சனி, 28 டிசம்பர், 2013

மூன்றாவதாய் ஒரு உலகம்


 பள்ளி விடுமுறை..

                             மிக சில பெண்கள் மட்டும்தான் பள்ளி விடுமுறை நாட்களை மாமியார் வீட்டில் செலவு செய்கிறார்கள் .அந்த கணவன் மார்களும் அந்த குழந்தையும் வரம் பெற்றவர்கள் .எனக்கு அப்படி பட்ட வரம் கிடைக்க நாளாகலாம் .


எதிர் கட்சி எம்.எல்.ஏ
.
                         எப்போதுமே தன் அம்மாவுடன் போகும் எனது பையன் இந்த முறை தனித்தே எனது மாமியார் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறான் .பள்ளி நாட்களில் தூங்குபவனை எழுப்புவதிலிருந்து ,பிரஸ் பண்ணுவது,குளிப்பது ,சாப்பிட அடம் பிடிப்பது ,எல்லாத்தையும் அள்ளி போட்டுகொண்டு பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து தொடங்கி  அவனோடு மாலை வந்தவுடன் ட்ரெஸ் அழுக்கு ஆக்கியது ,டைரியில் சரியாக வீட்டு பாடங்களை குறிக்காதவரை மொத்த புகார்களும் எனக்காக அவன் மூலம் வீட்டுக்குள் நுழையும் முன்னும் சாப்பிட உட்கார்ந்த பிறகு அவன் அம்மாவிடமிருந்தும் எதிர் கட்சி எம்.எல்.ஏ புகார் போல சரமாரியாய் குவியும் .அந்த வகையில் அமைதி படுத்தியே வீட்டின் அமைதியை காக்கும் பல அப்பாகக்ளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது போல எனக்கும் கிடைக்கலாம் !



பாக்கேட்டுக்குள் ...

                      கடந்த நான்கு நாட்கள் இந்த மாதிரி எதுவுமில்லை.மனைவிக்கு ஒரே தவிப்பு .பாருங்கள் ஒரு நாள் இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டு ,அவன் பாட்டுக்கு அங்கேயே தங்கிட்டான் என்றதர்க்கு அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்ற என் பதிலில் எனக்குரிய நோபல் பரிசு பறிக்கப்பட்டு ,தாலிபான்கள் லிஸ்ட்டில் அப்போதே சேர்த்துவிட்டார்கள்.

                  ஆனால் எனக்கும் ஒரு கேள்வி ஓடிகொண்டே இருந்தது.எங்கிருந்தாலும் யார் போனிலாவது பேசுபவன் என்னிடம் பேச முயற்சி பண்ணவில்லை .எப்போதும் ஊருக்கு ஒரு நாள் அவனோ அல்லது நானோ போனால் கூட அவன் பொம்மைகளில் ஏதாவது ஒன்றை என் பாக்கேட்டுக்குள் திணிப்பவன் எப்படி இப்படி இருக்கிறான் ?



தொலைவுகளே குறையட்டும் .

                            அவன்  பிறக்கும் முன் எத்தனையோ கனவுகளை வைத்து கொண்டு இருந்தாலும் பிறந்த பிறகு வளர்ப்பதில் ,வேலையில் இருந்த சவால்களை சந்திக்கும் வேகத்தில் அவன் மேல்  இருந்த  கவனம் எனக்கு குறைந்த போது என்னை திருத்தி கொண்டேன் .அவனோடு பேசுவதை ,விளையாடுவதை கூட்டிக்கொண்டேன். அவனுக்கு காணாமல் போன பொறுள் கண்டு பிடிக்கும் தந்திரம் ,கதை சொல்வது ,சில பொறுள்களை பார்த்து கவிதை மாதிரி (அனேகமாக அது வசனமாகத்தான் அவன் சொல்லுவான் ) போட்டி போடுவது  இப்படியாக ...

                       அருள்புரத்திலிருந்து - சாமுண்டி புரம் வீடு மாறி வந்ததும் அதுவும் பத்தாது என்று இப்போது ராம் நகர் மாறியதும் அவன் பள்ளி தொலைவுகளை குறைப்பதர்க்கே. மூன்றரை வயதில் தனியார் யோகா பள்ளிக்கு சேர்க்க போனபோது 7 குறைந்தது 5 வயது ஆக வேண்டும் என்று மறுத்தார்கள்.அவன் பள்ளியில் கேட்டபோது பத்து வயதில்தான் சேர்க்க முடியும் என்று மறுத்தார்கள் .நாழு வயதில் இடது வலது இரண்டு கைகளிலும் கிரிக்கெட் விளையாடவும் , ஐந்து வயதில் செஸ் நகர்த்தல் ,கேரம் விளையாட்டு என்றும் ஆறு முடிந்தவுடன் இப்போது வாரம் ஒரு முறை என்னுடனே யோகாவும வருகிறான். 



 காசு செலவில்லாமல் ...

                              நான் ஏற்கனவே 7 ¼ வருடம் பணிபுரிந்த கம்பெனியிலிருந்து திடீரென விலகிய போது சட்டென நிதி பிரச்சனை .ஏற்கனவே எனக்கு பணம் சேர்த்து வைப்பதில் சாமர்த்தியம் பெரிதாய் இல்லாததால் ஸ்னாக்ஸ் வாங்க கூட புதிய  சம்பளம் போதவில்லை அப்போதைக்கு நான் தேவை இல்லாத  11 வருட புகை பிடிக்கு பழக்கம் கை விட்டு அதை ஸ்னாக்ஸ் தேவை பூர்த்தி ஆனது .ஆனாலும் அவ்வப்போது கனவில் காசு செலவில்லாமல் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்து போனது ..



 ஆஃபீஸ் மருத்துவம் !

                         ஒரு முறை பள்ளியிலிருந்து மனைவிக்கு ஃபோன் .உங்கள் பையனுக்கு அடிபட்டு இருக்கிறது வந்து அழைத்து போங்கள் என்று .அவன் வேதனைப்படும் எந்த விசயமும் என்னால் பார்க்க முடியாது .மனைவியை கூட்டி பள்ளிக்கு போனால், ஆஃபீஸ் வாசலில் சட்டை இல்லாமல் சேரில் அவன் .எங்களை பார்த்தவன் என்னிடம் ஓடி வந்தான் .நல்ல வேளை அவன் முன்னால் நான் அழவில்லை .வலது நெற்றி புருவத்திர்க்கு அருகே  இரண்டு 'இன்ச்' வெட்டு .சட்டை காயப்போட்டு இருந்தது.வெளியேறிய ரத்தத்தை மறைக்க செய்த முயற்சியில் இன்னும் ஈரம் மீதம் இருந்தது.

                         யாரோ ஒரு பையனுக்கு இப்படி முன்னர் நேர்ந்த போது யாரை கேட்டு இந்த மருத்துவமனை அழைத்து சென்றீர்கள் என்று பெற்றோர்கள் கேட்டார்களாம் அதனால் வீட்டார் வரும் வரை முதல் உதவி மட்டுமே அதுவும் பள்ளி நிர்வாக ஆஃபீஸ் மருத்துவம் மட்டுமே.

                        ரேவதி மருத்துவமனையில் பார்த்தவுடன் தையல் போட வேண்டும் என்றார்கள் .பெட்டில் வைத்து பிடித்து கொள்ள கூப்பிட்டார்கள் .அவனே என் தைரியம் தெரிந்து அவன் அம்மாவை அழைத்து கொண்டான் .



பணம்டா எல்லாம் !
                       
                  சென்ற வாரம் பள்ளிக்கு அழைத்துவர போன போது அவன் கேட்ட கேள்வி எனக்கு வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது.அவன் பள்ளி தோழியின் நண்பர்கள் இவனை மதிப்பதில்லையாம் .அது ஏன் என்று அவளிடம் கேட்டதர்க்கு, (மணிரத்தினம் ரசிகை போல அவள் ! ”) பணம்டா எல்லாம் பணம்”என்றாளாம் .



மூன்றாவதாய் ஒரு உலகம் 

                         எனக்கு உடனே புரியவில்லை .பணம இருப்பவர்கள் ஒரு அணியும் இல்லாதவகள் ஒரு அணியாம் .இன்னும் இரண்டாவது படித்து முடிக்காத இவர்கள் ,உலகத்தை புரிந்து கொள்ள முடியாத  ஆச்சரியமும் பயமும் தந்ததுஎனக்கு இந்த சம்பவம் .ஓடி, ஓடி எனக்கு இன்றும் புரியாத விசயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டானே ! 
                  குழந்தைகள் நம்முடனே அவர்கள் இருப்பதால் ,அவர்களை புரிந்து கொண்டோம் என்ற நம் கணக்கு முற்றிலும் முட்டாள்தனமாகி விடுகிறது .எனக்கு ஒரு உலகம் ,மனைவிக்கு ஒரு உலகம் என்று மட்டுமே புரிந்து கொண்டு இருந்த ஏராளமான அப்பாக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு என் வீட்டுக்குள் மூன்றாவதாய் ஒரு உலகம் இருப்பது அபோதுதான் தெரிந்தது .எப்போதோ படித்த ஓஷோ வின் புதிய குழந்தை புரிய துவங்கியது

இறைந்து கிடக்கும் ..

                    அவன் வீட்டில் இல்லை . அவன் இருப்பை எப்போதும் வீட்டில் உணர்த்த  முழுதும் இறைந்து கிடக்கும் ”லெகோ- டூப்லோ” (அடுக்கிகள்) கலைக்க ஆள் இல்லாமல் கோபமாக இருந்தது . போகோ சேனலும் ,ஜியோகிராப் சேனலும் ஒளிபரப்பை தொலைத்து விட்டது போல ! .  அவன் தன் செல்லாமாக தம்பி என்று சொல்லி கொள்ளும் மிக்கி மவுஸும், புலியும்  சோகத்துடன் இருந்தது  என்னைப் போல..




கலீல் ஜீப்ரானனின் கவிதை....

"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால 
வாழ்வின் மகன், மகள்கள் 
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்; 
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை 
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் - 
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று 
அழகான சிந்தனைகள் உண்டு 
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல 
ஏனென்றால் அவர்களின் ஆன்மா 
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; 
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது 
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்; 
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள் 
வாழ்க்கை பின்னோக்கியோ 
நேற்றைக்கோ செல்வதில்லை 
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும் 
வாழும் அம்புகள் அனுப்பபடும் 
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"




திங்கள், 23 டிசம்பர், 2013

அது பாலகுமாரன் காலம் ..


                திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக  பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் பாரதி பிரிண்டர்ஸ்திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

               உற்சாகமானோம். எங்கள்  கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்பும் இருந்தது. உடனடியாக நண்பர் சங்கர் திட்டமிட்டார் .விழாவை நடத்துபவர் யார் அல்லது இந்த பிரிண்டர்ஸ் ஓனர் யார் அல்லது யாரை பார்த்தால் பாலகுமாரனுடன் பேச முடியும் என்ற முயற்சியில் அரை மணி நேரத்தில்  வெற்றியும் கண்டார் .விழா நடந்துகொண்டு இருக்கும் மேடையின் பின் வழியாக உள்ளே போய் அவருடன் கைகொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக  சந்திக்க உதவியவர் சொன்னார்.என்னை முன் அனுப்பினார்கள்.


      அப்போது சட்டென உள்ளே ஒரு பொறி தட்டியது .இத்தனை ஆராவாரங்களுக்கிடயே எனக்கு பிடித்த அந்த எழுத்தாளனுடன் பின் பக்கம் வழியாக மேடையேறி என்ன பேச முடியும்? நான் உங்கள் வாசகன் அல்லது உங்கள் எழுத்தில் மேல் தீராத காதலும் வெறியும் உள்ளவன் ,என் இளமை முழுவதுவும் உங்கள் எழுத்துக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று பேசுவதா ?அப்படியே பேசினால் அவர் கேட்கும் நிலையில் இருப்பாரா ?அவரை தொந்தரவு படுத்தும் விசயம் ஆகிவிடாதா என்ற போராட்டம் மனசுக்குள் ஓட ,பார்க்கும் எண்ணத்தை கைவிட்டேன் .எனக்கும் அவர் எழுத்துக்கும் இடையே உள்ள மவுனமான காதலை இந்த சந்திப்பில் மூலம் காயப்படுத்தி கொள்ளும் நிலை வந்து விட்டால் ? இதை நான் சொன்னதும் உடனே நண்பர் சங்கர் உஷ்ணமாகிவிட்டார் .என்ன இவ்வளவு மெனக்கெட்டு பிறகு நீ சாதரணமாக வேண்டாம் என்கிறாய் ? என்றார் .இதர்க்கு என்னிடம் பதில் இல்லை .வேண்டாம் என்பதை மட்டும் புரிந்து கொள் என்றேன் .அவர் முகத்தை திருப்பி சென்று விட்டு சில நாள் என்னிடம் பேசவே இல்லை .



             இது நடந்த போது எனக்கு இருபது வயதுக்குள் இருக்கும் .என்னை பொறுத்தவரை எழுத்தாளானுக்கும் - வாசிப்பவனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருக்கவேண்டும் என்பதை நம்புகிறேன்.அவர் எழுத்தை வாசிப்பதால் மட்டுமே எழுத்தாளான் நமக்கு சொந்த ஆகிவிடமுடியாது .அவரை எனக்கு தெரியும் என்பதால் எதுவும் நிகழ போவதில்லை என்று நினைத்தேன் .

                       சுஜாதா,ஜானகிராமன்,வையவன்,டெல்லாபுரூஸ்,கண்ணதாசன் இன்னும் பலரை படித்தாலும் பாலகுமாரன் எழுத்தின் மேல் இருந்தது, ஈடுபாடு என்பதையும் தாண்டி, ஒருவித கர்வமே வந்து விட்டது அப்போது .எனக்கு மட்டுமே பாலாவின் எழுத்து மிகவும் புரிகிறது என்ற கர்வம் . என் வயதுக்கே உரிய பெண்கள் பற்றிய பிரமிப்பு ,காதல் பற்றிய வித்தை ,அவரின் எழுத்தில் தவம் தியானம் போல, ஆழ்ந்து இழுத்து செல்லும் சூட்சுமம் இருந்தது .வெளியுலகம் ஒருவித வெளிச்சதுடன் புரிந்தது .வாழ்வின் தந்திரம் மெல்ல புரிய அவிழ்வதாக பட்டது .,அவரின் எழுத்தோடு என் இளமை முழுதும் பயணப்பட்டது.பாலா பெண்களை பற்றிய புரிதலை  நிறைய எழுதினார் .ஆனால் நான் படிக்க கொடுத்த  பாலாவின் புத்தகங்கள் அவர்களிடமிருந்து படிக்கபடாமலேயே அவசரமாக திரும்பி வந்தது. எனக்கு ஆச்சர்யாமாகிவிட்டது .சில பேர் தான் படிப்பதையே வெளியே சொல்ல மறுத்தார்கள் .அவர் புரிந்து கொள்ள முடியாத பகவான் ரஜனீஸ் போல அவரை பார்த்தார்கள்.பாலாவை அதிகம் மோசமாக விமர்சிப்பவர்கள் என்னை விட அவரை அதிகம் தேடித் தேடி படிப்பவர்களாக இருந்ததுதான் எனக்கு தீராத ஆச்சர்யமாகவே இருக்கிறது.
      

          யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால் அரை மணி நேரம் பாலாவின் ஏதோ ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியை படித்து விட்டுத்தான் எழுதி இருக்கிறேன் .சமீபத்தில் நண்பர் சங்கரின் ( திண்டுக்கல்லில் பாலாவை பார்க்க ஏற்பாடு செய்து பின்னால் நொந்து போனவர் ) +2 படிக்கும் பையன் விக்கி, நான் சங்கருக்கு, 22 வருடத்திர்க்கு முந்தி அவர் சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதத்தை பழையபெட்டியில் பார்த்து என்னப்பா இந்த அங்கிள் கட்டுரை மாதிரி இத்தனை பக்கம் எழுதி தள்ளி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு மானசீகமாக அப்பாவின் நட்பை யோசித்து இருக்கிறான். கவிதை,கட்டுரை ,கடிதம், விமர்சனம்  எது எழுதினாலும் அதில் பாலாவின் வாசனை இருக்கும் அளவுக்கு ஊறிபோய்விட்டேன் .  என் இளமை காலங்களை திரும்பி பார்த்தால் பாலாகுமாரன் என்ற எழுத்தாளானை சுவாசித்த வாசம் மட்டுமே இருக்கிறது . 


     பாலாவை படிக்க எனக்கு 13 வயதில், எனக்கு” பச்சை வயல் மனதை”  அறிமுகப்படுத்திய மூத்த சகோதரர் செல்வம் இந்த என் ஈடுபாட்டை ஒரு சமயம் எச்சரிக்கை செய்தார் .ஒரு எழுத்தாளனே கதி என்று நின்று விடாதே உலகமும் பெரியது, இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் படி .ஒரே ஆளை படிக்கும்போது மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று தோணிவிடும் ஆபத்து இருக்கிறது  என்று சொல்லி சாண்டில்யனையும் , கல்கியையும் கொடுத்தார் .அவர்களின் எழுத்தின் மேல் கவனம் செல்லவில்லை .இன்று கூட அந்த கவலை பற்றி நிற்கிறது .


ஆனால் பாலகுமாரன் வேறு யாரயும் படிக்க வேண்டாம் என்பதாக சொல்லவில்லை .அவர் சொல்லித்தான் மேலும் பலரை படித்தேன் .யோகிசுரத் குமாரிடம் இரண்டு முறை  ஆசீர்வாதம் அவரால்தான் பெற்றேன் .இருந்தாலும் இன்னும்  பல பேரை சகோதரர் செல்வம் சொல்லிய மாதிரி பாலகுமாரன் கிறுக்கு எனக்கு பிடித்து இருந்ததை இல்லை என்று இப்போது  எத்தனையோ எழுத்தாளார்கள் படித்த பிறகும் கூட சொல்ல முடியவில்லை .



         அதே போல திரைப்பட உலகத்திர்க்கு முந்திய அவரின் எழுத்தில் உள்ள சம்பவ விவரிப்புக்கும் ,அதர்க்கு பிறகு எழுதிய எழுத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.அது போலத்தான் ஆன்மீக முழு ஈடுபாட்டுக்கு பிறகு அவரின் எழுத்தின் ஆழம் இன்னும் மாறு பட்டது.அவரின் எழுத்தோடு பயனம் செய்தவர்களுக்கு இது புரியும் .


       இப்போது கடந்த பத்து ஆண்டுகளாய் அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு குறுகிவிட்டது .ஆனாலும் அவருக்கு முதல் கடிதம் எழுதி பதில் வராமல் தவித்த உணர்வை இன்று அவரின் ”முக நூலுக்கு” நட்பின் அனுமதிக்கு காத்து இருக்கும்போதும் அனுபவிக்கிறேன் .தமிழ்  மட்டுமே அதிகம் வாசிக்க தெரிந்த எனக்கு இன்னும் வேறு எழுத்துக்களை படிக்கும்போது உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள அவரின் எழுத்து இன்னும் உதவத்தான் செய்கிறது.  


    சமீபத்தில் எங்களை விட அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள என் அப்பா , உடையார் தொகுப்பை வாங்கி தரமாறு சொல்லி இருக்கிறார். அடுத்து கங்கை கொண்ட சோழன் வாங்க சொல்வார்.அவர் படித்த பிறகு நாங்கள் படிப்போம் !