த் திரும்பலாம் என மருத்துவமனைக்குக் கீழ் தளம் வந்தேன் .அதற்குச் சில வாரங்களுக்கு முன் இதே ஒரு வாரம் இரத்தக் குறைவு காரணமாக ஜி.ஹெச்சில் அம்மாவைச் சேர்த்து இருந்தபோது மனைவி ஒருவாரம் உடன் இருந்து திரும்பி இருந்ததால் அவர்களுக்குப் பழக்கம் ஜி.ஹெச் .அரைகுறை மனதுடன் உணவு சாப்பிட்டோம் .மீண்டும் மேலே வந்தோம் .ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒருக்களித்த நிலையில் முகம் திரும்பி, படுத்து இருந்தார்கள் .உடன் இருந்த அண்ணண் பெண்ணைக் கேட்டோம் .டாக்டர் வந்தார் ஏதோ ஓர் இன்ஞ்செக்சன் குளுக்கோசுடன் போட்டார்ப் போடுவதற்கு முன் ( சித்தியை ) நர்ஸ் அண்ணியிடம் ஃபோன் பண்ணிப் பேசினார் இப்பப் பத்து நிமிசமாத்தான் தூங்கறாங்க என்றாள். .பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் , உடன் இருப்பவரைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அறிவுறுத்தினார்கள் .நான் ஊருக்குத் திரும்புவதால் ஒருமுறை மீண்டும் அம்மாவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று உள்ளே அம்மா பெட் அருகே போனேன் .அங்கு ஏதோ ஓர் அமானுஸ்யம் கலந்த ஒரு வெறுமை இருந்தது .இதயத் துடிப்பு மானிட்டரை எதேச்சையாய்ப் பார்த்தேன் .அதில் வெறும் நேரான கோடு போய்க் கொண்டு இருந்தது.அங்கு அதற்கு அடுத்த அறையில் இருந்த நர்ஸ் கூப்பிட அண்ணன் பெண்ணிடம் சொல்லி அழைத்தேன் .வந்த நர்ஸ் மானிட்டரைக் காட்டியவுடன் பதஷ்டமானாள் .வெளியே ஓடினாள் எனக்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப் போவது போல இருக்க அம்மா ,அம்மா என்று மனம் பிதற்றியது .
யாரோ ஒரு டாக்டருடன் திரும்பவந்த அந்த நர்ஸ் ஏதோ மற்ற நர்ஸ்களையும் அவரசரமாக உடன் அழைத்துக்கொண்டாள் , அதற்குள் எங்களை வெளியேற்றினார்கள் அங்கு இதயத்திற்கு ஷாக் கொடுக்கும் முயற்சி நடந்தது .பல முறை அந்த முயற்சிக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டு டாக்டர் நர்ஸைப் பார்த்தார் . ஏதோ சொல்லி விட்டு மெல்ல வெளியேறினார் .இன்னும் சில நர்ஸ்கள் வந்து அம்மாவிடம் இருந்த இணைப்புகளை அகற்றத் தொடங்கினார்கள் .



          என்னால் என் புத்திக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டாலும் மனம் எதையோ ஏற்றுக் கொள்ள மறுத்தது .உடைந்துப் போனேன் .

எல்லோரும் அழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்த பையன் பாட்டிக்கு என்ன ஆச்சுப்பா ? என்றான்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

   எங்களைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை அதற்குள் அண்ணி வந்து நாம் உடனே அவர்களை ஆம்புலன்சில் கொண்டு போகவேண்டும் இல்லையென்றால் பிரேதப் பரிசோதனை அது , இதுவென்று என்று அலைகழித்து விடுவார்கள் என்றார் .
என்னைப் பெரிய அண்ணன் கூப்பிட்டு , நீ , உன் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அப்பாவிடம் சொல்லி அங்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் நாங்கள் உடனே இங்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறோம் என்றார்.

     அவர் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து வண்டியை நகர்த்தும் போதுதான் எனக்குள் சரெலென்று கத்தியைச் செருகியது போல ஒரு கேள்வி வந்தது .அப்பாவிடம் என்ன சொல்வது ? 58 வருடம் கூட வாழ்ந்த உங்கள் மனைவியை ஆம்புலன்சில் கொண்டு வருகிறார்கள் அப்பா என்று எப்படிச் சொல்வது ?
மனைவியைக் கேட்டேன் .நான் சொல்கிறேன் நீங்க வண்டியை எடுங்க என்றாள் .

         பாதி வழிப் போகும் போது என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை .அம்மா இனி இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவித்தது .சில இடங்களில் நிறுத்தி அசுவாசப்படுத்திக் கொண்டேன்.பையன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அப்போது கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை .எப்படிச் சொல்வது இரண்டு வருடதிற்கு இங்குத் திருப்பூர் வந்த அம்மா அப்பாவிற்குத் தெரியாமல் வேண்டாம் என்றும் மறுத்தும் கையில் சுருட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் பத்திரமா வச்சுக்க ,எனக்கு எதாவது ஒன்னுன்னா எங்கேயும் அலையாதே என்று சொன்ன அம்மா இப்போது இல்லை என்றும் திரும்பி வரமாட்டர்கள் என்பதையும் எப்படிச் சொல்வது ?


      அப்பாவிடம் சொல்வதற்கு முன் எப்படிச் சொல்வது என்று எனக்குள் பலவிதமாகசொல்லிப் பார்த்தேன் எதுவும் எனக்குச் சமாதனமாகவில்லை .
பார்த்தவுடன் வாப்பா எப்ப வந்தீங்க ? நேரா ஆஸ்பத்ரிப் போயிட்டு வற்றீங்களா என்று அவரே கேட்டார் . சொன்னேன் .அம்மாவுக்கு ரொம்ப முடியலைப்பா .ஆஸ்பத்ரியிலக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க .
என்னை நிமிர்ந்து ஒரு தரம் பார்த்தார் .அவருக்குப் புரிந்து விட்டது .அவர் அப்பா ஆச்சே ? சில நிமிடம் மவுனமாக இருந்தார் .போயிட்டியா என்னை விட்டுட்டு என்பது போல இருந்தது அந்த வெறுமை நிறைந்த பார்வையில் .சரி ஆகறதைப் பாருங்க என்றார் அமைதியாக .என்னால் அந்த நிமிடத்தில் இந்த உலகத்தின் எல்லா நிகழ்வின் மேலும் கோபமாய் வந்தது .அவர்களை இருவரையும் பிரித்துப் பார்க்கும் சக்தி என்னுள் இல்லை .

          வாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தது . ஃபிரீசர் பாக்ஸ் வரத் தாமதமானதால் அம்மாவை ஆம்புலன்சிலிருந்து எடுக்கவில்லை வைத்து இருந்தோம்.அப்பா வெளியே வரவில்லை .நாங்கள் பயத்தில் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தோம் .வெகு நேரம் குனிந்த தலையுடன் அமர்ந்து இருந்தார் .எனக்கு அப்போது சட்டெனெ நினைவுக்கு வந்தவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு அம்மா மருத்துவமனையில் சேர்த்தது மட்டும்தான் தெரியும் .அதற்கு நான் சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.அப்பாவுக்கு எங்களை விட அவர் மாதிரி நண்பர் உடன் இருப்பது இப்போது மிக முக்கியம்  .எங்களிடம் இறக்கி வைக்க முடியாத சுமை அவர் வந்தல் குறையலாம் அவரிடம் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டு  உடனே வரமுடியாவிட்டால் வண்டி அனுப்புகிறேன் என்றேன் .இல்லை உடனே வருகிறேன் என்றார்.


         வந்தார் .அவரைப் பார்த்தவுடன் அப்பா களங்கியது இன்னும் சில சமயத்தில் என் நினைவின் எழுந்து அறுக்கும்.அப்பாத் தன் தாய் ,தந்தை ,எங்களில் மூத்த அண்ணன் ஒருவர் இறந்தபோது கூடத் தளர்ந்து போனதை நாங்கள் பார்க்கவில்லை .எங்களுக்கு அம்மா மட்டும்தான் இல்லை இப்போது அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது .
ஃபிரீசர்ப் பாகஸ் வந்தது .அம்மாவை அதற்குள் கிடத்தினோம் .வாசலில் நிழலுக்குச் சாமியான போட்டு ரெடியாக வைத்து இருந்தோம் .அப்பா வெளியே வந்தார் ஃபிரீசர்க் கண்ணாடி மேல் கை வைத்து அம்மாவைச் சில நிமிடம் பார்த்தார் .அதற்குப் பிறகு பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டார் .
எங்கள் உறவினர் மூலம் அம்மாவின் கண் தானம் பெற அரவிந்தக் கண் மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்கள்.அப்போதுதான் எனக்கும் தெரியும் .அப்பாவிடமும் அனுமதிக் கேட்டேன்.சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார் . நான் மட்டுமே அவர்கள் கூட இருந்தேன் .

விழி வெளிப்படலம் வெண்படலம் தாண்டி ஒரு சவ்வு ஒன்றை விலக்கிச் சின்னதாய்க் கரண்டி மாதிரி ஒரு குழியாய் ஒரு சாதனம் வைத்து ஒவ்வொரு கண்ணையும் தோண்டி எடுத்து ஒரு சின்னக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டார்கள் .பிறகு மெல்ல நரம்பால் சுற்றித் தையல் போட்டார்கள் வந்த டாக்டருக்கு உதவியாக இரண்டு பெண்கள் இருந்தார்கள் அவர்கள் கண்களை அகற்றும் வரை அம்மாவின் உடலைச் சுற்றித் துணி மறைத்துப் பிடித்துக் கொண்டதில் அவர்களுடன் நானும் ஒருவன் .கண் தானம் சிறந்த விசயம்தான் ஆனால் அதைப் பார்க்கும் வலி மிகப் பெரியது.
என் நண்பர்கள் எல்லோரும் வந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .அது எனக்கே தெரியாது .அரசு எரியூட்டும் நிலையத்தில் நேரம் வாங்குவதிலிருந்து ,’காரியம்’ செய்யும் மருத்துவக் குலம் சார்ந்தவரை அழைத்துவருவது ,வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு,நீர்க் குடம் எடுக்க ஏரியா ஏரியாவாகக் கிணறு ,கைப் பம்பு எதுவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் அனுமதிக் கேட்டு ஓஸ் பைப் போட்டு அடுத்தத் தெருவில் தயார் படுத்தியது இன்னும் எனக்குத் தெரியாத பல வேலைகளை என் சகோதர்களுக்குக் கூடத் தராமல் தாங்களே முன் நின்று, செய்து கொண்டு இருந்தார்கள் . எங்களைப் போல அவர்கள் எல்லோரும் அம்மாவின் கையால் உணவுச் சாப்பிட்டவர்கள் .அம்மாவை உடலை வழியனுப்ப அவர்களே எனக்குத் தூணாய் நின்றது யாரோ என்னை ஒரு பக்கம் நிலழாய்த் தாங்கியது போல இருந்தது .
எனக்கு அங்கு நடக்கும் எல்லா விசயங்களையும் நான் பார்ப்பது போல என்னை யாரோ பார்ப்பதாகப் பல முறை உணர முடிந்தது .அந்த ஊசலாட்ட சிந்தனைத் தவிர்க்க முடியாமல் என் வாழ்வு முழுவதும் தொடர்கிறது

     வந்த சொந்தப் பந்தத்தில் யாரோவெல்லாம் என் உள்ளங்கை நீட்டி அந்தத் துயரத்தைப் பறிமாறிக் கொள்ளும் செயலின் போதும், அமைதியாய் இருக்கும் வீட்டில் , திடீரெனெ அப்போதைக்கு வந்த பெண்களுடன் , கூடி அழும்போதும் என்ன ஆச்சு இங்கு என்று நினைவுகளின் நழுவல்களைத் தொலைத்து அடிக்கடி மீட்டுக்கொண்டு தவிக்க நேர்ந்தது.அம்மா இனி இல்லை ,இதோடு முடிந்து விட்டது என்பது எங்கோ உள் ரணமாய் விடாமல் வலித்தது கொண்டே இருந்தது.


நேரம் குறிக்கப்பட்டது .
அம்மா எங்கள் எல்லோரையும் விட்டு நிரந்தமாகப் பிரிந்துச் செல்வதற்காகக் குறிக்கப்பட்டதான் நேரம் அது.
அதற்கான செய்முறைகள் நிறைவேறத் தொடங்கியது .அதில் ஒன்று அங்கு நீரைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்து வார்த்தைகளிலும் காசி ,காசி என்று சொன்னார்கள் அது பொதுவாகச் சகல இடத்து நீரினால் செய்யும் காரியங்களுக்குச் சொல்வது வழக்கம் ஆனால் அங்குப் பயன் படுத்தப்பட்ட நீர் ,அதற்குச் சில வாரங்களுக்கு முன் மாமனார்க் காசிச் சென்ற போது எடுத்து வந்த காசித் தீர்த்தமே அங்குப் பயன்படுத்தப் பட்டது .அம்மா போகும் போதும் அதிருஷ்டசாலிதான் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டது எனக்கு என்னவோ செய்தது .போகாமல் இருப்பவர்கள் ?
அம்மாவின் இறுதி மரியாதைப் பயணம் தொடங்கியது .! திண்டுக்கல் அறிவுத்திருக்கோவிலைக் கடந்து ரயில்வே பாலம் தாண்டி ஹவுசிங்போர்டு வீடுகளைத் தாண்டிப் பைப்பாஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டும் நிலையத்தில் முன் பகுதியில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டது வைக்கப்பட்டது.இறுதிச் செய்முறைக்காக.பெரிய அண்ணன் செய்தார் .உள்ளே எடுத்துச் சென்று இரண்டு தண்டவாளம் போன்ற அமைப்பில் கட்டைகள் அடுக்கி அதில் மேல் அம்மாவின் உடல் கிடத்திவிட்டு உடலை எரிக்கும் ஃபர்னேஸ் கதவு உயந்தது .யாரோ இருவர் பலம் கொண்ட மட்டும் அதனுள்ளே தள்ளிக் கதவை இறக்கினார்கள் .
எல்லாம் .முடிந்து விட்டது . அடுத்த நாள் அமாராவதி என்று லேபிள் ஒட்டப்பட்ட
           
           ஒரு மண் கலயத்தைத் தந்தார்கள் .அதற்கும் சில சிரார்தங்களைச் செய்து அதை எடுத்துக் கொண்டு கொடுமுடி ஆற்றில் விட்டுவிட்டு வந்தோம். நான்காம் நாள் திருப்பூர்த் திரும்பிய போது, பக்கத்து வீட்டில் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து விட்டு எனக்கு வந்த அகலாமான ஒரு கூரியர் கவர் கொடுத்தார்கள்
 .

           வீட்டுக்குள் சென்று  கவரைப் பிரித்தேன்.அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து - அம்மாவிடம் பெற்ற கண்ணுக்கான  ’கண்தானப் பாராட்டுச் சான்றிதழ்’  அது.

வாழும் போது இந்த உலகத்தில் படிக்காததால்  எங்கள் அம்மா எந்த சான்றிதழும் பெற்றதில்லை ஆனால்  இறந்த பிறகு இரண்டு  சான்றிதழ் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று.( இன்னொன்று இறப்புச் சான்றிதழ் ).

வாழ்ந்த அடையாளம் .

இருக்கும் வரை அம்மா எங்கள் எல்லோரையும் வாழவைத்தார்கள் .இறந்த பிறகும் யாருடைய வாழ்விலோ ஒளி கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இப்போதும்…

எந்த அம்மாக்களுக்கும், எப்போதும் சாவில்லை …




செவ்வாய், 16 ஜூன், 2015

பக்கத்து வீட்டுக்காரன் ஜெயிச்சிட்டான் ஸ்டுப்பிட் ?


சமீபத்தில் ஒரு மொபைல் கம்பெனி இந்த விளம்பரம் சக்கை போடு போடுகிறதே அது போல இல்லை இந்த பதிவு .இது கொஞ்சம் விவகாரமானது .நான் வசிக்கும் காம்பவுண்டில் எங்களோடு சேர்த்து மூன்று குடும்பங்கள் .இதில் ஒருவர் சமீபத்தில் கல்யாணம் ஆனவர் .இன்னொருவர் ஒரு சிட் பண்டில் வேலை பார்க்கிறார்.அவர் வீட்டை கடந்துதான் என் வெளி வாசலுக்கு நான் வர வேண்டும் .அந்த பக்கத்து வீட்டுக்காரர் மனைவியும் என் மனைவியைப் போல வேலைக்கு செல்வதால் ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவுதான் அந்த காம்பவுண்டில் . நேரமற்ற நேரத்துக்கு சொந்தக்காரன் நான் மட்டும்தான் அங்கு என்பதால் மதியம் எப்போது என் அலுவலக வங்கி மற்றும் பிற வேலைகள் முடிகிறதோ அப்போதுதான் வீட்டுக்குப் போவேன் .அப்படி ஒரு நாள் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது .காம்பவுண்ட் வாசலில் என வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே பக்கத்து வீட்டை கடந்து போகும் போது ,பக்கத்து வீட்டு டிவி சத்தம் வெகு அதிகமாக கேட்டது .அந்த சிட் ஃபண்டில் வேலை பார்ப்பவர் மனைவி , தனது வெளியூரில் தாய்  வீட்டில் வளரும் தனது குழந்தைகளை பார்க்க நேற்றுத்தான் சொல்லி விட்டுச் சென்றார்.


                  வீட்டுக்குள் போய் உடை மாற்றும் முன்னர் ‘ சார் போஸ்ட் ‘ சத்தம் அழைக்க துண்டை தோளில் போட்டுக் கொண்டு மெல்ல வெளியே வந்தேன்.அதற்குள் வாசலில் புதிய தலைமுறையை வாசலில் போட்டு விட்டு தனது கடமையை செவ்வனே செய்து விட்டு  சென்று விட்டார் !. குனிந்து எடுக்கும் போதுதான் பக்கத்து வீட்டு வாசலில் கிடந்த இரண்டு ஜோடி செருப்புகளைப் பார்த்தேன் .ஒரு ஜோடி வழக்கமான சிட் ஃபண்டுக்காரருக்கு சொந்தம்  .இன்னொரு ஜோடி பெண் செருப்பு யாருடையது ? ஒரு வேளை ஊருக்குப் போன பக்கத்து வீட்டுக்கார பெண் திரும்பி விட்டாரா ? இல்லையே அவர் ஊர் சென்று திரும்பி இந்த வாரக் கடைசியில்தான் வருவேன் வாரம் ஒருமுறை வரும் கார்ப்பரேசன் தண்ணிர் வந்தால் தன்னுடைய வீட்டுக்குகாரரிடம் ஃபோன் பண்ணி சொல்லச் சொன்னாரே .அப்படியானால் ? யாராவது சொந்தமாக இருக்கலாம் என மனம் சமாதானம் சொன்னாலும் அந்த வழக்கத்துக்கு மாறான டி.வி சத்தம்  ஏன் என்று இன்னொரு கேள்வியும் உறுத்தியது !


            உணவு உண்டு கொண்டே டி.விப் பார்த்தால் அவசரமாக உணவு வாயில் அரைப் படுவதால் உமிழ் நீர்ச் சுரப்பு உணவோடு சேராமல் செரிமான சக்திக் குறைபாடு வரும் எனும்யோகா வகுப்பின் அறிவுரைகளை மீறுவது எப்போதாவது உண்டு .அன்று அப்படி டி.வி ரிமோட்டைத் தட்டவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கோபித்துக் கொண்டுஇணப்பைத் துண்டிப்பதும் ஒரு சேர நடந்தது. சரி மனசாட்சியை மீறினால் இதுதான் தண்டனை எனச் சமாதானப் படுத்திக் கொண்டு டிவியை நிறுத்தினேன் .வெளிவாசலுக்கு வந்து கைத் துடைக்கும் துண்டை எடுக்கும் போது தெளிவாகப் பக்கத்து வீட்டுக்குள் ஒரு பெண் சத்தமாகச் சிரிப்பதுவும் கூடவே சிட்ஃபண்ட்காரர்க் கிசுகிசுப்பதுவும் கேட்டது திடீரெனெ மின்சாரம் நின்றுப் போனதில் அவர்கள் டிவி நின்று போனது தெரியாமல் சத்தமாகப் பேசிக் கொண்டார்கள் .

     
    இருக்கும் யுபிஎஸ் மின்சாரத்தில் ஃபேன் ,டிவி ,டுயூப் என எரிந்துத் தீர்ந்து போனால் என்னைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் பையனுக்குப் படிக்க மின்சாரப் பற்றாக்குறை வந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே விரைவாகச் சாப்பிட்டு விட்டு மதிப்புரைக்காக எழுத வேண்டிய யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்’ வாசிக்கத் தொடங்கினேன்.வழக்கம் போலக் குறிப்பெடுத்துக் கொண்டே வாசித்துக் கொண்டு இருக்கும் போது , அந்தக் கதையின் ஒரு பகுதியில் யாராலோ கர்பமாகிச் சோரம் போகும் ஒரு பெண்ணின்தாய்த் தனது ஊரை விட்டு அடுத்த ஊர் எல்லைக்குப் பரிதவிப்பில் போகும் போது குள்ள சித்தனைத் தரிசிக்கும் பகுதி வந்ததை வாசிக்கும் போது, எனக்குப் பக்கத்து வீட்டு வாசலில்கிடந்த அந்த ஒரு ஜோடிச் செருப்புச் சிந்தனையை இடறியது.என்னதான் மனம் யோகா , ஆன்மீக வாசிப்பு என்று உயரே பறந்தாலும் ஊர்க் குருவியின் லட்சணம் போல,இதற்கு முன் இருக்கும் எண்ணங்கள், கீழே தானே இழுக்கிறது !
பக்குவப்படாதப் பாலியல் சிந்தனைப் பலவீனமானவனுக்குத்தான் வரும் என்ற ஓஷோவின் சிந்தனை இடறிய என்னைக் காப்பாற்ற, மனதின் சிறு குறுக் குறுப்பை மீறி மீண்டும் வாசிப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் நேரம் கரைந்து போனது .


            நேரம் போனது தெரியாமல் வாசிப்பில் என்னைத் தொலைத்து மீட்டுக் கொண்டு அவசரமாக அலுவலம் ஓடினேன் .போகும் போது கண் எதேச்சையாகப் பக்கத்து வீட்டுவாசலில் என் மனக் குளத்திற்குள் கல்லெறிந்த (அல்லது செறுப்பெறிந்த) அந்த ஒரு ஜோடிச் செருப்பைத் தேடியது .அங்கு அது இல்லை . சிட்ஃபண்ட்காரர்ச் செருப்பு மட்டும்அப்படியே இருந்தது .இல்லாத செருப்புக்குப் பின் என எண்ணத்தைப் போக விடவும் அது இருந்த வரை சாத்திய கதவுக்குள் இது நடந்து இருக்கலாம் என்ற கோடிட்டஇடத்தை மனம் நிரப்பிக் கொள்ள முயன்றது.

இரவு காம்பண்டுக்குள் திரும்பும் போது மீண்டும் ஒரு ஜோடி செருப்பு ஞாபக அடுக்கில் படியேறுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குள் வந்து பையன் பார்த்துக் கொண்டு இருந்த ஆம்னி ட்ரிக்கைப் பார்க்கக் கம்பெனிக் கொடுக்கத் துவங்கினேன் . அதோடு சப்பாத்தித் தட்டில் வைத்துச் சுடச் சுட வர ,டிவியை அணைக்கச் சொன்ன மனைவிக்கும் பையனுக்கும் இடையில் ’இருபத்தி மூன்றாம் புலிக்கேசி’ வடிவேல் மாதிரி இடையில் புகுந்துச் சமாதானபடுத்தி ஒரு வழியாய் டிவியை ஆஃப்னி ட்ரிக்கைப் பயன்படுத்தி அணைத்து விட்டுச் சாப்பிடத் துவங்கினோம். மெல்ல மனைவியிடம் சொல்லலாமா என யோசித்தேன் .உடனே வீடு மாற்றும் மஹாபாரத்தின் இரண்டாவது எபிசோடு துவங்கி விடும் அபாயம் ஏற்படலாம் எனக் கண் முன்னே பீரோ , டிவி, தட்டு முட்டெல்லாம் பேக் பண்ணுவது மாதிரிக் காட்சி மனத்திரையில் ஓடவே செருப்பு விசயம் டிவியோடு அணைந்து போனது .

இரவு லைட்டெல்லாம் அணைத்து விட்டுப் பையனின் அன்றைய பள்ளியில் நடந்த கதைகளைக் கேட்கத் துவங்கியபோது இடப்பக்கம் படுத்து இருந்த மனைவி மெல்லக் கேட்டால் எத்தனை மணிக்கு மதியம் சாப்பிட வந்தீங்க ? என்று

எனக்குள் சட்டெனெப் பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஏன்? என்றேன் .

இல்லை நான் சாப்பிட்டுப் போகும் போது யாரோ ஒரு பெண் பக்கத்து வீட்டில் சாவிப் போட்டுத் திறந்து கொண்டு இருந்தாள் .கூட அந்த அண்ணனும் வரவில்லை .கேட்டதற்குச் சொந்தக்காரப் பெண்ணாம் அதான் எத்தனை மணிக்கு அந்த அண்ணன் வந்தார்ன்னுக் கேட்டேன் ? பாவம் அதுவரை அந்தப் பெண் சாப்பிட்டாளான்னுத் தெரியலே அதான் கேட்டேன் என்றாள் கூடவே

.நான் தெரியலே என்றேன் ஒற்றை வார்த்தையில் பார்த்த ரகசியத்தின் குறுக் குறுப்பை அடக்கிக் கொண்டு.

அவள் கவலை அவளுக்கு !