சனி, 20 ஜூலை, 2013

ஒரு( விபரீத) ஆசை




         யாராவது உங்களிடம் (கொஞ்சம் மதிப்பாய்) நீங்கள் இந்த வேலைக்கு வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் எனும்போது  (நம்மால் முடியாவிட்டாலும் ) ஒரு பந்தாவுக்காகவாவது பிரபலமான ஒரு துறையில் இருந்து இருப்பேன் என்பதாக சொல்வது வழக்கம்தான்  .ஆனால் அப்படி நான்   சொல்லாவிட்டாலும் எனக்கு ஒரு ( விபரீத )ஆசை இருந்தது .அது நான் ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் ஆக வேண்டும் என்பது !
         நல்ல வேளை எனது நண்பர்கள் பலரின் குல தெய்வ வேண்டுதலால் !! அப்படி ஒரு துரதிருஷ்டம் இந்த உலகுக்கு ஏற்படவில்லை என்பது வேறு விசயமே .

        நான் புகைப்பட கலை பழக ஆசைப்பட்ட காலம் ஒயிட் அண்ட் பிளாக்கில் எடுப்பதானால் ஃபிலிம் செலவு குறைவு ஆனால் பிரிண்ட் காஸ்ட் அதிகம் .கலர் இதர்க்கு நேர் எதிர் என்பதால் நண்பரிடம் இருந்த ஒரு ஹாட் சாட் கேமிரா இருந்ததை  பழக கேட்டேன் .கொடுத்து விட்டார் .அதோடு அவர் சும்மா இருந்திருக்கலாம் .கொடுக்கும்போது இந்த கேமிராவில் ஐந்து அடிக்குள் மட்டும்தான் படம் எடுக்க முடியும் அதனால் நீங்கள் ஃப்ரேம் மட்டும் எப்படி எடுப்பது என்பதை இதில் கற்றுகொள்ளுங்கள் எனறார். உடனே ஒரு கருப்பு வெள்ளை ஃபிலிம் ரோல் மாட்டி எனது கற்பனை குதிரையை ,அமெரிக்காவின் பிரபல  Ansel Easton Adams  ரேஞ்சுக்கு யோசிக்க தொடங்கி விட்டேன் .ராப் பகலாய் இதே யோசனை !  


ஊருக்கு பக்கத்தில் ஓடைப்பட்டி என்று ஒரு ஊரில் சின்ன குன்றுதான் என் முதல் பலி சாரி முதல் ஃப்ரேம். ஒரு ஐந்து படங்கள் .அப்புறம் இருக்கவே இருக்கு( பாவம் ) திண்டுக்கல் மலை கோட்டை .நல்லவேளை அப்போது தொல்பொறுள் துறை வசம் அது இல்லை .இருந்திருந்தால் நான் எடுத்த கோணத்திற்காக அப்போதே எனது படம்தான் நுழைவு சீட்டில் படமாக இந்த உலகம் முழுதும் தெரிந்து இருக்கும்!   (அல்லது பித்தளை பெட்டி மலை சரிவுப்பக்கம் என்னை ஒருவேளை மேலே இருந்து உருட்டிகூட விட்டு இருக்கலாம்  என்பது வேறு விசயம் !)


       இது பத்தாது என்பதாக மனசுக்கு தோணவே ,அப்போது படித்து கொண்டு இருந்த தி .ஜானகி ராமனின் ‘மோகமுள் ‘ படத்துக்கு கதைக்கு ஏற்ப படம் எடுக்க ஆசைபட்டு ஆரம்பிக்க ,(இயக்குனர் ஞான ராஜசேகரன் மன்னிக்கவும் ) பக்கத்து வீட்டில் பள்ளி விடுமுறைக்கு வந்த ஒரு பெண்ணை அந்த கதையின் யமுனா கதாபாத்திரத்திர்க்கு ஏற்ப யோசித்து அந்த பெண்ணை நடுவீட்டுக்குள் உட்கார வைத்து கையில் ஒரு பூவை மட்டும் பிடித்து இருக்க, எல்லா கதவையும் சாத்தி விட்டு, (மன்னிக்கவும் ) முகத்தில் மட்டும் ஒளி விழுமாறு  எதிரே ஒரு ஜன்னலை மட்டுமே திறந்து வைத்து படம் எடுத்தேன் .


அப்புறம் எனது கிரிக்கெட் அணியை , எனது படிக்கும் அறையை ,சில நண்பர்களை ,வீட்டு வாழை மரத்தை ,பப்பாளி மரத்தையும் படம் எடுத்து ஃபிலிமை (நல்லவேளை )தீர்த்தேன் .


       ஸ்டுடியோவில் ப்ரிண்ட் போட்டு கொண்டு இருக்குபோது வெளியே நெர்வசாக ஒரு Robert Capa's வின் Falling Soldier ஃபோட்டோ அளவுக்கு என் ஒவ்வொரு ஃப்ரேம் அள்வுக்கு யோசித்து கொண்டு இருக்க , நண்பர்தான் முதலில் படங்களை பார்த்தார் .எதுவும் சொல்லவில்லை ,கை கொடுத்தார் .நீங்க இப்போ ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் என்றார் .அப்புறம் என் நிலை சொல்லவா வேண்டும் ? நானாகவே ஏதோ மலையிலிருந்து உருளுவது போல இருந்தது .



                 
                        நான் சின்ன வயதிலிருந்தே ஏதாவது புது புது விசயங்களை தேடிபோவதால் கிடைக்கும் அத்தனை நபர்களிடமும் நான் அப்போது செய்து கொண்டு இருக்கும் வேலை மிக ஈடுபாட்டுடன் ஒரு மேதாவித்தனத்துடன் ஒப்பிப்பது சகஜம் .அப்படி ஒரு நண்பர் கேள்விபட்டு ,தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவை புகைபடம் எடுக்க கேட்டு கொள்ள பள்ளபட்டி என்ற கிராமத்துக்கு போனோம் .பொதுவாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் .அதனால் ஒவ்வொருமுறையும் ,விசேசத்திர்க்கு சாப்பிட மட்டுமே வந்த பங்காளி மாதிரி பதுங்கி பதுங்கி போட்டோ எடுக்க, அப்புறம் எனக்கு ஒருவரை துணையாக உதவிக்கு தந்து முன்னுக்கு தள்ளினார்கள் .
              அதே நண்பரின் கல்யாணத்திர்க்கு போட்டோ எடுக்கும் அளவுக்கு ஓரளவு திருப்தியாக படங்கள் அமைந்தது .ஆனால் அந்த கல்யாணத்தில் தாலி கட்டும் போது ஃபிலிமை தீத்துவிட்டு மாப்பிளை நண்பர் என்பதால் கையில் தாலியுடன் காத்து இருக்க அய்யரை முறைக்க வைத்து விட்டு ,அவசரமாக ஃபிலிம் லோடு பண்ணி படம் எடுத்தது இதில் சேத்தி இல்லை .


 பொதுவாகவே போட்டோ கிராபருக்கு ஒரு மரியாதை உண்டு என்பது கொஞ்சம் போதையான விசயம் .முகம் தெரியாத ஆள்கூட தந்து முகத்தை பதிய வைத்து கொள்ள சினேகமாய் பேசுவது இன்னும் கொஞ்சம் உசத்தியாய் அப்போது யோசிக்க வைக்கும் .எனது ஆர்வம் அல்லது தொல்லை  தாங்காத இன்னொரு நண்பர் நான் பாண்டிசேரியில் இருக்கும்போது அப்போது வந்த புதிய மாடலான yashica kyocera MF2 வாங்கி கொடுத்து பல விசேசங்களை வாய்பு தேடித்தர ..கனவுகள் கூடசில சமயம் ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் அடடா போச்சே என வரும் ..


                  இப்போது எனது  பையன் மைக்ரோ மேக்ஸ் A 89 போனில் எடுக்கும் மிக சாதாரண போட்டோக்கள் கூட அசரவைக்கிறது .அவனுக்கு ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தட்டி எடுக்கிறான் .சில விசயங்களை(மற்றவர்களை) கஷ்டப்படுத்தி  நாம் கற்று கொள்வதை விட கவனாமாக செய்தால் போதும் என்பதர்க்கு  எனக்கு நானே ஒரு மிக மோசமான உதாரணம் போல !

வெள்ளி, 19 ஜூலை, 2013

நிர்மலாவின் கடிதம்



                அன்று வந்த கடிதங்களை வாசிக்க வகைப்படுத்தும்போது , முதலில்  சோவியத்யூனியனின் - மாஸ்கோ வானொலி நிலைய உறுப்பினர் வண்ண அட்டை , BBC தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் அடுத்து அனுப்புனர் பெயரில்லாத  இலங்கையிலிருந்து ஒரு  கடிதம் .

 வானொலி மன்றம்.


                 இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .உலகம் முழுதும் செயல் படும் வெளி நாடுகளில் உள்ள  தமிழ் வானொலிகளுக்கு மட்டுமே கடிதம் எழுத நண்பர்கள் பலர் சேர்ந்து, மன்றம் வைத்து இருந்தோம். (பெயர்: சமாதான சகோதரர்கள் வானொலி மன்றம்.  அமெரிக்காவால் சோவியத்யூனியன் (USSR) உடைக்கப்படும் முன் அதன் அதிபர்  மிக்காயேல் கார்பச்சேவ் - நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட உறவினை கொண்டாடும் விதமாக, இந்த பெயர் )அப்படியிருந்தும் சின்ன வயது முதல் கேட்டு வரும் இலங்கை வானொலிக்கு  கடிதம் எழுதும் ஆர்வம் இல்லை .மேலும் அது வானொலி நிலையக்கடிதம் என்பதை அதன் அடையளங்கள் சொல்லவில்லை  அப்படியானால்..

               எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் கடிதத்தை உடனே படிக்கமாட்டேன் .ஆனால் அந்த விரதம் அடுத்த நாள் கோவை பேனா நண்பர் முருகேசன் கடிதம் வரும்வரைதான்  .அதில் இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா என விசாரிக்கபட்டு இருந்த போதுதான் எனக்கு தெரிந்தது .அது அவரின் நீண்ட நாள் தோழி நிர்மலாவால் அனுப்ப பட்டதென்று .



            பிரபலங்கள் எழுதிய கதைகளை தாங்கி வரும்  பல்சுவை நாவல் படிப்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாக கருதபட்ட சமயத்தில் அதில் வாசகர் வட்டம் ஏற்படுத்தியிருந்தார்கள் .அதன் மூலம் எனக்கு கிடைத்த பல நண்பர்களில் கோவை கலர் சாலை தோட்டத்தை சேர்ந்த முருகேசனும் ஒருவர் .பல மாதங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து உறவுகளை மேம்படுத்தி கொண்டு இருந்த போது ,அவர் எனக்கு எழுதிய கடித்தத்தில் தனக்கு இலங்கையில் நிர்மலா என்ற தோழி இருப்பதாகாவும்  என்னுடய சில தவறுகளால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்வதில்லை என்பதாகவும் ஆனால் அவர்கள் மிகவும் தனது  சொந்த வாழ்வின் கசப்பான அனுபவங்களால் தவிப்பதாகவும் ,அவர்களுக்கு உங்களின் நட்பு ஆறுதல் தரும் என்பதால் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்ட கடிதம் வந்து சில மாதங்களுக்கு பிறகே இந்த நிர்மலாவின் கடிதம் .



            கடிதம் மிக அழகிய இலங்கை தமிழில் அழகான மிக விசாரிப்புகளுடன் நீண்டதாக இருந்தது .பொறுமையாக படித்தபோது ,இங்கு நாம் வழக்கில்  தொலைத்த  பல  தமிழ் வார்த்தைகள் என்னை திணறடித்தன ஆனாலும் ஒரு மெல்லிய ஆழமான நட்பின் தேடல் கடிதம் முழுதும் என்னை ஆக்கிரமித்தன ..



           பிறகு மாதம் ஒரு கடிதம் வர தொடங்கியது .தான் ஒரு இளமை  பிராயத்தில் அறியாமல் ஒருவரை காதலித்து கைவிட பட்டதாகவும் இதனால் வீட்டில் பெற்றோர்களின் அன்பை இழந்ததாகவும்  , இப்போது படித்து விட்டு வேலைக்கு போன இடத்தில்  பல ஆண்டுக்கு பிறகு  மீண்டும் ஒருவரை காதலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .ஆனால் அது திருமணம் வரை போக  சில சிக்கல்கள் இருந்தன. தனது காதலன் ஒரு சிங்கள வம்சாவளி என்பதால் ,அவர்கள் வீட்டில் சம்மதம் தடுமாறி கொண்டு இருப்பதாகவும் , அதனை பேசி முடிக்க அடுத்த மாதம் என் மேல் மிகவும் பாசம் உள்ள இரண்டாவது அண்ணன் வருகிறார்  என்பதகாவும்  அது நல்லபடியாக நிறைவேற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டு இருந்தார் நிர்மலா .

         ஆனால் ,அடுத்த மாதம் கடிதம் வரவில்லை .எனது இரண்டு கடிதங்களுக்கும் பதில் வரவில்லை ,மேலும் அப்போதுதான்  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கை தீவை தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டு இருந்தது .இதனால் இனம் புரியாத கவலை என்னை துரத்த தொடங்கியது .அதர்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக மூன்றாவதாக நான் எழுதிய கடிதம் எழுதினேன் .ஆனால் அதை அனுப்பும் முன் ஒரு கடிதம் 1987 டிசம்பர் மாதம் வந்தது .ஆனால் அது கடிதம் அல்ல எனக்கு தண்டனை !.




                 ஆம் .அந்த கடிதம் வந்தது நமது  இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) அங்கு சென்ற சமயத்தில் 1987 அக்டோபர் 5 ஆம் நாள்  புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு கொள்கை அளவில் முரண்பாடு ஏற்பட்டதால் .(இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.)



             புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது .இந்த போரில் நிர்மலாவின்  காதலன் வீட்டு அருகே நடந்த புலிகளுக்கும் - நமது  அமைதிகாக்கும் படைக்கும் நடந்த யுத்தத்தில் நமது இந்திய ராணுவ வீரனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட ஒரு குண்டின் சிதறல் தவறிபோய் நிர்மலாவின்  காதலனின் வயதான பாட்டியின் காலில் பாய்ந்து இறந்து போகவே மீண்டும் கை கூட இருந்த நிமலாவின் உறவு இந்த காரணத்தால் மறுதளிக்கப்பட்டதாம் .

            இதில் மனம் உடைந்து போன தனது அண்ணனை  சில நாளுக்கு பிறகு இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலி என்று சந்தேகப்பட்டு வாயில் சுடபட்டு நடு ரோட்டில் கொல்லபட்டதாகவும் ,தனது அன்பு வாழ்கையும் , எனது மேல் பாசம் காட்டிய ஒரே ஜீவன் அண்ணன் இறப்பும் ,தனது வாழ்வில் மீளா சோகத்தில் தள்ளிய பின் நான் எங்கு போகிறேன் எனக்கு தெரியவில்லை ,எனவே மீண்டும் நான் இதை எல்லாம் தாங்கி கொண்டு பிழைத்து வந்தால் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என முடிந்திருந்தது அந்த கடிதம் ..



              எனக்கு தெரிந்த ஒரு நிர்மலாவின் நிலையே இவ்வாறு என்றால் இப்போது எத்தனை நிர்மலாவின் வாழ்கையின் சீரழிவை அந்த ராவண பூமி விதைத்து இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ...

       வரலாறு ..( என்ன சொன்னாலும்  அங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பது வெறும் இரக்கமற்ற காகிதங்கள் மட்டுமே ! )




          காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர்.அன்றைக்கு கலிங்க நாட்டினில்(இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) இருந்து வெளியேற்றப்பட்ட  போரில் தோற்று ஓடிய  (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது) ஒரு இனக் குழுவின் இளவரசன்-விஜய சிங்கன் என்பவன் அங்கிருந்து  தெற்கே பயணித்து, இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும்(இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது )அங்கு இருந்த  தமிழ் பெண்  இளவரசி குவேனியை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான் உண்மை .இதர்க்கு சாட்சி



                    இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று? ( நன்றி - http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/2.html)



                இனி , ஒண்ட வந்த பிடாரிக்கும் ஊர் பிடாரிக்கும் வித்தியாசம் யாராவது காட்ட வேண்டும் என்றால் இந்திய வரைபடத்தில், தமிழகத்தின் தொங்குசதையாக இருக்கும் பார்வதியின் சாபம் பெற்ற ராவணத்தீவை காட்டுங்க்ள் 

திங்கள், 15 ஜூலை, 2013

திருட்டு ரோஜாக்கள்


                                             
                                         
                                       திருப்பூரில் ஒரு திருமண வரவேற்பு விழா லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது .மண்டபத்தின் நுழைவு வாயிலில் பலவகையான ரோஜாக்கள் மற்றும் பல மரக்கன்றுகள் இலவசமாக கொடுத்து கொண்டு இருக்க ,சரி நாம் வரும்போது வாங்கி செல்லலாம் என பேசிக்கொண்டு உள்ளே சென்றோம்.


                           இந்த வரவேற்பு முக்கிய நிகழ்சிகள் திருப்பூர் மனவளக்கலை அமைப்பினர் தலைமையில் சிறப்புற செதுக்கப்பட்டது போல மிக அழகான வகையில் அர்த்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                   எந்த கல்யாணத்திலும் பார்க்காத வகையில் மணமகனின் தந்தையும் , தாயும் வந்தவர்களை வரவேற்க்க ,அமர்ந்து இருக்கும் இடத்திற்கே வந்து வரவேற்று அசத்தினார்கள் .


                                                 அடுத்து சென்னை அனுஷம் வித்தியாசமான குழுவினரின் நாட்டிய நடன கலைநிகழ்ச்சி அரங்கேறியது .பொதுவாக இம்மாதிரி நிகழ்சிகளில் திரைபாடல்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதை தவிர்த்து நிறைய கருத்துருக்களை வைத்து அசத்தினார்கள் .இதில் உச்சகட்டமாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து "நூறுவருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான் " என்ற படலை ஒலிக்க செய்து, ஆட விரும்பிய பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து கொண்டாடினார்கள் .


                                             நினைவுபரிசாக வந்திருந்த அனைவருக்கும் ஒரு பரிசுபையை தந்தார்கள் .அதில் 1.வேதத்திரி அவர்களின் லேமினசன் படம் .2.வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ...(கையடக்க புத்தகம்) .3. இல்லம் சங்கீதம் என்ற ஒரு கட்டுரை தொகுப்பு (அழகிய படங்களுடன் + முக்கிய தொலைபேசி எண்கள் ) 4.திருப்பதி +பத்மாவதி திருகல்யாண வண்ணப்படம் .5.மந்திரங்கள் + இறைப்பாடல்கள் அடங்கிய 1.05 G.B அளவுள்ள DVD என அருமையாக யோசித்து அளித்து இருந்தார்கள் .


                                                பொதுவாக இந்த கல்யாணங்களில் பபே ( Pafe ) முறைப்படி மட்டுமே வழங்குவார்கள் .ஆனால் இங்கு வழக்கமான முறையும் இருந்தது .( கையேந்தி பவனில் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு! )


                            எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மண்டபத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பல வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள் .அங்குதான் நம் மக்களின் மனம் ஆரோக்கியத்தை கண்டோம் .இலவசமாக தந்தால்  அனைவருக்கும் சென்று அடையும்  என்ற கொடுப்பவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் ஒன்றுக்கு பல கன்றுகளை அள்ள , பாவம் பலபேர் ஒன்று கூட கிடைக்காமல் புலம்பிகொண்டார்கள் .

 வினோத திருட்டு!

                              நாங்கள் வண்டி நிறுத்தும் இடம் வந்த பொது ஒரு உண்மை  அப்போதுதான் தெரிந்தது .அங்கு நிறுத்த பட்டு இருந்த பல வாகனங்களில் பல  அற்புதமான செடிகள் பாலி பேக்குகள் வைத்து பலவிதமாக தொங்கிகொண்டு இருந்தன .இந்த வினோத திருட்டுதான் பல பேரை ஏமாற்றி விட்டது .சில பேர் போகும்போதே  ( வந்ததே இதர்க்காக என்பதாக  - விவரமாக முன் கூட்டியே !) நிறைய வாங்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள் .


             இப்படி திருட்டுக்கு சமமாக எத்தனைபேருக்கு போகவேண்டிய செடிகள் அந்த வண்டிகளில் தொங்கிகொண்டு இருக்கிறது ? அதில் நிறையபேரின் பெயர் இருப்பது போல மானசீகமாக எனக்கு பட்டது !!! .