திங்கள், 28 அக்டோபர், 2013

துணை மாப்பிள்ளை வேசம் ...

                     

call card !


                 திண்டுக்கல் அரசினர் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ITI ) வெல்டிங் செக்சனில் என்னுடன் சேர்த்து 13 பேர் படித்தர்கள்  .விடுமுறை போக சுமார் பத்து மாதங்கள் படிப்பு .எனக்கு இருந்த கணக்கு + அறிவியலில் கூட்டு 65.5 % மட்டுமே  (+2 மதிப்பெண் இங்கு செல்லாது ) என்பதால் பயிற்சி வகுப்பு ஆரம்பித்து இரண்டு மாதம் பாடங்கள் போன பின்பு ,கழித்து விட்ட லிஸ்டில் மீதிக்கு  call card  மூலம் எனக்கு (போனா போகுது என்ற ) அழைப்பு வந்தது . இருந்தாலும் 5 வருட ஆரம்ப பள்ளி ,7 வருட மேல் நிலை பள்ளி வாழ்விலும்  கிடைக்காத ஒரு சந்தோசம் இங்கு சில மாதங்களில் கிடைத்ததாக உணர்கிறேன் . அதர்க்கு பிறகு வேறு படிப்பில் கூட கிடைக்கவில்லை .
             
                     அந்த எங்கள் 13 பேரில் சாரி ராமன் என்ற நண்பரும் ஒருவர்.என்னை விட மிக நல்ல நண்பர் .அன்பான குடும்பத்தை சேர்ந்தவர் .அவரின் வீடு - திண்டுக்கல் அருகேயுள்ள தருமத்துபட்டி . 


                பொதுவாகவே வெள்ளி  கிழமை வரைதான்  ITI  .எனவே வெள்ளிகிழமை மாலை பயிற்சி நேரம் முடிந்தவுடன் அவசர அவசரமாக சிலபேர் கர்சீப்பில் மற்றும் பேப்பரில்  பாதுகாப்பாக வைத்து இருக்கும் பவுடரை முகத்தில் அப்பிகொண்டு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வரும் வழியில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல் நிலை பள்ளி வாசலை நோக்கி படையெடுப்பது வழக்கம்.( சில பேர் தினமும் ) அதில் நண்பர் சாரி(ராமனும்)யும் ஒருவர். 


அண்ணனை பார்த்த மாதிரி இருக்கு..

              ஒருமுறை ,இப்படி ஒரு பெண்ணை பார்த்து உனக்கு எனக்கு என்ற பேரம் நடக்க அந்த பெண்ணின் காதிலும் விழுந்து விட்டது முறைத்து விட்டு அந்த பெண்ணும்  கடந்து விட்டது.அடுத்த நாள் (சனிகிழமை) அம்மாவுடன் சாரி அடுத்த ஊரில் உள்ள ஒரு சொந்தகாரர் வீடு போக , அந்த வீட்டில் - அந்த பெண் . சாரிக்கு உள்ளூர செம கலவரம் .பொதுவாகவே அவர் அவர் பயம் நிறைந்தவர் .  
            அந்த பெண்ணின் அம்மாவிடம் சாரி அம்மா பேசி விட்டு கிளம்பும் போது , இவரை பற்றி விசாரிக்க ,அவர் திண்டுகல்லில் படிப்பதாக சொல்ல ,என் பெண்ணும் அங்கேதான் படிக்கிறாள் என்று சொல்லி விட்டு கூடவே ஏம்மா அண்ணனை அங்க பார்த்து இருக்கியான்னு கேட்க ,பயத்தில் கேட்காமலேயே சாரி அவசரமாக மறுக்க ஆனால் அந்த பெண் மிக சாதரணமாக பார்த்து விட்டு அண்ணனை பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லி விட்டு சாரிக்கு மட்டும் தெரிவது மாதிரி சிரித்து விட்டு போய்விட்டதாம்.சாரி அடுத்த ஒரு குடும்ப விஷேசத்தில்,  தன்னை தப்பிக்க வைத்ததர்க்கு நன்றி சொல்லவும் செய்த  தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார் .
(அதிக ) பிரசங்கம் !

                           எனக்கு   TVS ஓசூர் இண்டர்வியூவில் (http://myowndebate.blogspot.in/2013/10/tvs.html) புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கு முன்னே சென்று, பெருமையாக ! சொல்லி!! வைத்தவர்.அதனால்  உணர்ச்சி வசப்பட்டு நான் யூனியனின் அவசியத்தை பற்றி (அதிக ) பிரசங்கம் பண்ணி வேலை இழந்தது வேறு விசயம் . 
   
இன்ப அதிர்ச்சி !

                       அடுத்து ஒரு முக்கியமான விசயம், ITI முடித்து சுமார் 7 ஆண்டுகள் கடந்து நடந்த சாரியின் கல்யாணம்.  கும்பகோணத்தில் நடந்தது . சாரியின் வீட்டில் அவருக்கு தரும் சகல மரியாதையும் எங்களுக்கும் உண்டு .(தமிழ்நாட்டில் அவனவன் வீட்டில் கிடைக்காத பல மரியாதைகள் நண்பர்கள் வீட்டில் கிடைப்பதே பெரிய பாக்கியம் .அதை எனக்கு பல நண்பர்களின் வீடு தந்தது .) எனவே எனக்கு கட்டாய அழைப்பும் இருந்தது துணை மாப்பிள்ளை என்ற பொறுப்பும் இருந்த்தது . நான் அப்போது வேலை பார்த்த கம்பெனியில் புதிய பல பொய்களை சொல்லி விட்டு திருமணத்திர்க்கு போனேன் .அங்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.காரணம் - கல்யாணத்தை நடத்த வந்தது சாரியின் நெருங்கிய சொந்தகாரர்களான திரு.ஏ.எல்.ராகவன் (மூத்த நடிகர் & பின்னணி பாடகர்) அவர் மனைவி திருமதி. எம்.என்.ராஜம் (பழம்பெரும் நடிகை) .  சாரி என்னை அவர்கள் இருவருக்கும் நிறைய சொல்லி அறிமுக படுத்தினார்.போட்டோ எடுத்துக்கொண்டோம் .

எங்கிருந்தாலும் வாழ்க!


             பிறகு அவரின் (திரு.ஏ.எல்.ராகவன்) மிக பிரபலமான நெஞ்சில் ஓர் ஆலயத்திலிருந்து மறைதிரு. கண்ணதாசன் அவர்களின் ’எங்கிருந்தாலும் வாழ்க’ பாட சொல்லி கேட்டோம் .வேண்டாம் அது இங்கு பாடும் பாட்டல்ல என்று சொல்லி,வேறு ஒரு இனிமையான பாடலை பாடினார் .


துணை மாப்பிள்ளை ..

                      விசயம் இதோடு முடியவில்லை சாரி சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும் ஆனால் அவர்களின் சமூகத்தில் துணை மாப்பிள்ளைக்கு மிகபெரிய சண்டை போடும் திறமை இருக்க வேண்டும் என்பதுவும் முதல் மூன்று நாட்களில் பெண் வீட்டாருக்கு சிம்ம சொப்பனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது சாரியின் அம்மா சொன்னார்கள் .பெண்ணுக்கு மூன்று தங்கைகள் இருந்ததால் எனக்கு தலையே நிமிரவில்லை இதில் சண்டை வேறா ?
                        

அவர்  சிரித்ததை ...

                சரி வேறு வழியில்லை .திட்டமிட்டோம் .முதலில் ஒத்திகை பார்க்க சாரி உதவினார் .மூன்றாம் நாள் விருந்தில் மீன் பறிமாறப்பட்டது  .அதில் முள் இருந்தது அது ஏன் என்று கேட்கலாமா என யோசித்தோம்! ஒருவேளை சிரித்து விட்டால் ? அதை விட்டு விட்டு ,மாமனாருக்கு ஏன் இப்படி தலை வழுக்கை என ஆரம்பித்தால் ? அதை பற்றி மாமியாரே கவலை பட வில்லை .சரி வேறு வழியில்லை நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கும்  பெண் வீட்டுக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் இருக்கும் அதர்க்கு ஏன் கார் ஏற்பாடு செய்யாமல் ஆட்டோ அனுப்பினீர்கள் என்று மிக பெரிய தைரியத்தை வர வழைத்துக்கொண்டு கேட்டேன் .( கேட்டேன் என்பதை விட பதிமூன்றாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்புவித்தேன் என்று கூட சொல்லலாம்) அதர்க்கு பெண்ணின் அப்பா ,இந்த வழியில் கார் வராது மாப்பிள்ளை என்றார் .திரும்பி சாரி ராமனை பார்தேன் .அவர் அப்போது சிரித்ததை  வெகுநாளாய் என்னால் மறக்க முடியவில்லை    


2 கருத்துகள்: