புதன், 30 அக்டோபர், 2013

உத்திரவாத காலம் (Guarantee Period) யாருக்கு ?

                             


                              புது மனைவி கோவித்து கொண்டால் சமாதானப்படுத்த ஐம்பது வழிகள் இருக்கலாம் .ஆனால் தொன்னூறு நாளுக்கு (ஆசை 60+ மோகம் 30 இதெல்லாம் அப்போ ! ) மேலான மனைவியின் கோபத்தை சமாதானபடுத்த குறைந்தது ஐந்து வழிகள் கூட இல்லை என்பது போல எனது  புதிய ! டச் ஃபோன் வாங்கிய ஆறு மாதம் முடிந்த சில நாளில் ஒரு நூதனமாக என்னிடம் கோவித்து கொண்டது .

பேட்டரியை உருவி...


                               யாரையாவது நான் ,என் போனிலிருந்து அழைத்தால் அவர்கள் பேசி முடித்தவுடன் அவர்களாகவே தொடர்பை துண்டிக்கவில்லை என்றால் என் போனில் இருந்து துண்டித்து கொள்ளும் தொடு திரை (End button ) வேலை செய்யாது . இன்னும் சொன்னால் தவறுதலாக ஒருவரை கூப்பிட்டு அவரை தொடர்புகொள்ள வேண்டாம் என்று துண்டிக்க நினைத்தால் கூட முடியாது ஒரே வழி பின்புற கவரை கழற்றி பேட்டரியை உருவினால் மட்டுமே சாத்தியம் .

விசிடிங் கார்டு.


                               குழந்தை பிறக்கும் போது கையை மூடி பிறப்பது , அதன் இறப்பு தேதி குறிக்கப் படாத ரிட்டன் டிக்கெட் போன் வாங்கி வருவதாக வேதாத்ரி மஹரிசி சொல்வது போல - புது போன் வாங்குபோது பில்லோடு சர்வீஸ் சென்டர் விசிடிங் கார்டும் இருந்ததன் காரணம் இப்போதுதான் புரிந்தது .

உத்திரவாத காலம் !



                              சரி போனை எடுத்து கொண்டு விசிட்டிங் கார்டு சொல்லிய இடத்திர்க்கு போனேன் .அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர் மட்டுமல்ல கூடுதலாக மொபைல் போன்  பழுது பார்க்கும் பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது ( நம்ம போனில் பழகத்தானோ ? ).சொன்னால் நம்ப மாட்டீர்கள் , அரசு மருத்துவ மனையின் - குறை பிரசவ குழந்தைகள்  வார்டில்  வரிசையாக நிற்பது போல ஒரே கூட்டம்.உள்ளே கூட்டத்தில் நீந்தி,அங்குள்ள வரவேற்பு அறை பெண்ணிடம்  எனது குறையை  சொன்னேன்.



                               ஃபோனை கையில் வாங்கி கொண்டு,இது ’சென்சார்’ (sensor ) பிரச்சனை ,ஃபோனை கொடுத்துட்டு விட்டு பத்து நாள் கழித்து வாங்க என்று அந்த பெண் மிக சாதரணமாக ஒரு குண்டை வீசியது .ஏன் என்று கேட்டதர்க்கு , உத்திரவாத காலம் (Guarantee Period) முடியாததால் கம்பெனிக்கு இந்த பிரச்சனயை இணயத்தில் அவர்களுக்கு பதிவு செய்வோம் , அவர்கள் வந்து பார்க்குபோது உங்கள் போன் இங்கு இருக்க வேண்டும் என்றார்கள் .அப்படியானால் ’இந்த கம்பனி’ போனை  வாங்குபவர்கள் , வயதானவர்கள் துணைக்கு வைத்து கொள்ளூம் கைத்தடி போல இன்னொரு போனை உதவிக்கு வைத்து கொள்வது அவசியமா ? தெரியவில்லை .

 கை(தடி)

                            ஆனால் எனது பழைய சோனிஎரிக்சன் k750i போன் இப்போது நல்ல வேலையாக இந்த இடத்தில் கை(தடியாக ) கொடுத்தது  . அந்த ஃபோனில் இருந்த மெமரி கார்டையும் , சிம் கார்டையும் பெற்று கொண்டு ,ஆடி மாதத்தில் பிறந்த வீட்டில் புது மனைவியை விட்டு திரும்பும் அன்பு கணவனை போல கனத்த சோகத்துடன் அங்கிருந்து திரும்பினேன் !.



                                ஃபோனை வாங்கி கொண்டு ,அவர்கள் கொடுத்த ஃபோனை பெற்று கொண்டதர்க்கான ஒப்புகை பதிவு கடித்ததின் நாட்களை அடிக்கடி (தவிப்புடன்) பார்த்து  உறுதி செய்து கொண்டே இருந்தேன் .

                              இதர்க்கு இடையில் இதை பற்றி விசாரித்தவர்கள் ,அடடா அப்படியா ரிப்பேர்னு போனா அது சரி வராதே. இப்படித்தான் என் ஃப்ரண்ட் கொடுத்துட்டு திரும்பி வாங்கி அதே பிரச்சனை மீண்டும் வந்துருச்சு வேஸ்ட் என்று இன்னொரு அணு குண்டை நான் எதிபாராமல் போட ,நாம் தான் அடுத்தவன் விசயத்தில் எதுவும் தெரியாத விசயத்தை கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E=MC2  ரேஞ்சுக்கு பயமுறுத்தும் போது எனக்கு அப்போது ஒரு விசயம் உறுத்தியது ! .இந்த போன் வாங்குவதர்க்குள் என் நண்பர்கள் பலரையும் அடிக்கடி யோசனை கேட்டு துன்புறுத்திய பாவமோ என்று எனது உள் மனசு உறுத்த தொடங்கியது ( மன்னித்து கொள் சுகுமார் ! ) .
சரி விடு கஷ்டப்பட்டு சம்பதிச்ச காசு என்று அதே மனசு ஆறுதலும் சொன்னது .வெகு நீண்ட என் போனை பிரிந்த - அந்த பத்து நாட்களும் முடிந்தது !



                                ஒப்புகை சீட்டை அங்கிருந்த (அதே ) பெண்ணிடம் கொடுத்தேன், வாங்கி கொண்டு உட்காருங்கள் என்றது .அந்த உட்காருங்கள் என்ற வார்த்தையின் அழுத்தத்தின் மதிப்பு ’இரண்டரை மணி நேரம்’ என்பது ,அப்படி சொல்லும்போது  தெரியவில்லை !  உட்கார இடமும் பஞ்சம் .பல பேர் என்னை விட ,காத்து இருப்பதில் இங்கு (ஆடி மாத )சீனியகள்போல! பல பேர் அழுந்திய முகத்துடன் இருந்தனர் .சில பேர் அடிக்கடி அங்கிருந்து போய் காஃபி ,டீ,தம் அடித்து திரும்பி வந்து  உட்கார்ந்து இருந்த இடத்தை இழந்தனர்.


                          அதில்  சுமார் ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் மிகவும் உணர்ச்சி வசபட்டவராக ( ரொம்ப சீனியர் போல ) அடிக்கடி என்ன ஆச்சு ? என்று கேட்டு கலவரப்படுத்தவே ஒருசமயத்தில் அவருக்கு முகத்தை  திருப்பிகொண்டது அந்த பெண் .வேகமாக எழுந்த அவர் சர்வீஸ் செண்டர் ஓனரை பார்க்க ஆவேசமுடன்  உள்ளே  சென்றார் .

                     அங்கு அவரை ஆசுவாச படுத்தி , மரத்தில் இருக்கும் மாங்காய்க்கு வீசபட்ட கல் தலையில் வந்து விழுந்த கோபம் அவர்முகத்தில் தென்பட திரும்பி வந்து, எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தார் .ஏதோ முணுமுணுப்பு மட்டும் அவரிடமிருந்து ஓயவில்லை . 

                  அப்போது என்னிடம் உங்கள் மெமரி கார்டு கொடுங்கள் என்று அந்த (வரவேற்பு அறை)  பெண் கேட்டது .  சென்சார் பிரச்சனைக்கு மெமரி கார்டு எதர்க்கு ?என்ற கேள்வியுடன் வேறு வழி இல்லாமல்  8GB UltimaPro Micro SDHC Card கொடுத்தேன் .அடுத்து சில நிமிசத்தில் சிம் கார்டு கேட்கிறார்கள் என்று ஒரு சின்ன பையன் வாங்கி போனான் .

                                  சுமார் கால் மணி நேரத்தில் , சர்வீஸ் சென்டர் ஓனர் வந்து அந்த உணர்ச்சி வசப்பட்ட மனிதரிடம் இந்தாருங்கள் உங்கள்  மெமரி கார்டு என்று அந்த மனிதரிடம் கொடுத்தார் .அவர் அதை வாங்கி கொண்டு திருப்பி, திருப்பி பார்த்தார். அதுவும்  8GB UltimaPro Micro SDHC Card .சில நிமிடங்களில் அவர் செட் ஒரு வழியாக வர, வாங்கி கொண்டு வெளியேறினார் .

                             அவர் போன சில நிமிடத்தில் , எனது அன்பு ஃபோனை என்னிடம் கொடுத்து செக் பண்ணி கொள்ள சொன்னார்கள் .சிம்மை பொருத்தி என் ஆர்வத்தோடு   பரிசோதித்தேன்.சென்சார் பிரச்சனை (அப்பாடா ) சரியாக இருந்தது . வாங்கி போன மெமரி கார்டை செக் பண்ண ’மியூசிக் ஐகன்’ உள்ளே போனால் ஒன்றுமே இல்லை செட்டிங்ஸ் வந்து ஸ்டோரேஜில் SD Card Total Space பார்தால் அங்கேயும் உள்ளே எதுவும் இல்லை என்றது .அடப்[ பாவிகளா ?



                                 அந்த பெண்ணிடம்  மெமரி கார்டு இல்லை என்பதை சொன்னேன் . வாங்கி வர உள்ளே போனது.யாரோ உரக்க அந்த பெண்ணை சத்தம் போட்டது எனக்கு கேட்டது . கண் கலங்க திரும்பி வந்து , என்னிடம் எதுவுமே சொல்லாமல் தன் சேரில் அமர ,நான் இலக்கு தவறிய அம்பை எய்த வேட்டைக்கரன்  போல நிற்க்க , சர்வீஸ் சென்டர் ஓனர் வேகமாக வெளியே போனார்.அதர்க்குள் போனுக்காக காத்து இருந்த இரண்டரை மணிதாண்டி மூன்று மணி நேரமும் ஆனது .திரும்பி வந்த ச.செ ஓனர்,உள்ளே சென்று ஒரு 8GB கார்டை எனக்கு திருப்பி தந்து விட்டு ,அந்த பெண்ணை பார்த்து ஏதோ சொல்ல, சட்டனெ எழுந்து அந்த பெண் உள்ளே போய் தனது ஹேண்ட் பேக்கை  எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டரை விட்டு அவசரமாக வெளியேறியது .

                            அப்போது ஓனர் சத்தமாக , செய்த தப்ப  புரிந்து கொள்ளாமல் பாருங்க சார் கோவத்தை ! உங்களிடம் வாங்கியதை அவரிடம் கொடுக்குபோது ஒரு வார்த்தை சொல்லவில்லை ஆனா கோவம் மட்டும் வந்துருச்சு ,வேலையை விட்டு போகுதாமா. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றார் கோபத்துடன்.

அங்கிருந்தவர்கள் எதுவுமே புரியாமல், பாதியில் ஆங்கில படம் ஓடும் தியேட்டருக்குள் வந்து  வேடிக்கை பார்ப்பவர்களை போல எதுவும் புரியாமல்  பார்க்க ...



                               என்னால் எதுவும் பேச முடியவில்லை .ஆனால் அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது .  அவர் அந்த வேலையை விட்டு போன பெண்ணை சொல்கிறாரா அல்லது  என்  ஃபோனைத்தான் வேலைக்கு ஆகாது என்று சொல்கிறாரா ? 

கிளம்பினேன் ... ( இனி ஆடிமாதம் வரவே வேண்டாம் ! )


திங்கள், 28 அக்டோபர், 2013

துணை மாப்பிள்ளை வேசம் ...

                     

call card !


                 திண்டுக்கல் அரசினர் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ITI ) வெல்டிங் செக்சனில் என்னுடன் சேர்த்து 13 பேர் படித்தர்கள்  .விடுமுறை போக சுமார் பத்து மாதங்கள் படிப்பு .எனக்கு இருந்த கணக்கு + அறிவியலில் கூட்டு 65.5 % மட்டுமே  (+2 மதிப்பெண் இங்கு செல்லாது ) என்பதால் பயிற்சி வகுப்பு ஆரம்பித்து இரண்டு மாதம் பாடங்கள் போன பின்பு ,கழித்து விட்ட லிஸ்டில் மீதிக்கு  call card  மூலம் எனக்கு (போனா போகுது என்ற ) அழைப்பு வந்தது . இருந்தாலும் 5 வருட ஆரம்ப பள்ளி ,7 வருட மேல் நிலை பள்ளி வாழ்விலும்  கிடைக்காத ஒரு சந்தோசம் இங்கு சில மாதங்களில் கிடைத்ததாக உணர்கிறேன் . அதர்க்கு பிறகு வேறு படிப்பில் கூட கிடைக்கவில்லை .
             
                     அந்த எங்கள் 13 பேரில் சாரி ராமன் என்ற நண்பரும் ஒருவர்.என்னை விட மிக நல்ல நண்பர் .அன்பான குடும்பத்தை சேர்ந்தவர் .அவரின் வீடு - திண்டுக்கல் அருகேயுள்ள தருமத்துபட்டி . 


                பொதுவாகவே வெள்ளி  கிழமை வரைதான்  ITI  .எனவே வெள்ளிகிழமை மாலை பயிற்சி நேரம் முடிந்தவுடன் அவசர அவசரமாக சிலபேர் கர்சீப்பில் மற்றும் பேப்பரில்  பாதுகாப்பாக வைத்து இருக்கும் பவுடரை முகத்தில் அப்பிகொண்டு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வரும் வழியில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல் நிலை பள்ளி வாசலை நோக்கி படையெடுப்பது வழக்கம்.( சில பேர் தினமும் ) அதில் நண்பர் சாரி(ராமனும்)யும் ஒருவர். 


அண்ணனை பார்த்த மாதிரி இருக்கு..

              ஒருமுறை ,இப்படி ஒரு பெண்ணை பார்த்து உனக்கு எனக்கு என்ற பேரம் நடக்க அந்த பெண்ணின் காதிலும் விழுந்து விட்டது முறைத்து விட்டு அந்த பெண்ணும்  கடந்து விட்டது.அடுத்த நாள் (சனிகிழமை) அம்மாவுடன் சாரி அடுத்த ஊரில் உள்ள ஒரு சொந்தகாரர் வீடு போக , அந்த வீட்டில் - அந்த பெண் . சாரிக்கு உள்ளூர செம கலவரம் .பொதுவாகவே அவர் அவர் பயம் நிறைந்தவர் .  
            அந்த பெண்ணின் அம்மாவிடம் சாரி அம்மா பேசி விட்டு கிளம்பும் போது , இவரை பற்றி விசாரிக்க ,அவர் திண்டுகல்லில் படிப்பதாக சொல்ல ,என் பெண்ணும் அங்கேதான் படிக்கிறாள் என்று சொல்லி விட்டு கூடவே ஏம்மா அண்ணனை அங்க பார்த்து இருக்கியான்னு கேட்க ,பயத்தில் கேட்காமலேயே சாரி அவசரமாக மறுக்க ஆனால் அந்த பெண் மிக சாதரணமாக பார்த்து விட்டு அண்ணனை பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லி விட்டு சாரிக்கு மட்டும் தெரிவது மாதிரி சிரித்து விட்டு போய்விட்டதாம்.சாரி அடுத்த ஒரு குடும்ப விஷேசத்தில்,  தன்னை தப்பிக்க வைத்ததர்க்கு நன்றி சொல்லவும் செய்த  தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார் .
(அதிக ) பிரசங்கம் !

                           எனக்கு   TVS ஓசூர் இண்டர்வியூவில் (http://myowndebate.blogspot.in/2013/10/tvs.html) புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கு முன்னே சென்று, பெருமையாக ! சொல்லி!! வைத்தவர்.அதனால்  உணர்ச்சி வசப்பட்டு நான் யூனியனின் அவசியத்தை பற்றி (அதிக ) பிரசங்கம் பண்ணி வேலை இழந்தது வேறு விசயம் . 
   
இன்ப அதிர்ச்சி !

                       அடுத்து ஒரு முக்கியமான விசயம், ITI முடித்து சுமார் 7 ஆண்டுகள் கடந்து நடந்த சாரியின் கல்யாணம்.  கும்பகோணத்தில் நடந்தது . சாரியின் வீட்டில் அவருக்கு தரும் சகல மரியாதையும் எங்களுக்கும் உண்டு .(தமிழ்நாட்டில் அவனவன் வீட்டில் கிடைக்காத பல மரியாதைகள் நண்பர்கள் வீட்டில் கிடைப்பதே பெரிய பாக்கியம் .அதை எனக்கு பல நண்பர்களின் வீடு தந்தது .) எனவே எனக்கு கட்டாய அழைப்பும் இருந்தது துணை மாப்பிள்ளை என்ற பொறுப்பும் இருந்த்தது . நான் அப்போது வேலை பார்த்த கம்பெனியில் புதிய பல பொய்களை சொல்லி விட்டு திருமணத்திர்க்கு போனேன் .அங்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.காரணம் - கல்யாணத்தை நடத்த வந்தது சாரியின் நெருங்கிய சொந்தகாரர்களான திரு.ஏ.எல்.ராகவன் (மூத்த நடிகர் & பின்னணி பாடகர்) அவர் மனைவி திருமதி. எம்.என்.ராஜம் (பழம்பெரும் நடிகை) .  சாரி என்னை அவர்கள் இருவருக்கும் நிறைய சொல்லி அறிமுக படுத்தினார்.போட்டோ எடுத்துக்கொண்டோம் .

எங்கிருந்தாலும் வாழ்க!


             பிறகு அவரின் (திரு.ஏ.எல்.ராகவன்) மிக பிரபலமான நெஞ்சில் ஓர் ஆலயத்திலிருந்து மறைதிரு. கண்ணதாசன் அவர்களின் ’எங்கிருந்தாலும் வாழ்க’ பாட சொல்லி கேட்டோம் .வேண்டாம் அது இங்கு பாடும் பாட்டல்ல என்று சொல்லி,வேறு ஒரு இனிமையான பாடலை பாடினார் .


துணை மாப்பிள்ளை ..

                      விசயம் இதோடு முடியவில்லை சாரி சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும் ஆனால் அவர்களின் சமூகத்தில் துணை மாப்பிள்ளைக்கு மிகபெரிய சண்டை போடும் திறமை இருக்க வேண்டும் என்பதுவும் முதல் மூன்று நாட்களில் பெண் வீட்டாருக்கு சிம்ம சொப்பனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது சாரியின் அம்மா சொன்னார்கள் .பெண்ணுக்கு மூன்று தங்கைகள் இருந்ததால் எனக்கு தலையே நிமிரவில்லை இதில் சண்டை வேறா ?
                        

அவர்  சிரித்ததை ...

                சரி வேறு வழியில்லை .திட்டமிட்டோம் .முதலில் ஒத்திகை பார்க்க சாரி உதவினார் .மூன்றாம் நாள் விருந்தில் மீன் பறிமாறப்பட்டது  .அதில் முள் இருந்தது அது ஏன் என்று கேட்கலாமா என யோசித்தோம்! ஒருவேளை சிரித்து விட்டால் ? அதை விட்டு விட்டு ,மாமனாருக்கு ஏன் இப்படி தலை வழுக்கை என ஆரம்பித்தால் ? அதை பற்றி மாமியாரே கவலை பட வில்லை .சரி வேறு வழியில்லை நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கும்  பெண் வீட்டுக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் இருக்கும் அதர்க்கு ஏன் கார் ஏற்பாடு செய்யாமல் ஆட்டோ அனுப்பினீர்கள் என்று மிக பெரிய தைரியத்தை வர வழைத்துக்கொண்டு கேட்டேன் .( கேட்டேன் என்பதை விட பதிமூன்றாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்புவித்தேன் என்று கூட சொல்லலாம்) அதர்க்கு பெண்ணின் அப்பா ,இந்த வழியில் கார் வராது மாப்பிள்ளை என்றார் .திரும்பி சாரி ராமனை பார்தேன் .அவர் அப்போது சிரித்ததை  வெகுநாளாய் என்னால் மறக்க முடியவில்லை    


சனி, 19 அக்டோபர், 2013

முதல் விதியை காதலித்தேன் - TVS வேலை.


               எல்லோரும் நியூட்டனின் மூன்றாம் விதியை துரத்தி  கொண்டு இருக்கும் போது நான் மட்டும் முதல் விதியை காதலித்தேன் .அது ”ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்”.            இதை நான் விரும்ப காரணம் அது "மனதில் இருக்கும் நம் எண்ணங்களுக்கு ஏற்ப நம் சூழ்நிலை அமைக்கிறது. நாம் எந்த சூழ்நிலையை விரும்புகிறோமோ அதற்கேற்ப நம் மன எண்ணங்களை அமைத்துக் கொள்ளும் போது நம் வாழ்க்கை நம் விருப்பம் போல் அமைகிறது"  (THOUGHT EVOLVED BEING) என்ற ஜேம்ஸ் ஆலன் கருத்தோடு ஒத்து இருந்ததாக பட்டது அதனால்தான் .


           சரி, இதர்க்கும் எனது TVS இண்டர்வியூக்கும் எப்படி தொடர்பு ...?
எனக்கு சின்ன வயதிலிருந்தே  TVS நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆசை என் வயதோடு வளர்ந்து வந்து விட்டது . நான் பிறக்கும் முன்னே அப்பா LGB நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார் .அப்போது இந்த இரண்டு போக்குவரத்து நிறுவனங்கள்தான் முடி சூடிய சாலை மன்னர்கள் .முக்கியமாக TVS நிறுவனத்தின் ஒழுக்கம் , கட்டுப்பாடு மற்றும் புரிதல் என்னை பெரிதும் கவர்ந்தது .இன்றும் வேறு எந்த நிறுவனதின் போக்குவரத்து வாகனங்களிலும் ஒரு உதவியாளர் என்று சொல்லக்கூடிய கிளீனர் இல்லாத வாகனங்களை பார்க்க முடியாது ஆனால் TVS வாகனங்களில் ட்ரைவர் மட்டுமே இருப்பதை பார்க்கலாம் !
       
    
                மேலும் +1 படிக்கும் போது ஒரு நண்பர் சொன்னார் TVS வேலைக்கு ஸ்போர்ட்ஸ் முன்னுரிமை உண்டு என்றார் .அந்த சமயம் கிரிகெட்டில் ஒப்பனிங் பேட்ஸ் மேனாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பட்டயை கிளப்பி கொண்டு இருந்தார்.அதனால் அதுவரை பிடிக்காத கிரிகெட்டை கெட்டியாக பிடித்து கொண்டேன் .நான் இடது கை பழக்கம் உள்ளவன் என்பதால்  அங்கு அது மிகவே உதவியது . 
                +2 மிக சராசரியான மதிப்பெண் பெற்றதால் அடுத்து எங்கு சேருவது என்று யோசிக்க நேரம் எடுத்து கொள்ள அப்பா திண்டுக்கல் அரசினர் தொழிற் பயிற்சியில் சேர்த்து விட்டர்.
              
                        அங்குதான் ,கும்பிட போன தெய்வம் குறுக்கே வருவது போல எனது ஐடிஐ கேம்பஸ் இண்டர்வியூ TVS ஓசூரிலிருந்து வந்து இருந்தார்கள் 13 பேரில் ஐவர் மட்டுமே தேர்வானோம் .மிக ஆர்வத்துடன் நேர்முகதேர்வுக்கு ஒசூர் போனோம்.அன்று எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருவரும் முதலில் அழைக்கபட்டார்கள் .அப்போது அவர்களிடம் கேட்க்க பட்ட கேள்விகளில் ஒன்று புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி ..அதர்க்கு இருவரும் எங்களுக்கு அதை கற்று கொடுத்தவர் பின்னாள் வருகிறார் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்கள் 


                     நான் போன உடன் கேட்க பட்ட கேள்வியில் அதுவும் ஒன்று .அத்துடன் யார் எழுதியதெல்லாம் படிப்பீர்கள் என்பதையும் கேட்டார்க்ள் இப்போது நேரம் குறைவு என்பதால் கொஞ்சம் செலெக்டிவாக படிக்க வேண்டியதாக இருக்கிறது அப்போது அப்படி இல்லை . கிடைத்ததெல்லாம் படிப்பதால், சொன்னேன். .கடைசியாக ஒரு கேள்வி என யூனியன் ,சங்கம் அவசியமா என்பது போல கேட்டார்கள் . . மிக முக்கியம் என்றேன் .அதர்க்கு அவர்கள் நீங்கள் ஒரு நிறுவனத்தை நம்பி சேரும்போது பிறகு அந்த நிறுவனம் அவர்கள் மீது எடுத்து கொள்ளும் அக்கரையை விட உங்கள் யூனியன் சாதித்துவிட முடியுமா என்று தொடர்ந்து கேட்ட போது கூட என்று கேட்டபோது எனது படிப்பறிவு அந்த கூர்மையான கேள்வியின் பின் புலம் தெரியாமல் பதில் சொல்ல வைத்தது. நிறுவனத்திர்க்கும் – தொழிலாளிக்கும் யூனியன்தான்  உறவு பாலம் என்றேன் பிடிவாதமாக . அப்படி நான் சொல்ல  காரணம் அப்பா இங்கு திண்டுகல்லில் LGB யூனியன் லீடர் .


                    என்னுடன் கலந்து கொண்ட எல்லோருக்கும் கம்பனி அப்ரண்டீஸ் தேர்வு செய்து கடிதம் வந்தது என்னை தவிர .பிறகு ஒசூரில் பை மெட்டல் பேரிங் என்ற கம்பனியில் வேலை பார்க்கும் என் சீனியரிடம் விசாரித்தபோது அவர் சொன்னார் . யூனியன் பற்றிய அந்த பதில்தான் மற்றவகளை விட மார்க் இருந்தும் உனக்கு வேலை கிடைக்காமல் போகவைத்து விட்ட்து. நீங்கள் இண்டர்வியூ வந்த போது யூனியன் பிரச்சனையால் கம்பெனி காலவரையற்று மூடி இருந்தது என்றார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது  குறுக்கே வந்த கடவுளை நான் தள்ளிவிட்டு விட்டேன் என்பதை .
                

               ஆனாலும் நியூட்டனின் மூன்றாம் விதியை அப்போதும் காதலித்தேன் .மீண்டும் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் TVS கம்பெனியின் சிறு வாகனம் முதல் பெரிய வாகனம் வரை ரீ பெல்ட் ஏஜண்ட் . அவருக்கு உதவியாளராக இருந்தால் சேர்த்து விடுவதாக சொல்லவே அவரை நம்பி  அவருடன் பணிசெய்து கொண்டே  அனேகமாக த்மிழ் நாட்டில் உள்ள அனைத்து TVS நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன்  .பலன் இல்லை .ஆனால்  தொடந்து துரத்தும்போது சுமார் 3 வருடங்கள் கனவாகவே போய்விட்டது .இறுதியில்தான் போன பதிவில் ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் கூத்து .


                  திண்டுகல்லில் சசிகுமார் நம்பி எடுத்த படமெல்லாம் ஓடும்போது ,போத்தீஸ் விளம்பரத்தில் சிவ கார்த்திகேயன் சொன்னது போல என்னுடைய TVS வேலை என்ற கலர் பட காட்ட முடியாமல் போய்விட்டது .ஆனாலும் சசிகுமார் நண்பர்  சமுத்திரக்கனி சொன்னது போல கிடைத்ததை விரும்ப பழகி கொண்டேன் .


    ஆனால் நான் வைத்து இருப்பது TVS -Star City .இதில் என் கனவு நிறைய நிரம்பிவிட்டது 


               இந்த பதிவில் என்னுடன் ஐடிஐ படித்து ,பிறகு என்னுடன் இண்டர்வியூ வந்து புத்தகம் படிக்க கற்று கொடுத்தவர் என்று சொல்லி விட்டு  TVS வேலையில் பணிபுரியும் நண்பர் சாரி ராமன் ( இது பெயர்தான் ) பற்றிய சில வேடிக்கை, அடுத்த பதிவில் ..

வெள்ளி, 18 அக்டோபர், 2013

நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள்


                   இப்போதுதான்  எங்கள் நிறுவனத்தில் இண்டர்வியூ புயல் ஓய்ந்தது .எப்போதுமே மெர்சண்டைசிங் ( merchandising ) மற்றும் குவாலிட்டி (Quality ) அழைப்புக்கு எனது ஜீ மெயில் முகவரியும் ,மொபைல் எண்ணும் கொடுத்து விடுவதால் ,ஞாயிறு யாரெல்லாம் தினமலர் வேலை வாய்ப்பு பக்கத்தை   பார்க்கிறார்களோ எனக்கு கூப்பிட அரம்பித்து விடுவது வழக்கம் .

                  இதை மறந்து விட்டு வெகு நாளைக்கு பிறகு ஒரு விருந்துக்கு பந்தி பறிமாற நான் போக ஒவ்வொரு ஒரு இலையை கடக்கும் போதும் ஒரு போன் வர துவங்கியது ... சிலர் பந்தா பண்ணுவதாக ஓடாத படத்தின் போஸ்டரை பார்ப்பது போல என் மேல் பார்வயை மேய விட பாதியில் எஸ்கேப் ஆகி ஒதுங்கிவிட்டேன் .ஆனால் இது இங்கு விசயமல்ல ..நான் அனுபவித்த நேர்முக (இண்டர்வியூ ) கூத்துக்கள் பற்றி

பில் கலெக்க்டர் !

                                ஐடிஐ முடித்து நேர்முக தேர்வுக்கு காத்து  இருந்த சமயம் அது . அப்பாவின் முதலாளி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் செயலாளர் பதவிக்கு அப்போதுதான் தேர்ந்தெடுக்க பட்டு இருந்தார்  .எனவே சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒருமுறை ரசீது கொடுத்து பணம் பெறும் வேலைக்கு, ஆள் போடும்வரை என்னை வசூலிக்க  ஒரு மாதம் மட்டும் கட்டாயத்தின் பேரில் அமர்த்த பட்டேன் .அப்போதுதான் வேலை பற்றி படிப்பதர்க்கும் அதை நேரிடையாக சந்திப்பதர்க்கும் உள்ள இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது .ஒரு மாதம் முடிந்த போது (முதல்) சம்பளம் வாங்க அப்பாவின் முதலாளியை பார்க்க போனேன்.அப்போதுதான் அவர் சொன்னார் இன்னும் உனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லை நாளைக்கு இவரை போய் பார்த்து வாங்கி கொள்ள சொன்னார் .போனேன் .அதுவும் ஒரு பஸ் செட்.சட்டையில்லாமல் ஒரு மனிதர் கனத்த  குரலுடன் பேசிகொண்டு இருந்தார் .என்னை ஒரு காக்கி சட்டை(கண்டக்டர்) அறிமுபடுத்தினார் .உட்கார சொல்லாமல் உனக்கு எவ்வளவு சம்பளம் என்றார் ? எனக்கு அப்போதெல்லாம் கம்யூனிச சித்தாந்தின் மேல் நம்பிக்கை அதிகம் .அதன் படி உழைப்பவன் வேர்வை காய்வதர்க்குள் கூலி தந்துவிடவேண்டும். ஆனால் இங்கு ஓடி ,ஓடி மாதம் பூரம் வசூலித்து கொடுத்து விட்டு சம்பளம் கேட்டால் எவ்வளவா? எனக்குள் இருந்த அறைகுறை படிப்பறிவும் , கம்யூனிச சிற்றறிவுக்கும் யாரோ தீவைத்தது போல பற்றி கொள்ள , ஒரு மனிதன் வாழ்வதர்க்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு வேண்டும் என்றேன் .எதிரே இருப்பது யார் என்பதை கவலைப்பட கூடாது என்று தீர்மானித்து கொண்டு .அவர் இதை எதிர்பார்க்கவில்லை .உற்று பார்த்து உனக்கு வேண்டியதை சொல் என்றார் .அதை என் அப்பாவிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறேன் என்றேன் .என்னை போக சொல்லிவிட்டார் .அடுத்த நாள் என்னை அப்பாவின் கம்பனிக்கு அழைத்த முதலாளி ,அந்த அந்த ரசீது புக்கெல்லாம் கொடுத்து விட்டு பஸ் கம்பனிக்கு வேலைக்கு வந்து விடு என்றார் .நான் தயங்கி கொண்டே வெளியே வரும் முன்  ,நேற்று நீ பேசியது யார் தெரியுமாப்பா ? என்றார் .தெரியாது சார் என்றேன் .அவர்தான் அசோசியேசன் தலைவர் .பயமில்லாமல் நீ பேசியதர்க்கு இங்கு சேர்த்து கொள்ள சிபாரிசு பண்ணியதே அவர்தான் என்றார்  .
                 எனக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் கிடைக்கும் வரை அங்கு சுமார் இரண்டரை வருடம் பணிபுரிந்தேன் .
             

     அப்ரண்டீஸ்.
      
                அடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் நேர்முகதேர்வு .பழைய எனது ஐடிஐ நண்பர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள் .அதில் ஒருவன் பால கிருஷ்ணன் .காவல்துறையில் அவன் அப்பா பணிபுரிகிறார் .எனக்கு இரண்டு பேருக்கு முன்னாள் அவன் அழைக்கப்பட்டான் .போய் சில நிமிடங்களில்  அவன் திரும்ப, எங்களுக்கு நேர்முக தேர்வு பயம் இருந்ததால் அவனிடம் ஆவலாய் உள்ளே என்ன கேள்வி கேட்கிறார்கள் என்றதர்க்கு எதுவும் சொல்லவில்லை . நாங்க முன்னாடியே ஏற்பாடு பண்ணிட்டோம் என்பதை மட்டும்  சொல்லிவிட்டு போய்விட்டான் .
                         
மொத்த வெல்டிங் ?
                  என்முறை வந்தது .மூன்று பேர் கேள்வி கேட்க காத்து இருந்தார்கள் .வெல்டிங் எத்தனை வகை  என்றார்கள் முதல் கேள்வியாய்.சார் எனக்கு தெரிந்த ஐடிஐ வெல்டிங் சொல்லவா ? அல்லது உலகத்தில் உள்ள மொத்த வெல்டிங் சொல்லவா சார்  என்று திருப்பி பணிவுடன் கேட்டேன் .ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் .உனக்கு தெரிந்த வெல்டிங் எல்லாத்தையும் சொல்லுங்க என்றார் .நான் எனது ஐடிஐ சீனியர் வேல்முருகன் திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பார்த்து கொண்டு இருந்தவர் மூலமும் ,மெக்கானிகல் என்ஜீரியங் நண்பர் மூலம் அறிந்த விசயங்களை சொன்னேன் .’இண்ட்ரஸ்டிங்’ என்றார்கள்.

கப்பலில் ஓட்டை

              அப்புறம் ஏன் உங்கள்  ஐடிஐ படித்த பாலகிருஷ்ணன் நடுகடலில் கப்பலில் ஓட்டை ஏற்பட்டால் எந்த முறையில் வெல்டிங் செய்வாய் என்றதர்க்கு கரைக்கு கொண்டுவந்து ஆர்க் (Arc ) வெல்டிங் செய்வேன்னு எப்படி சொல்றார் என்று கேட்டார் .நான் உள்ளுக்குள் சிரித்து கொண்டேன் .அந்த இண்டர்வியூ வெறும் கண் துடைப்பு என்று அவன் சொன்னதை இங்கு எப்படி சொல்வது ?ஆனாலும் எனக்கும் அப்ரண்டீஸ் கிடைத்தது .என்ன பாலகிருஷ்ணன் திண்டுக்கல் RMTC நான் பழனியில் RMTC (ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் )


அடுத்த எனது இண்டர்வியூ ,எனது கனவு நிறுவனமான TVS நிறுவனத்தில் பணிபுரிய எடுத்து கொண்ட முயற்சி பற்றி ...