திங்கள், 11 நவம்பர், 2013

ஆவி வேட்டை !!


                                                  யாருமே யோசிக்காத அல்லது வித்தியாசமான விசயங்களை தேடுவது , அனேகமாக வீட்டில் கடைசியாக பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டு என்பதாக சொல்வார்கள் .வீட்டில் தன்னை முன்னிறுத்தி காட்டும் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடும் இதுதான் என்கிறார்கள் .


                                                   அதாவது வீட்டில் எல்லாரும் சீரியல் பார்த்தால் அந்த வீட்டின் கடைசி பிள்ளை புத்தகம் படிப்பான் எல்லோரும் வீட்டில் சுஜாதா ,பாலகுமாரன் ,கல்கி படித்தால் இவன் வெங்கட்ராவ் எழுதிய மனோசக்தி ,இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவஜெயமமும் ,விக்கிரவாண்டி வி.ரவிசந்திரனின் ஆவிகள் உலகமும்  ,சௌதாமினியின் பறக்கும் தட்டு பற்றியும் படிப்பார்கள் அப்படிபட்ட வீட்டில் கடைசி (  ஐந்தாவது ) பிள்ளை தகுதி எனக்கும் இருந்தது .அப்படி பட்ட ஒரு  அமானுஸ்ய தேடல் 16 வயதில் ஏற்பட்ட போது அதில் ஒரு  தேடலின் விளைவே இந்த ஆவிகளுடன் பேசும் முயற்சி ...


                                                      ஏதோ ஒரு பெயர் தெரியாத புத்தகத்தில் ஆவிகளுடன் பேசும் பல முறையில் எளிதான வழியாக வய்சா கட்டம் (Ouija Board) என்பதாக அறிந்து , நண்பர்களுடன்  வீட்டில் கடைசி என் அறையில்  ஆவியுடன் பேச திட்டமிட்டோம் .

                                                 அதன் படி அங்கு இருந்த எல்லா புனித பொருள்களையும் அகற்றினோம் .ஆவிகள் பேசும் இடத்தில் ஒரு சாமி போட்டோ கூட இருக்க கூடாது எனபது பின்பற்ற வேண்டிய விதி !.பிறகு அறையின் நட்ட நடுவே  வய்சா கட்டம் , ஒரு கண்ணாடி டம்ளர் ,மெழுகுவர்த்தி சகிதமாக வேலையை ஆரம்பித்தோம் .இதில் ஒரு விசேசம் என்னவென்றால் அங்கிருந்த யாருக்கும் இது பற்றி முன் அனுபவம் இல்லை என்பதே அது . 


                                                   இப்போது தான் ஒரு பிரச்சனை ஆரம்பித்தது .அது இறந்து போன எந்த ஆவியை கூப்பிடுவது ? நான் படித்த புத்தகத்தின் விதிப்படி நமக்கு நேசமுள்ள ஆவியை  ( Security Ghost  ) கூப்பிட்டு அருகே வைத்து கொண்ட  பிறகே மற்ற ஆவிகளை தொடர்பு கொள்ள வேண்டும் . ஆனால் நாங்கள் நேசமுள்ள ஆவியும் பாதுகாபிற்க்கான ஆவியும் ஒன்றாகவே அழைக்க தீர்மானித்தோம் அது  ஆறு மாத குழந்தையாய் இருந்த போது இறந்த எனது சகோதரி, பேபி. 


                                             மெழுகுவர்த்தியை  வய்சா வரை தளத்தில் பற்ற வைத்து , சிறிது நேரம் எறியவிட்டு, பிரார்தனை செய்து சகோதரியை நினைத்து அழைத்து விட்டு , டம்ளரை மெழுகுவர்த்தியின் மீது கவிழ்த்தேன் . டம்ளர் முழுதும் வெள்ளை புகை மண்டலமாக நிரம்பி,மெழுகுவர்த்தி முழுவதுமாக அணைந்த பின் , ஆள்காட்டி விரலை டம்ளர் மேல் வைத்தேன் .மெல்ல சில அதிர்வுகளை  உணர்ந்தேன் .டம்ளர் இப்போது எழுத்துகளை நோக்கி மெல்ல நகர தொடங்கியது ...

                                            அந்த மூடிய அறையில் வியர்வைக்கு பதிலாக உடல் சில்லிட்டது .வயதும் ஆர்வமும் அசட்டு தைரியத்தை தர, வைத்த கையை எடுக்கவில்லை ஆனால் சில சமயம் தரையில் தளத்தின் எழுத்துக்கள் கட்ட்த்தை  தாண்டி டம்ளர் வெளியேறியது.


                                           நண்பர்கள் சிலரும் தங்கள் கேள்விகளுடன் எனக்கு அடுத்து டம்ளரை தொட்டு தொடர .. சில சமயம் டம்ளர் நகரவே இல்லை . இதில் வேடிக்கை என்னவென்றால்  அப்போது +2 எழுதிய நண்பன் தனது ரிசல்ட்டையும் ,வர போகும் மதிப்பெண்ணையும் கேட்டான் .Pass  என்ற பதிலும் 817 மதிபெண்ணும் எடுப்பான் என்பதாக டம்ளர் காட்டியது. ( சில மாதங்கள் கழித்து வந்த ரிசல்ட்டில் - அவன் தேர்ச்சியும் பெறவில்லை , மார்க்கும் வெறும் 635 தான் என்பது வேறு விசயம் ). பேசிய யாரும் என்ன பேசினோம் என்பதை வெளியே சொல்லவில்லை அப்போதைக்கு .


                                                        அதர்க்கு பிறகு சிலமுறை பேச முயன்றும் சரி வரவில்லை .அதுமட்டுமல்ல இப்படி அழைத்து பேசும்போது வேறு ஏதாவது கெட்டஆவிகள் வந்து விட்டால் பிறகு தொடர்ந்து இங்கேயே தங்கிவிடும் என்று வேறு ஏதோ ஒரு புத்தகம் சொன்னதால் வந்த பயமும் காரணம் .ஆனாலும் இது பற்றி ஒரு முழுஆய்வு பண்ண வேண்டும் என்று புத்தக வேட்டையில் இறங்கினோம்   அத்துடன் கதை முடியவில்லை .
முதன் முறையாக நாங்கள் பேசிய போது உடன் இருந்த நண்பன் அலெசாண்டர் பாபு இந்த விசயத்தை ( அல்லது விபரீத்தை) தனது அம்மாவிடம் சொல்ல அவர்கள் கோவித்து கொண்டதோடு என்னை அவர்கள் வீட்டில் பேசவேண்டும் என்பதாக அன்பு கட்டளை வேறு இட்டார்கள் !


                                                    மறுக்க முடியாமல், ஒருநாள் இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டில் கூடினோம் .ஏன் 10 மணிவரை என்றால் ,அவன் தங்கை சின்ன வயது . (சிறு வயதுகாரர்கள் பயந்து விடலாம் என்பதால் )   தெரிந்தவர்கள் வீட்டில் அவன் தங்கையை கொண்டு விட்டு அங்கு உறங்கும்வரை காத்து இருந்ததால்தான்.

                                                     வீட்டில் உள்ள அன்னை மரியாள் உட்பட அனைத்து புனித பொருட்களையும் அகற்றினோம்.முன் அறை சமையல் அறை.அதர்க்கும் நடு வீட்டுக்கும் இடயேயுள்ள கதவை மூடி ஆவி வேட்டை ஆரம்பித்தோம் .


                                            அப்போது எனக்கு மிக பெரிய ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது .அவர்கள் பேச விரும்பிய ஆவி ,அடுத்த தெருவில் இருந்த இவர்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு கறிகடைக்காரர் ஆவியுடன். சில மாதங்களுக்கு முன் ஏதோ சண்டையில் அவர் வெட்டுபட்டு இறந்து விட்டாரம் .அவரை யார் வெட்டினார்கள் என்பதை அறியவே இந்த அழைப்பாம் ...(அட பாவிகளா !)  


               எனக்கு பயம் ஒருபக்கம் .    மெல்ல டம்ளர் அதிர்வதும் ,நகர மறுப்பதுவுமாகவே இரவு சுமார் 11.50 வரை நீடிக்க ... ( நல்ல வேளை) கறிக்கடைகாரர் ஆவி ( கத்தியுடன் )  வரவில்லை .ஆனால் .
அதுவரை பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்த அவன் தங்கை திடீரென எழுந்து வந்து கதவை திறக்க ,iஇங்கு நாங்கள் நடு வீட்டில் ஒரே ஒரு சின்ன விளக்குடன் அத்தனை பேர் கூடி இருப்பதை பார்த்து விட்டு,அம்மா என்று  பயத்தில் அலறி ,கதவோடு சரிந்து விழ ..


            அடுத்த நாள் நண்பனை பார்த்த போது அவன் சொன்னான் ,எல்லாவற்றையும் நாம் எடுத்து விட்டோம் ஆனால் வாசலில் தொங்கவிட்டு இருந்த வேளாங்கன்னி தீர்த்த பாட்டில் மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டோம்.அதனால்தான் அந்த அண்ணன் (கறிக்கடைகாரர் ) வரவில்லை என்றான் .    நான் தங்கைக்கு எப்படி இருக்கு என்றேன் ? முன்று நாள் குளிர் காய்சல் என்றான். 
  
                     
                             
                                                      அதர்க்கு அடுத்து, நண்பர் சுகுமார்,ஆட்டோ ரைட்டிங் எனும் பேனாவை பிடித்தால் தானாக பேனாவே எழுதும் முறை.அதன் மூலம் மதுரையில் ஒரு டாக்டரின் மகள் வந்து ,தான் ஒரு கார் விபத்தில் இறந்து போனதாகவும் தன்னை அறிமுகபடுத்தி ( எழுதி ) கொண்டதாம் .


                                                   மெல்ல நான் அந்த பேனாவை பிடித்து பேப்பரில் வைத்து பார்த்தேன் .பேனா எழுத தொடங்கியது !...அந்த எழுத்து ?               என் எழுத்து மாதிரியே  இல்லை...!!!  


1 கருத்து:

  1. சுவாரசியமாய் எழுதி இருக்கீங்க ...நா ஆறாவது புள்ள எனக்கும் புத்தகம் படிக்கிற பழக்கம் தொத்திகிடுச்சே எங்கூட்ல அப்பா, நான் மட்டுமே புத்தக பைத்தியங்கள்... எந்த அளவுன்னா கடைப் பொட்டலத்தில் இருக்கும் செய்திய கூட படிச்சிருவோம். ஹோய்ஜா அனுபவம் சின்ன வயசில எனக்கும் இருக்கு ஆனா அப்ப என்ன விட மூத்த பசங்க பொண்னுங்க... அத நேக்கா நகர்த்தினாங்க...

    பதிலளிநீக்கு